"நம்பிக்கை கொண்டோரே!
இறையச்சத்தை அதன் எல்லா நிபந்தனைகளுடன் ஏற்றுக் கொள்க. நீங்கள் முழுமையாகக்
கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருக்கின்ற நிலையில் மட்டுமே,
உங்களுக்கு மரணம் வர வேண்டும்.
நீங்கள் யாவரும் ஒன்றுபட்டு அல்லாஹ்வின்
கயிற்றை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் பிரிந்து போய்
விடாதீர்கள். உங்கள் மீது (செய்து)ள்ள அல்லாஹ்வின் அருளை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் (ஒருவருக்கொருவர்) எதிரிகளாயிருந்தீர்கள். பின்னர் அவன் உங்கள்
உள்ளங்களில் நட்பை உண்டாக்கினான். எனவே நீங்கள் அவனுடைய அருளால்,
உடன் பிறப்புப் போல் ஆகிவிட்டீர்கள்." (திருக்குர்ஆன் 3:103,104)
இவ்விரு வசனங்களுள் முதல் வசனத்தில்
இரண்டு கட்டளைகள் கூறப்பட்டுள்ளன. இவ்விரண்டு கட்டளைகளுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு
கேள்வி எழுகின்றது. அதாவது இறையச்சத்தை அதன் எல்லா நிபந்தனைகளுடன் எவ்வாறு ஏற்றுக்
கொள்வது என்பது முதல் கேள்வி.
அடுத்து,
நீங்கள் முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருக்கின்ற நிலையில் மட்டுமே
உங்களுக்கு மரணம் வர வேண்டும் என்று இறைவன் கூறுகின்றான். மரணமடைவது நம்முடைய
அதிகாரத்திற்கு உட்பட்டது அன்று. நமக்கு எந்த நேரத்தில் மரணம் வரும் என்று நாம்
அறியாமலிருக்கும் போது, இந்தக் கட்டளைக்கு நம்மால் எவ்வாறு
கட்டுப்பட்டு நடக்க முடியும் என்பது இரண்டாவது கேள்வி.
இந்த வசனத்தில்,
இவ்வாறான கேள்விகளை எழுப்புகின்ற இந்த இரு கட்டளைகளுள் ஒன்று, மற்றொன்றிற்குப் பதிலாக அமைந்துள்ளது.
நீங்கள் இறையச்சத்தை மேற்கொள்ள
வேண்டியவாறு அதனை மேற்கொண்டால், நீங்கள் எப்போதும் உங்கள் உள்ளத்தின்
நிலைகளைக் கவனத்திற் கொண்டிருப்பீர்கள். இதனால் நீங்களே உங்களை எல்லா நேரத்திலும்
கட்டுப்பட்டு நடக்கும் நிலையில் வைத்திருப்பீர்கள்.
இங்கு நம்பிக்கைக் கொண்டவர்களுக்குக்
கட்டளை இடப்பட்டிருந்தால், இதில் வந்துள்ள "இல்லா வ அன்தும்
முஸ்லிமூன்" என்பது, நீங்கள் முஸ்லிம்களாக இருக்கின்ற
நிலையில் மட்டுமே உங்களுக்கு மரணம் வர வேண்டும் என்று பொருள்படாது.
எனினும் இறைவன் கூறுவதாவது,
நம்பிக்கைக் கொண்டவர்களே! நீங்கள் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களாக
இருக்கின்ற நிலையிலேயே உங்களுக்கு மரணம் வர வேண்டும், இந்த
நிலையைத் தவிர வேறெந்த நிலையிலும் உங்களுக்கு மரணம் வந்து விடக் கூடாது என்று நாம்
உங்களுக்கு கட்டளையிடுகின்றோம் என்று இறைவன் இங்குக் கூறுகின்றான்.
எனவே, இறைவனிடமே நம்மை
முழுமையாக ஒப்படைத்து, அவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு
நடப்பதே, முறைப்படி இறையச்சத்தை மேற்கொள்வதாகும்.
எவ்வாறு இறையச்சத்தை மேற்கொள்ள
வேண்டும் என்ற கேள்விக்கு பதில், நீங்கள் உங்களுடைய வாழ்வின் ஒவ்வொரு
வினாடியையும் கவனத்திற் கொண்டு, இந்தக் கட்டளையை
எத்தருணத்திலும் மீறாது இருக்க வேண்டும் என்பதாகும்.
அடுத்து நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு
செயலையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உண்மையை மனதிற்கொண்டு
அவனுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு நீங்கள் செயல்படுவீர்களேயானால்,
முறைப்படி இறையச்சத்தை மேற்கொள்பவர்கள் ஆவீர்கள். இதற்கு மற்றொரு பெயர் இஸ்லாம் -
அதாவது கட்டுப்பட்டு நடத்தல் என்பதாகும்.
எனவே இந்தச் சிறிய வசனம் இரு
கேள்விகளை எழுப்புகிறது. அடுத்து இதே வசனம் அந்த இரு கேள்விகளுக்கும் பதிலையும்
தருகின்றது. இதனை அடுத்து வரும் வசனம், இதற்கு மேலும் விளக்கம் தருகின்றது.
"நீங்கள் யாவரும் ஒன்றுபட்டு,
அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் தனித்தனியாக இல்லாமல்,
எல்லாரும் ஒன்றுபட்டு கூட்டாக அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாகப் பற்றிப் பிடிப்பது, உண்மையான இஸ்லாமாகும்.
இப்பொழுது "அல்லாஹ்வின்
கயிறு" என்றால் என்னவென்று பார்க்க வேண்டும். இது பற்றி திருக்குர்ஆனில்,
"அவர்கள் எங்கே காணப்பட்ட
போதிலும் அவர்களின் மீது இழிவு இறக்கப்பட்டுவிட்டது. அவர்கள் அல்லாஹ்வின் ஏதாவதொரு
உடன்படிக்கையின்) அல்லது மக்களின் ஏதாவதோர் உடன்படிக்கையின் பாதுகாப்பிற்குள்
வந்தாலன்றி (அந்த இழிவிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. (3:113) என்று இறைவன்
கூறுகின்றான்.
இந்த வசனத்தில் "ஹப்லும்
மினல்லாஹ்" என்றும் "ஹப்லும் மினன்னாஸ்" என்றும் வந்துள்ளது.
"ஹப்ல்" என்றால், உடன்படிக்கை என்று பொருள்படும் எனத்
திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் எல்லாரும் ஒன்றுபட்ட கருத்து கொண்டுள்ளார்கள்.
அதாவது அடியார்களைப் பாதுகாக்கும் இறைவனுடைய உடன்படிக்கையினால், சில சமயங்களில் சமுதாயங்கள் இழிவிலிருந்து காப்பாற்றப்படுகின்றன.
எனவே ஹப்ல் என்பதன் அடிப்படை பொருள்
உடன்படிக்கை என்பதாகும்.
திருக்குர்ஆனில் மற்றொரிடத்தில் நாம்
அவனுக்கு (அவனது) உயிர் நாடியை விட மிக அருகில் உள்ளோம் - என்று இறைவன் கூறுகின்றான். (51:17)
இதில் வந்துள்ள ஹப்லுல் வரீத் என்பது
மனதையும், அறிவையும் முழு உடலுடன் தொடர்பை ஏற்படுத்தி இணைக்கும் ஒரு
கயிறாகும். இந்தக் கயிறு அறுந்து விட்டால், உடலுடனுள்ள
மனதின் தொடர்பும் அறிவின் தொடர்பும் அறுந்து விடும். இதற்கு மற்றொரு பெயர் மரணம்.
எனவே, ஹப்ல் என்னும் சொல்
இரு பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1. உடன்படிக்கை, 2. தொடர்பை ஏற்படுத்தக்கூடியது.
எனவே, நீங்கள் யாவரும்
ஒன்றுபட்டு அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்
என்பதன் கருத்து, உங்கள் வாழ்விற்கு உத்தரவாதங்களாகிய
இறைவனுடனுள்ள உங்கள் தொடர்புகளை உறுதியானவைகளாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய
இந்த தொடர்புகள் அறுந்து விட்டால், அல்லது அவற்றிற்கு பங்கம்
ஏற்பட்டு விட்டால், அதே அளவிற்கு நீங்கள் வாழ்வை
இழந்தவர்களாகி விடுவீர்கள் என்பதாகும்.
'ஹப்ல்' என்ற சொல்லின்
மற்றொரு பொருளும் இங்குப் பொருத்தமாக அமைவது மட்டுமல்லாமல்,
முதல் பொருளுக்கு மேலும் விளக்கமாக அமைகிறது. உண்மையிலேயே திருக்குர்ஆன் நம்பிக்கை
கொண்டவர்கள் எல்லாரையும் ஓர் உடன்படிக்கையின் அடிப்படையில் நபிமார்களுடன், ஷரியத்துகளுடனும் இணைந்துள்ளது. மனிதன் தோன்றியதிலிருந்து இன்று வரைத்
தொடர்ந்து இறைவனுடைய இந்த உடன்படிக்கை சமுதாயங்களிடம் எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே ஷரியத்துகளுடைய நபியும் செயல்
ரீதியாக "ஹப்லுல்லாஹ்"-"அல்லாஹ்வின் கயிறாக"
ஆகிவிடுகின்றார்கள். அவருடைய ஷரியத்தும் செயல் ரீதியில் "ஹப்லுல்லாஹ்"
அல்லாஹ்வின் கயிறாக ஆகிவிடுகின்றது. ஏனென்றால், இறைவனால் செய்யபட்ட
உடன்படிக்கையின் மூலம், நம்பிக்கை கொண்டவர்கள் அந்த
நபியுடனும் அந்த ஷரியத்துடனும் இணைக்கப்பட்டவர்களாக ஆகிவிடுகின்றனர்.
ஷரியத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பதும் அவசியமாகி விடுகின்றது.
இப்போது இங்கு ஒரு கேள்வி எழுகிறது
ஆகாவது ஹப்லுல்லாஹ்-அல்லாஹ்வின் கயிறு என்பதற்கு இதுதான் பொருள் என்றால் ஏற்கனவே
ஒரு ஷரியத்துடைய நபி வந்து ஷரியத்தை வழங்கி சென்று விட்டார். அல்லாஹ்வின் கயிறாகிய
ஷரியத்துடைய அந்த நபியுடன் எனக்கு ஒரு தொடர்பு ஏற்பட்டு விட்டது. ஆத்மீகமான
பொருளில் நான் அவருடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை என்ற எனது பைஅத்தில் நான்
பற்றுள்ளவனாகவும் இருக்கின்றேன். அதில் நிலைத்தும் நிற்கின்றேன். இவ்வாறே அந்த
ஷரியத்துடனும் எனக்கு தொடர்பு உள்ளது. எனவே இப்பொழுது எனக்கு வேறெதுவும்
அவசியமில்லை. அதாவது என்னுடைய இஸ்லாம் முழுமையாகிவிட்டது. நான் ஷரியத்துடைய ஒரு
நபியை ஏற்றுக் கொண்டுள்ளேன். அவருடைய ஷரியத்திற்குக் கட்டுப்படுதல் என்ற தொடர்பை
ஏற்படுத்திக் கொண்டேன் என்று ஒவ்வொருவரும் கேட்கலாம்.
இவ்வாறான கேள்விக்குரிய பதிலை கீழ்
காணும் இந்த வசனமே தருகின்றது. அதாவது,
"நீங்கள் யாவரும் ஒன்றுபட்டு
அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்பதன்
கருத்து, நீங்கள் ஷரியத்துடன், ஷரியத்துடைய
நபியுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்பது மட்டுமல்ல மாறாக, நீங்கள் ஒன்றுபட்டு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்பதவுமாகும்.
இதற்கு மாறாக வெளிப்படையாக
பார்க்கும்போது தொடர்பு இருந்து, உங்களுக்குள் ஒற்றுமை இல்லாதிருந்தால், நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றிலிருந்து வெளியேறியவர்களாவீர்கள். எனவே, அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாகப் பற்றிப் பிடிப்பது மட்டும் போதாது; அவனுடைய கயிற்றை ஒன்றுபட்டு- கூட்டாகப் பற்றிப் பிடிப்பதும் அவசியமாகும்.
நீங்கள் உங்களுக்கிடையில்
ஒற்றுமையில்லாமல், பிரிந்திருந்தால்,
ஷரியத்துடனும், ஷரியத்துடைய நபியுடனும் நீங்கள் ஏற்படுத்திக்
கொண்டிருக்கும் தொடர்பு உங்களுக்கு எந்த பயனையும் அளிக்காது.
வெளிப்படையில் நீங்க ஷரியத்துடன்,
ஷரியத்துடைய நபியுடனும் தொடர்பு வைத்திருக்கலாம். ஆனால் உங்களுடைய செயல்களினாலும், உங்களுடைய சொற்களினாலும், சமுதாயத்தின் ஒற்றுமை
குலைந்து, நீங்கள் ஒருவரிடமிருந்து,
மற்றொருவர் பிரிந்து சென்றால் அல்லாஹ்வின் கயிற்றுடனுள்ள உங்கள் தொடர்பு, சரியான பொருளில் உள்ளதாகக் கணிக்கப்பட மாட்டாது. எனவே, நீங்கள் இறைவனிடத்தில் தண்டனைக்குரியவர்களாகவே இருப்பீர்கள்.
ஷரியத்துடைய ஒரு நபி மரணமடைந்த பிறகு,
நிலைத்திருக்கும் அந்த ஷரியத்துடன் மட்டும் தொடர்பு கொண்டிருப்பது போதுமானதன்று.
ஏனென்றால் ஒற்றுமைக்கு ஒரு தலைமை அவசியம். இதனை "கிலாஃபத்" எனும்
அமைப்பே வழங்குகிறது. கிலாஃபத்துடன் தொடர்பு முறிந்துவிடுமானால் சமுதாயம் பிளவு
பட்டுவிடும்.
ஒரு சமுதாயம் இரண்டாகவோ,
மூன்றாகவோ, நான்காகவோ, ஐந்தாகவோ
பிளவுபட்டு அவற்றுள் ஒன்று கூட கிலாஃபத்துடன் தொடர்பு இல்லாமலாகிவிடுமானால், திருக்குர்ஆனின் விளக்கத்திற்கேற்ப, அல்லாஹ்வுடைய
கயிற்றுடன் அவர்களுக்குரிய தொடர்பு அருந்துவிட்ட ஒன்றாகிவிடும்.
உண்மையிலேயே "கிலாஃபத்தைத்"
தவிர உலகின் வேறெந்த அமைப்பாலும் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது! சமுதாயத்தில்
எத்தனையோ பிரிவினர்களை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் கிலாஃபத்திற்குள் இருக்கும்
ஒற்றுமையை வேறெந்த பிரிவினரிடமும் உங்களால் காண இயலாது!!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னர்
ஏற்பட்ட கிலாஃபாத்தின் போது சமுதாயத்தில் ஒற்றுமை இருந்தது. ஆனால் அந்த கிலாஃபாத்திற்கு
பிறகு சமுதாயத்தில் பிளவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பிளவுகளாக அந்தச் சமுதாயத்தினர்
ஆகிவிட்டனர்.
எனவே ஷரியத்துடைய நபியுடனும் அந்த ஷரியத்துடனும்
தொடர்பு கொண்டிருப்பதே உண்மையான இஸ்லாமாகும்.
அந்த நபியுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின்
கருத்து அவருக்கு அருளப்பட்ட ஷரியத்துடன் மட்டும் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல, எனினும்
அந்த ஷரியத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்; அவருக்கும் கட்டுப்பட்டு
நடக்க வேண்டும் என்பதே அதன் கருத்தாகும்.
ஷரியத்தைக் கொண்டு வந்த ஒரு நபி மரணமடைந்த
பிறகு அவருடைய ஜமாஅத்து ஒரு கலீஃபாவின் கீழ் செயல்படாமலிருக்குமேயானால், அந்த
ஜமாஅத்து ஒரு போதும் ஒற்றுமை உள்ளதாக இருக்காது.
அவருடைய மரணத்திற்கு பிறகு ஒவ்வொருவரும்
தனிப்பட்ட முறையில்-"ஹப்லுல்லாஹ்" வாகிய அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்தாலே
போதும் என்ற கருத்தைத் திருக்குர்ஆன் ஏற்றுக் கொள்ளவில்லை.
நீங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு அல்லாஹ்வின்
கயிற்றை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்றே திருக்குர்ஆன் கூறுகிறது.
எனவே, நபித்துவத்திற்கு பிறகு கிலாஃபத் கட்டாயம் இருக்க வேண்டும். கிலாஃபத்தில்
ஒரு தடவை பிளவு ஏற்பட்டு விட்டால், பிறகு மீண்டும் நபித்துவத்தின்
மூலம்தான் கிலாஃபத் ஏற்பட முடியும். இந்த நபித்துவம் புதியதாக இல்லாமல் முதல் ஷரியத்தை
பின்பற்றிய நபித்துவமாக இருக்கலாம்.
"நீங்கள் நெருப்பு கிடங்கின் ஓரத்தில்
இருந்தீர்கள். பின்னர் அவன் உங்களை அதிலிருந்து காப்பாற்றினான்" என்ற தொடரின்
கருத்தாவது, பிரிவினையானது கட்டாயம் நெருப்பிற்குக் கொண்டு சென்று விடுகின்றது.
நெருப்பு என்றால், பொதுவாக நரக நெருப்பு என்று மக்கள் கருதுகின்றனர்.
ஆனால் திருக்குர்ஆனின் வழக்கில் நெருப்பு என்பது, பயங்கரமான போர்களையும்
குறிக்கும். இவ்வுலகில் போர்கள் நிகழ்வதை நாம் காண்கின்றோம். இதற்கு அடிப்படை காரணம், பிரிவினையேயாகும். இந்தப் பிரிவினை கடினமாகிவிட்டால், போர் என்ற நெருப்பில் அவர்கள் குதித்து விடுகின்றனர்.
எனவே இறைவன் கூறுகின்றான்; நீங்கள்
உண்மையிலேயே முஸ்லிம்களாகவும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு
நடப்பவர்களாகவும் அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாகப் பற்றிப் பிடிப்பவர்களாகவும் இருந்தால், நீங்கள் உங்களுக்குள் போர் செய்வதென்பது சாத்தியமில்லாததாகிவிடும். போர் என்ற
நெருப்பில் குதிப்பதும் சாத்தியமற்றதாகிவிடும். அல்லாஹ்வின் கயிற்றை நீங்கள் உறுதியாகப்
பற்றிப் பிடித்தால், அவன் உங்களை நெருப்புக் கிடங்கின் ஓரத்திலிருந்து
வெகு தொலைவில் கொண்டு சென்று விடுவான். எவர் அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாகப் பற்றிப்
பிடித்துக் கொண்டாரோ அவரை, உலகின் எந்த சக்தியாலும் நெருப்பில்
தள்ள முடியாது.
இந்த வசனத்தின் அடிப்படையில் பார்த்தால், ஈரானுக்கும்
ஈராக்கிற்கும் இடையில் எட்டு வருடங்களாக நடந்த போர் குறித்து, அவர்கள் நெருப்புக் கிடங்கின் ஓரத்தில் இருந்தார்கள் என்று நம்மால் சொல்ல
முடியாதா? அவர்கள் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றி பிடித்தார்கள்
என்று எவராவது சொல்ல முடியுமா? அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றுபட்டு
அதனைப் பிடித்திருந்தார்கள் என்று சொல்ல முடியுமா?
திருக்குர்ஆன் மிக ஆழமான உண்மைகளை எடுத்துரைக்கின்றது.
அவற்றை எவராலும் அலட்சியம் செய்ய இயலாது. திருக்குர்ஆனின் உண்மைகளை அலட்சியம் செய்பவர்களால், தீய
விளைவுகளிலிருந்து ஒருபோதும் தப்பிக்க இயலாது.
(23-11-90 அன்று ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல்
மஸீஹ் மிர்ஸா தாஹிர் அஹ்மத் (ரஹ்) அவர்கள் இலண்டனில் ஆற்றிய ஜுமுஆ பேருரையின் சுருக்கம்)
அல்லாஹ் இந்த முஸ்லிம் உம்மத்தை ஒரு சரடையில் கோர்க்கப்பட்டிருக்கும் முத்து மாலைகளைப் போன்று ஒன்றுப்படுத்துவானாக. மேலும் அல்லாஹ் இந்த உம்மத்திற்கு வழங்கியிருக்கும் கிலாஃபத் அருளை முஸ்லிம்கள் அறிந்து புரிந்து ஒன்றுபட்டு அல்லாஹ்வின் இந்த கயிற்றைப் பற்றிப் பிடிக்கும் நற்பாக்கியத்தை வழங்குவானாக. ஆமீன்.



கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None