ஹஸ்ரத் ஆயிஷாவின் (ரலி) திருமணத்தின்போது அன்னாரது வயது குறித்த விளக்கம்

ஹஸ்ரத் ஆயிஷாவின்  (ரலி) திருமணத்தின்போது  அன்னாரது வயது குறித்த விளக்கம்

இந்த புத்தகத்தின் முதல் தொகுதியில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது போல் ஹஸ்ரத் கதீஜா  (ரலி) அவர்களின் மறைவுக்கு பிறகு, புனித நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸ்ரத் ஆயிஷா ஸித்தீக்கா  (ரலி) அவர்களுடனான ஒரு திருமண பந்தத்தில் பிணைக்கப்பட்டார்கள். இது ஷவ்வால் மாதத்தில் நபவி பத்தாம் ஆண்டில் நடந்தது. (அதாவது அண்ணலாருக்கு நபிப்பட்டம் வழங்கப்பட்ட பின் 10ஆவது ஆண்டு). [அபூ உமர், தொகுதி 4 பக்கம் 436] அந்த நேரத்தில், ஹஸ்ரத் ‘ஆயிஷா  (ரலி) அவர்களின் வயது ஏழு ஆகும் [இப்னு ஹிஷாம் பக்கம் 891]. எனினும், அந்த நேரத்தில் கூட, அவர்களுடைய வளர்ச்சியும், அபிவிருத்தியும் குறிப்பிடத்தக்க வகையில் நன்றாக முதிர்ச்சியடைந்ததாகத் தெரிகிறது. இல்லையெனில், இந்த திருமணத்தை பரிந்துரைத்த கௌலா பின்த் ஹகிம்  (ரலி) அவர்களுக்கு அன்னாரை புனித நபியவர்களின் பொருத்தமான துணையாக கருத வேறு எந்த காரணமும் இல்லை.

எப்படியிருந்தாலும், அவர்கள் அதுவரை முழுமையாக முதிர்ச்சியடையவில்லை என்ற காரணத்திற்காக, நிக்காஹ் (திருமண அறிவிப்பு) நடந்தாலும், ருக்ஸத்தானா (திருமண உறவு) இன்னமும் நடக்கவில்லை. எனவே, உள்ளூர் வழக்கப்படி, ஹஸ்ரத் ஆயிஷா  (ரலி) அவர்கள் பெற்றோருடனேயே தொடர்ந்து வசித்து வந்தார்கள். இருப்பினும், இப்போது, ​​ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில், அவர்களது திருமணம் பற்றிய அறிவிப்புக்குப் பின், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் பன்னிரண்டு வயதில் முழுமையான முதிர்ச்சியடைந்து இருந்தார்கள். எனவே, (ஹஸ்ரத் ஆயிஷா  (ரலி) அவர்களின் தந்தையான) ஹஸ்ரத் அபூபக்கர்  (ரலி) அவர்களே நபி பெருமானாரை அணுகி, ருக்ஸத்தானா நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் [ஸர்க்கானி, தொகுதி 4 பக்கம் 383]. இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மஹர் (மணப்பெண்ணுக்கான பாதுகாப்பு தொகை) கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். (அந்தக் காலத்தில் அது ரொக்கமாக கொடுக்கப்பட வேண்டும் என்பது வழக்கமாக இருந்தது).

ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில் ஹஸ்ரத் ஆயிஷா  (ரலி) அவர்கள் தனது பெற்றோரின் வீட்டில் இருந்து விடைபெற்று, புனித நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

இன்றைய காலகட்டத்தில், அன்னாரது ருக்ஸத்தானாவின் நேரத்தில் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு என்ன வயது? என்ற கேள்வி

சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. பெரும்பாலான வரலாறு மற்றும் நபிமொழி தொகுப்புகளில், ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் வயது ஒன்பது அல்லது பத்து ஆண்டுகள் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸஹிஹ் புகாரியில் கூட அவர்களது ருக்ஸத்தானாவின் போது அவர்களுக்கு ஒன்பது வயது மட்டுமே என்று ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களே கூறக்கூடிய ஒரு அறிவிப்பு உள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில்தான் ஒன்பது வயது என்று பல வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். [அல் அய்னி, தொகுதி 17, பக்கம் 50]

எனினும், இதற்கு மாற்றாக, சில நவீன கால ஆராய்ச்சி அறிஞர்கள், பல்வேறு பகுப்பாய்வு முறைகள் மூலம் அன்னாருடைய வயது பதினான்கு அல்லது பதினாறாக கூட இருந்தது என்று நிறுவ முயற்சித்துள்ளனர். நாம் இந்த நவீன கால ஆராய்ச்சி அறிஞர்களின் கருத்துடன் உடன்படவில்லை என்றாலும், அன்னாருக்கு ஒன்பது வயது என்ற எண்ணமும் கூட பிழையானது என்பதை சூழ்நிலைகள் வெளிப்படுத்துகின்றன. மாறாக, நாம் மேலே குறிப்பிட்டது போல், அவர்களது ருக்ஸத்தானாவின் நேரத்தில், ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் முழுமையாக அல்லது கிட்டத்தட்ட பன்னிரண்டு வயதை அடைந்தவர்களாக இருந்தார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

உண்மையில், ஆரம்பகால அறிஞர்கள் முழுப் பிரச்சினையையும் தவறாக மதிப்பிட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள், ஆதாரப்பூர்வமான ஹதீஸில் பதிவு செய்யப்பட்டுள்ள, ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) வின் ஒன்பது ஆண்டுகள் என்னும் தோராயமான விஷயத்தை, முற்றிலும் நிச்சயமானதாக மற்றும் திட்டவட்டமானதாக கருதினார்கள். எனவே தங்கள் கவனத்தை வேறு எதன் பக்கமும் செலுத்தவில்லை. இருப்பினும், ஒரு அறிவிப்பு உண்மையானதாக இருப்பது என்பது வேறு, ஒரு தோராயமான விஷயம் சரியாக இருக்க வேண்டும் என்பது வேறு என்பதை எந்த ஒரு அறிவுள்ள நபரும் புரிந்து கொள்வார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் தனது ருக்ஸத்தானாவின் போது தனக்கு ஒன்பது வயது என்று கூறக்கூடிய அறிவிப்புகள், அறிவிப்பாக பார்க்கும் பொழுது நம்பத்தன்மையுடன் இருந்தாலும், ஹஸ்ரத் ஆயிஷாவின் (ரலி) இந்த மதிப்பீடே தன்னளவில் தவறானதாக இருக்கலாம்.  ஏனென்றால், பல சமயங்களில், தங்கள் சொந்த வயதைக் குறித்த மக்களின் மதிப்பீடுகள் தவறானவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. இதற்கு மாறாக, ஒன்பது ஆண்டுகள் என்ற எண்ணம் தவறு என்று கருத்தில் கொண்டு ஒரு சுதந்திரமான ஆய்வை மேற்கொள்ள முயற்சித்த அந்த மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் செய்த பிழை என்னவென்றால், ஆராய்ச்சிக்கான நேரான மற்றும் எளிமையான வழியைக் கைவிட்டு, அவர்கள் எந்த அளவிற்கு ஒரு சிக்கலான முறையை பயன்படுத்தியுள்ளனர் என்றால் அதனால் (அதை கேட்கின்ற) ஒரு நபரின் உள்ளம் திருப்தியடையாமல் இருந்து விடுகிறது.  ஹஸ்ரத் ஆயிஷாவின் (ரலி) பிறந்த தேதியை ஒரு கையிலும், அன்னாரது ருக்ஸத்தானாவின் தேதியை மறு கையிலும் வைத்து தீர்மானிப்பதே ஹஸ்ரத் ஆயிஷாவின் (ரலி) வயதை பகுத்தறியக்கூடிய மிகவும் சரியான மற்றும் எளிதான வழிமுறை என்பதை எந்த ஒரு அறிவார்ந்த நபரும் ஒப்புக்கொள்வார். இந்த இரண்டு தேதிகளின் விவரங்களையும் குறித்த பின், ருக்ஸத்தானாவின் போது அன்னாரது வயது குறித்த எந்த ஒரு நிச்சயமற்ற தன்மைக்கான அல்லது சந்தேகத்திற்கான இடமும் எஞ்சி இருக்கவில்லை. முதலில் நாம் அன்னாரின் (ஹஸ்ரத் ஆயிஷா (ரலி)) பிறப்பு பற்றிய கேள்வியை எடுத்துக்கொள்கிறோம். இப்னு ஸஅது அவர்கள் தபக்காத்தில் ஒரு அறிவிப்பைப் பதிவு செய்துள்ளார்கள்:

کَانَتْ عَئِشَۃُ وُلِدَتِ السَّنَۃَ الرَّابِعَۃَ مِنَ النُّبُوَّۃِ فِیْ اَوَّلِھَا

                கானத் ஆயிஷத்து வுலிதத்திஸ் ஸனத்தர் ராபிஅத்த மினன் நுபுவ்வத்தி ஃபீ அவ்வலிஹா  

               பொருள்: ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் 4 ஆவது நபவி ஆண்டின் ஆரம்பத்தில் பிறந்தார்கள் [தபக்காத், தொகுதி 8, பக்கம் 283]

[குறிப்பு: நபவி ஆண்டு என்பது நபி பெருமானார் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்கள் நபிப்பட்டம் பெற்ற பின் எத்தனை ஆண்டுக்குப் பிறகு என்பதை குறிக்கிறது .  ஹிஜ்ரி ஆண்டு என்பது அன்னார் மதீனாவிற்கு இடம் பெயர்ந்து சென்ற பிறகு எத்தனை ஆண்டு என்பதை சுட்டிக் காட்டுகிறது. ஆக பதின்மூன்று நபவி ஆண்டுகளுக்கு பிறகு அல்லது பதினான்காவது நபவி ஆண்டில் முதல் ஹிஜ்ரி ஆண்டு ஆரம்பிக்கின்றது - மொழிபெயர்ப்பாளர்]

ஹஸ்ரத் ஆயிஷாவின் (ரலி) பிறந்த தேதியைப் பொறுத்தவரை, இந்த அறிவிப்பைத் தவிர, ஆரம்பகால வரலாற்றாசிரியர்களின் எந்தவொரு புத்தகத்திலிருந்தும் வேறு எந்த குறிப்பான அறிவிப்பும் என் கண்ணில் படவில்லை. மேலும் வேறு எந்த ஹதீஸ் புத்தகத்திலும் எந்த விவரிப்பிலும் (இது குறித்து) சொல்லப்படவில்லை. எனவே, பிறந்த தேதி எளிதில் தீர்மானிக்கப்பட்டு விட்டது, அது 4வது நபவி ஆண்டின் ஆரம்பமாகும்.

இப்போது நாம் அன்னாரது ருக்ஸத்தானாவின் (திருமண உறவு) தேதி தொடர்பான இரண்டாவது கேள்வியை எடுத்துக்கொள்கிறோம்.

இது சம்பந்தமாக, சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு கருத்து வேறுபாடு அறிவிப்புகளில் உள்ளது. பல்வேறு அறிவிப்புகளில் பதிவு செய்யப்பட்ட தேதி; ஹிஜ்ரி முதல் ஆண்டு ஷவ்வால் மாதம் என்பதாகும். மற்றும் பிறவற்றில், ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் என்று உள்ளது. இருப்பினும், ஒருவர் சிந்தித்துப் பார்த்தால், பிந்தைய அறிவிப்பு மிகவும் சரியானது என்று நிரூபிக்கப்படுகிறது. ஹிஜ்ரி முதல் ஆண்டு ஷவ்வால் மாதம் என்று கூறக்கூடிய அறிவிப்பின் உண்மையான ஆதாரம் இப்னு ஸஅதிடம் இருந்து கிடைக்கிறது. அவர் அறிவிப்பாளர்களின் தொடர் மூலம் ஹஸ்ரத் ஆயிஷாவிடம் (ரலி) இருந்து இதனை அறிவிக்கிறார். [தபக்காத், தொகுதி 8, பக்கம் 271].

பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் இப்னு ஸஅதின் இந்த அறிவிப்பை அடிப்படையாக வைத்தே ருக்ஸத்தானாவின் தேதியை ஹிஜ்ரி முதலாம் ஆண்டு ஷவ்வால் என்று அறிவித்துள்ளார்கள். இருப்பினும், இப்னு ஸஅது தன்னளவில் நம்பகமானவராக இருந்தாலும், இந்த அறிவிப்பில், அதன் அறிவிப்பாளர்களில் வரிசையில் ஒரு அறிவிப்பாளர் ஆக வாகிதி உள்ளார், அவரைக் குறித்து அவர் நம்பத்தகாதவர் மற்றும் நம்பகமற்றவர் என்பதில் அறிஞர்கள் ஒருமித்த கருத்துடன் உள்ளனர் - உண்மையில், அவர் ஒரு பொய்யர் ஆவார். [இப்னு ஹஜர், தொகுதி 7, பக்கம் 366-368]. எனவே, ஒரு வரலாற்று நிகழ்வின் அடித்தளமாக வாகிதியின் இந்தக் அறிவிப்பை மட்டுமே வைக்க முடியாது, அதிலும் குறிப்பாக அது மற்ற அறிவிப்புகளுடன் முரண்படும் பட்சத்தில்.  [கஸ்த்தலானி, தொகுதி 2 பக்கம் 194, கஸ்த்தலானி, தொகுதி 4 பக்கம் 383, அல் அய்னி, தொகுதி 17 பக்கம் 51, தாரிக்குல் காமிஸ், தொகுதி 1 பக்கம் 357]

இதற்கு மாறாக, அல்லாமா நவவி, அல்லாமா ஐனி மற்றும் கஸ்த்தலானி மற்றும் பல்வேறு அறிஞர்களும் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் என்ற அறிவிப்பை உண்மையானதாகவும், முன்னுரிமைக்கு தகுதியானதாகவும் இருக்கிறது என்று அறிவித்துள்ளனர். அல்லாமா நவவியோ, இந்த (ருக்ஸத்தானாவின் தேதி ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் என்னும்) அறிவிப்போடு ஒப்பிடுகையில், ஹிஜ்ரி முதல் ஆண்டு ஷவ்வால் மாதம் என்னும் அறிவிப்பு பலவீனமானதும் புறக்கணிக்கப்படுவதற்கு தகுதியானதும் ஆகும் என மிகத் தெளிவாகவும், மிக அழுத்தமாகவும் எழுதியுள்ளார்கள் [ஸர்க்கானி, தொகுதி 4, பக்கம் 382-383]. எனவே, பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் ஹிஜ்ரி 1-ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் என்ற ஒரு அறிவிப்பை பின்பற்றியதனை அடிப்படையாக வைத்து மட்டுமே அதைவிட இன்னும் திடமான ஒரு கண்ணோட்டத்தை புறக்கணிக்க எந்த காரணமும் இல்லை. மேலும், உண்மையில், பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் வாகிதியின் இந்த அறிவிப்பிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளதற்கான காரணம், இது ஆதாரப்பூர்வமான ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்பது ஆண்டு மதிப்பீட்டுடன் அதிகம் இணக்கமாக இருப்பதால் மட்டுமே. எனவே, சிறந்த அறிஞரான ஸர்க்கானி, ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் என்னும் அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனெனில் இதனால் (அன்னை ஆயிஷாவின் (ரலி) அவர்களின் வயது) ஒன்பது ஆண்டுகளுக்கு மேல், ஆகிவிடும் என்று தெளிவாக எழுதுகிறார் [ஸர்க்கானி, தொகுதி 4, பக்கம் 382-383]. எனினும், (அன்னை ஆயிஷாவின் (ரலி)) வயது மற்றும் அது தொடர்பான அறிவிப்புகளைப் பற்றித்தான் விவாதித்து கொண்டு இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட அறிவிப்புதான் சரி என்று கருதுவது தவறாகும். மேலும், நாம் மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒன்பது ஆண்டு தோராயமானது தவறானது என்று நாம் கருதுவதாலேயே இதைக் கூறும் அறிவிப்புகள் உள்ளபடியே தவறானவை என்று அர்த்தம் கொள்ள தேவை இல்லை. பிறகு இன்னொரு இடத்தில், அல்லாமா ஸர்க்கானி அவர்களே ஹிஜ்ரி 2ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் என்ற அறிவிப்பிற்கு முதலிடம் கொடுத்திருப்பது விந்தையானது [ஸர்க்கானி, தொகுதி 2, பக்கம் 357-358, தொகுதி 4, பக்கம் 333].   இந்த சூழ்நிலைகளில், ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் என்னும் அறிவிப்புடன் ஒப்பிடுகையில் ஹிஜ்ரி முதலாம் ஆண்டு ஷவ்வால் மாதம் என்பதை ஏற்றுக்கொள்ளத் தகுதியானதாகக் கருத முடியாது.  ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ஷவ்வாலில் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் ருக்ஸத்தானா நடந்தது என்பதுவே உண்மையானதாகத் தோன்றுகிறது .

இப்போது, ​​ருக்ஸத்தானாவின் தேதியும், பிறந்த தேதியும் தீர்மானிக்கப்பட்டு விட்டதனால் வயதைக் பகுத்தறிவது கடினமான விஷயம் அல்ல. இது ஒரு குழந்தையும் கூட கணக்கிடக்கூடிய ஒரு அடிப்படையான கணிதத்தின் கேள்வியாக இருக்கிறது ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் 4-ஆவது நபவி ஆண்டின் தொடக்கத்தில் பிறந்தார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் (மதீனாவிற்கு இடம்பெயர்தல்) 14ஆம் நபவி ஆண்டில் ரபீஉல் அவ்வல் மாதத்தில் நடந்தது. [தபரீ, தொகுதி 3, பக்கம் 5, கமீஸ், தொகுதி 1, பக்கம் 322]. இவ்வகையில், ஹிஜ்ரத் வரையில் ஹஸ்ரத் ஆயிஷாவின் (ரலி) வயது பத்து வருடங்களும், மேலும் சில மாதங்களும் என்பது நிரூபிக்கப்படுகிறது. ஹிஜ்ரி 1-ஆம் ஆண்டு ரபீஉல் அவ்வலில் நடைபெற்ற ஹிஜ்ரத்திற்கு பிறகு, ஹஸ்ரத் ஆயிஷாவின் (ரலி) ருக்ஸத்தானா நடந்த ஹிஜ்ரி இரண்டு ஷவ்வால் மதம் வரை, இரண்டு வருடங்களுக்கும் சற்று குறைவான ஒரு காலம் உள்ளது.  இந்த இரண்டு காலங்களையும் கூட்டுவதன் மூலம் நமக்கு பன்னிரண்டு ஆண்டுகள் என்னும் அதே முடிவே கிடைக்கின்றது. நாம் மிகச்சரியாக ஆரம்பத்தில் சொன்னதும் இதுவேதான். இப்னு ஸஅதின் கூற்றுப்படி, ஹிஜ்ரி முதல் ஆண்டில் ருக்ஸத்தானா நடந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அப்பொழுதும் கூட இந்த கால அளவு பதினொரு வருடங்களுக்கு சமமாக இருக்கிறதே தவிர அது ஒன்பது அல்லது பத்து வருடங்கள் அல்ல. இது ஒரு கணித கணக்கீடாகும், இத்துடன் ஒப்பிடும்பொழுது எந்த தோராயமான யூகத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இப்போது எஞ்சியிருக்கும் கேள்வி என்னவென்றால், ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் தன்னுடைய வயது ஒன்பது ஆண்டுகள் என்று பல ஹதீஸ்களில் ஏன் கூறியுள்ளார்கள்?  என்பதுதான்.

இதற்கான பதில், இந்த அறிவிப்புகளை நாங்கள் பொய் என்று முத்திரை குத்தவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அன்னாரது ருக்ஸத்தானா நிகழ்ச்சியின்போது அவர்களுக்கு ஒன்பது வயது என்ற ஹஸ்ரத் ஆயிஷாவின் (ரலி) அவர்களின் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எவ்வாறாயினும், எப்போதும் (அவர்களின்) இந்த பார்வை ஒரு மதிப்பீடாகவே இருந்ததேயொழிய திட்டவட்டமாக இருந்ததில்லை. இது ஒன்றும் விசித்திரமானதல்ல, ஏனென்றால் சில நேரங்களில், வயதைக் கணக்கிடுவதில் மக்கள் தவறு செய்யலாம் என்பதை எந்தவொரு தனிமனிதனும் புரிந்து கொள்ள முடியும். எனவே, ருக்ஸத்தானாவின் தேதி மற்றும் பிறந்த தேதியிலிருந்து பெறப்பட்ட கணிதக் கணக்கீடு மூலம் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) வின் வயது ஒன்பது வருடங்கள் என்பதை நிரூபிக்க முடியாவிட்டால், பிறகு அன்னாரது ருக்ஸத்தானாவின் பொழுது அன்னாருக்கு ஒன்பது வயது என்ற ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) வின் உத்தேச மதிப்பீட்டை வைத்து மட்டுமே ஒன்பது வருடங்கள் என்ற அறிவிப்பை ஏற்றுக் கொள்ளமுடியாது. இருப்பினும், ஒரு உண்மையான ஹதீஸில் ஹஸ்ரத் ஆயிஷாவின் (ரலி) பிறந்த தேதி 4 நபவி ஆண்டின் தொடக்கத்தைத் தவிர வேறு ஒன்றாக அறிவிக்கப்பட்டிருந்தால் அல்லது அன்னாரது ருக்ஸத்தானாவின் தேதி ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் அல்லாத வேறு ஏதோவொன்றாக நிறுவப்பட்டிருந்தால், பிறகு, இந்த அறிவிப்புகள் ஏற்றுக்கொள்ளத் தகுதியானவை என்பதில் சந்தேகமில்லை. மேலும் ஹஸ்ரத் ஆயிஷாவின் (ரலி) வயதும் இந்த (ஒன்பது ஆண்டுகள் என்ற) அடிப்படையிலேயே கணக்கிடப்படலாம்.  இருப்பினும், ஒரு மதிப்பீடு அல்லது எண்ணத்தின் அடிப்படையில் மட்டுமே, அது ஓர் உண்மையான ஹதீஸில் தெரிவிக்கப் பட்டிருந்தாலும் கூட, ஒரு கணித ரீதியான முடிவை நிராகரிக்கவே முடியாது.

இது இந்த நேரத்தில் நாம் முன்வைத்துள்ள ஒரு அடிப்படை விவாதம் ஆகும். இருப்பினும், உண்மை என்னவென்றால், (ஒன்பது வயது என்னும்) இந்த மதிப்பீடுகள் அடங்கியுள்ள அறிவிப்புகள் முழுமையாக பகுப்பாய்வு செய்யப்படும்பொழுதும் கூட, இறுதியில் கிடைக்கக் கூடிய முடிவு நாம் மேலே குறிப்பிட்டதைப் போன்றதே ஆகும் என்று நிரூபிக்கப்படுகிறது. அதாவது, அன்னாருடைய ருக்ஸத்தானாவின் நேரத்தில், ஹஸ்ரத் ஆயிஷாவின் (ரலி) வயது ஒன்பது அல்ல, அது பன்னிரண்டு ஆகும் என்பதாகும். இதைப் புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால், உண்மையில், ஹஸ்ரத் ‘ஆயிஷா (ரலி) அவர்கள் ருக்ஸத்தானாவின் (மறுவீட்டிற்கு செல்லும்) போது அன்னாரது தோராயமான வயது என்ன என்பதனை மட்டும் கூறவில்லை, மாறாக, அன்னாரது நிக்காஹ்வின் (திருமண அறிவிப்பின்) நேரத்தில் அன்னாரது உத்தேசமான வயது என்ன என்பதனையும் இதனுடன் சேர்த்து அறிவித்துள்ளார்கள் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த இரண்டு மதிப்பீடுகளும் நபிமொழி மற்றும் வரலாற்றின் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறாக, அன்னாரது நிக்காஹ்வின் நேரத்தில் அவர்களுக்கு ஆறு வயது அல்லது ஏழு வயது, மேலும் ருக்ஸத்தானாவின் போது அன்னாரது வயது ஒன்பது வயது என்ற ஹஸ்ரத் ஆயிஷாவின் (ரலி) வாக்கு மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது. சில அறிவிப்புகளில் ருக்ஸத்தானாவின் போது அன்னாரது வயது பத்து வருடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது அடிப்படைக் கோட்பாட்டின்படி, இந்த இரண்டு மதிப்பீடுகளில், இருந்தும் முதல் மதிப்பீட்டை, அதாவது அன்னாருடைய நிக்காஹ்வின் காலத்தை மிகவும் சரியானது என்று நாம் கருத்தில் கொள்ள வேண்டும். காரணம் இந்த மதிப்பீடு இளைய வயதுடன் தொடர்புடையது மேலும் (6 மற்றும் 9 ஆகிய) இரண்டு வயதுகளையும் ஒப்பிட்டு பார்க்கும்போது இளைய வயது (ஆறு வயது) தொடர்பான மதிப்பீட்டில் ஒரு பிழை உள்ளதற்கான வாய்ப்பு குறைவே. இரண்டாவதாக, இதுவே முதல் மதிப்பீடாக இருப்பதால், இதனையே உண்மையானதாக கருத வேண்டும் மேலும் அடுத்தடுத்த வயதுகளுடன் தொடர்புடைய மதிப்பீடுகளை, இந்த (முதல்) மதிப்பீட்டை சார்ந்ததாகவே கருதவேண்டுமே தவிர அவற்றை சுதந்திரமானதாக கருதக்கூடாது. எனவே, இந்த மதிப்பீடுகள் குறித்த விவாதத்தில், நிக்காஹ்வின் நேரத்தில் என்ன வயது என்பது தொடர்பான முதல் மதிப்பீட்டின் மீதே உண்மையான அடித்தளம் அமைக்கப்பட வேண்டும். அதில் ஆறு அல்லது ஏழு வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இப்போது வயதைக் கண்டறிவதற்காக நாம் கணிதக் கணக்கீட்டைச் செய்யும்போது ருக்ஸத்தானாவின் போது அதே பன்னிரண்டு வயதுதான் நிலைநாட்டப்படுகிறதே தவிர ஒன்பது அல்லது பத்து வருடங்கள் அல்ல . இருப்பினும், இந்த கணித கணக்கீட்டை வழங்குவதற்கு முன், ஆறு ஆண்டுகளுக்கும் ஏழு ஆண்டுகளுக்கும் இடையிலான பரஸ்பர முரண்பாட்டை சரிசெய்ய வேண்டியது அவசியம் ஆகும். மேலே குறிப்பிட்டபடி, பல்வேறு அறிவிப்புகளில், திருமணத்தின் போது வயது ஆறு ஆண்டுகள் என பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற அறிவிப்புகளிலோ ஏழு ஆண்டுகள் என்ற மதிப்பீடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகையான அறிவிப்புகளும் ஹதீஸ் புத்தகங்களிலும் சரித்திரப் புத்தகங்களிலும் காணப்படுகின்றன. ஏழு ஆண்டுகள் என்னும் அறிவிப்பு குறிப்பாக ஸஹீஹ் முஸ்லிம் மற்றும் நஸயீ, இப்னு ஹிஷாம், இப்னு ஸஅத் மற்றும் தபரீயில் கூறப்பட்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, ஆறு ஆண்டுகளின் அறிவிப்பு, ஸீரத் இப்னு ஹிஷாம் தவிர, இந்தப் புத்தகங்கள் அனைத்திலும் கூறப்பட்டுள்ளது, மற்றும் கூடுதலாக, புகாரியிலும் ஆறு வருடங்கள் பற்றிய விவரம் கூறப்பட்டுள்ளது. இப்போது நாம் இரண்டு வகையான அறிவிப்புகளிலும் எந்த அறிவிப்புகள் முன்னுரிமை பெற தகுதியானவை என்பதை பார்க்க வேண்டும்.

ஹதீஸ் கலையின் சிறிதளவு அறிவை கூட பெற்றிருக்கும் எந்தவொரு நபரும், நம்பகத்தன்மையை மட்டும் வைத்து பார்க்கும்பொழுது, இரண்டு வகையான அறிவிப்புகளும் முற்றிலும் உண்மையானவை மற்றும் நம்பகமானவை, மேலும் ஒன்று தவறானது எனக் கருதி, அவற்றில் ஒன்றை நாம் நிராகரிக்கவே முடியாது என்பதனை ஒப்புக் கொள்வார். அப்படி பார்த்தால், ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களே இந்த இரண்டு வெவ்வேறு மதிப்பீடுகளையும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சில நேரங்களில் அன்னார் தனது வயதை ஆறு வயது என்றும் சில சமயங்களில் ஏழு வயது என்றும் கூறியுள்ளார்கள்; சில நேரங்களில் அன்னார் தனது திருமணத்தின் போது தனக்கு ஆறு அல்லது ஏழு வயது இருக்கும் என்று இரு மதிப்பீடுகளையும் கலந்து கூறியுள்ளார்கள். எனவே, எதுவாக இருந்தாலும் ரிவாயத்தின் (அறிவிப்பின்) அடிப்படையில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், திராயத்தின் (ஹதீஸின் கருத்தின்) அடிப்படையில், ஒருவர் சிந்தித்துப் பார்த்தால் ஏழு ஆண்டுகள் என்ற மதிப்பீட்டிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

ஒரு பொதுவான நடைமுறை என்னவென்றால், ஒரு நபரின் ஒரு வயதின் ஆண்டு முழுவதுமாக கடந்துவிடும் வரை, அதற்கு கீழே உள்ள ஆண்டு எப்போதும் குறிப்பிடப்படுகிறது. மேலும் அடுத்த (வயதின்) ஆண்டு முடிவடைய மீதமுள்ள காலம் புறக்கணிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முழுவதுமாக முடிந்தவுடன் அல்லது முடிவதற்கு மிக அருகில் இருக்கும் போது மட்டுமே நடைமுறையில் அது முழுமையாக முடிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. எனவே, ஹஸ்ரத் ஆயிஷாவின் (ரலி) வயதைப் பொறுத்தமட்டில், ஆறு வருடங்கள் என்று சில அறிவிப்புகளிலும், ஏழு ஆண்டுகள் என்று மற்றவற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளது, அன்னாரது நிக்காஹ்வின் பொழுது, ஹஸ்ரத் ஆயிஷாவின் (ரலி) அவரகளின் வயது ஆறு வருடங்களைக் கடந்து ஏழு வயதிற்கு மிக அருகில் எட்டியிருந்தது என்பதனை திட்டவட்டமாக நிரூபிக்கிறது. எனவே பொதுவான பேச்சுவழக்கு அன்னாடைய வயதை விவரிக்க ஏழு ஆண்டுகள் என்பதனை பயன்படுத்த அனுமதித்தது. ஏழு வயதை அடைய அவ்வளவு முக்கியமற்ற மிக குறைந்த காலமே எஞ்சியிருந்ததால், அன்னார் தன்னைக் குறித்து ஆறு வயது என்றும், இல்லையெனில், அன்னாருக்கு நடைமுறையில் ஏழு வயது என்றும் கூறுவார்கள். எனவே, இதனை கருத்தில் கொண்டுதான் சில வரலாற்றாசிரியர்கள் ஆறு ஆண்டுகள் என்ற குறிப்பை முற்றாகக் கைவிட்டு ஏழு ஆண்டுகள் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள். உதாரணத்திற்கு, இப்னு ஹிஷாம் ஆறு வருடங்களைக் குறிப்பிடவே இல்லை. மேலும் ஏழு ஆண்டுகள் மதிப்பீடை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். இதற்கு மாறாக, ஆறு ஆண்டு மதிப்பீட்டை மட்டுமே குறிப்பிடுகின்ற எந்த ஒரு ஆதாரப்பூர்வமான வரலாற்று புத்தகத்தையும் நான் காணவில்லை. மேலும், ஸீரத்தே ஹலபிய்யாவின் ஆசிரியர், ஹஸ்ரத் நபிகள் நாயகத்தின் (ஸல்) மனைவிகளைப் பற்றி எங்கே குறிப்பிட்டுள்ளாரோ அங்கே ஹஸ்ரத் ஆயிஷாவின் (ரலி) வயது ஏழு ஆண்டுகள் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார். ஆறு ஆண்டுகள் என்று குறிப்பிடவே இல்லை [ஸீரத்துல் ஹலபிய்யாஹ், தொகுதி 3, பக்கம் 440]. ஹஸ்ரத் ஆயிஷாவின் (ரலி) நிக்காஹ்வைக் குறிப்பிடுகையில், இரண்டு வயதுகளும் கூறப்பட்டுள்ளன, ஆனால் ஏழு ஆண்டுகள் என்பதே மிகவும் சரியானது என்று அவர் தெளிவாக எழுதியுள்ளார். [ஸீரத்துல் ஹலபிய்யாஹ், தொகுதி 1, பக்கம் 491].  இந்த சூழ்நிலைகளில், ரிவாயத்தின் அடிப்படையில் இரண்டு வகையான அறிவிப்புகளும் சரியானவை என்றாலும், திராயத்தின் அடிப்படையில், அன்னாரது நிக்காஹ்வின் நேரத்தில், அவர்களது வயது ஏழு ஆண்டுகள் என்பதற்கு மிக அருகில் இருந்தது, எனவே அன்னார் ஏழு வயதினராக இருந்தனர் என்பதில் சந்தேகத்திற்கோ அல்லது நிச்சயமற்ற தன்மைக்கோ இடமே இல்லை.

இப்போது அன்னாரது நிக்காஹ்வில் (திருமண அறிவிப்பில்), ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் ஏழு வயதினராக இருந்தார்கள் என்பது நிரூபணமாகியிருப்பதால், (ருக்ஸத்தானா குறித்த) அடுத்த கணக்கீடு கடினமான ஒன்றல்ல. நபவி 10-ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் ஹஸ்ரத் ஆயிஷாவின் (ரலி) திருமண அறிவிப்பு நடந்தது என்று ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது [தபக்காத், தொகுதி 8, பக்கம் 271]. மேலும் இதுவே பெரும்பாலான வரலாற்றாசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேதியாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நபவி பத்தாம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில், ஹஸ்ரத் ஆயிஷாவுக்கு (ரலி) ஏழு அல்லது அதற்கு மிக அருகிலான வயது இருந்தது. இதற்குப் பிறகு, நபவி 14ஆம் ஆண்டு ரபீஉல்-அவ்வல் மாதத்தில் ஹிஜ்ரத் (மதீனாவிற்கு இடம்பெயர்தல்) நடந்தது [தபரீ, தொகுதி 3, பக்கம் 5].  இந்த வகையில், திருமண அறிவிப்பிற்கும் ஹிஜ்ரத்திற்கும் இடையிலான காலம் மூன்று ஆண்டுகள் மற்றும் சில மாதங்களுக்கு சமமாகிறது. மேலும் ஹிஜ்ரத்தின் நேரத்தில், ஹஸ்ரத் ஆயிஷாவின் (ரலி) வயது பத்து ஆண்டுகள் மற்றும் சில மாதங்கள் என நிறுவப்படுகிறது.

இதற்குப் பிறகு, நாம் இப்போது ஹிஜ்ரத்திற்கும் ருக்ஸத்தானாவுக்கும் இடைப்பட்ட காலத்தைக் கண்டறிவோம். அப்படி பார்த்தால், ரபீஉல் அவ்வல் மாதம் ஹிஜ்ரத் நடந்ததாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த காரணத்திற்காக, ஹிஜ்ரத்திற்கு பிறகு முதல் வருடம் ஒன்பதரை மாதங்களைக் கொண்டதாக இருக்கிறது. பிறகு, ஹிஜ்ரி 2ஆம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில் ருக்ஸத்தானா நடந்ததால், இரண்டாம் ஆண்டும் (ருக்ஸத்தானா வரை) ஒன்பதரை மாதங்களை கொண்டதாக இருக்கிறது. இந்த இரண்டு காலகட்டங்களையும் சேர்த்தால், ஹிஜ்ரத்திற்கும் ருக்ஸத்தானாவுக்கும் இடையிலான காலம் பத்தொன்பது மாதங்களுக்கு சமம் ஆகிறது. அதாவது, ஒரு வருடம் ஏழு மாதங்கள். இதனை ஹிஜ்ரத்திற்கு முந்தைய கால அளவுடன் (நிக்காஹ்விற்கும் ஹிஜ்ரத்திற்கும் இடைப்பட்ட காலம்) கூட்டினால், நாம் மற்றொரு கோணத்தில் இருந்து. நிரூபித்த அதே பன்னிரண்டு வருடங்களே கூட்டுத்தொகையாக கிடைக்கின்றது. சுருக்கமாக, ஹஸ்ரத் ஆயிஷாவின் (ரலி) மதிப்பீட்டின்படி நாம் கணக்கீடு செய்தாலும் அல்லது அன்னாருடைய பிறந்த தேதியின் அடிப்படையில் நாம் கணக்கீடு செய்தாலும் இரண்டிலும் முடிவு ஒன்றாகவே இருக்கிறது. அதாவது அன்னாருடைய ருக்ஸத்தானாவின் நேரத்தில் ஹஸ்ரத் ஆயிஷாவுக்கு (ரலி) பன்னிரண்டு வயதுதானே தவிர, ஒன்பது வயது அல்ல. ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் (ஏழு வயதிற்கான) அடுத்த ஆண்டு தொடங்கும் வரை உள்ள மீதமுள்ள மாதங்களை கண்டு கொள்ளாமல் தன்னுடடைய வயது ஆறு என மதிப்பிட்ட பொழுது, அதன் பிறகு (ருக்ஸத்தானா வரை) உள்ள இடைப்பட்ட காலத்தை தனது கணக்கீட்டில் எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டார்கள். மேலும் ஒருவேளை ருக்ஸத்தானாவின் நேரத்தில் தனது வயது ஒன்பதாக இருக்கலாம் என்று தோராயமாக மதிப்பிட்டு விட்டார்கள் என்று தோன்றுகிறது. எனவே, இந்த எண்ணம் அன்னாரது உள்ளத்தில் ஆழமாக வேரூன்றி விட்டது.  கூடுதலாக, அதுவரை, ஒரு நாட்காட்டி முறை இன்னமும் வழக்கமாக்க படவில்லை. மேலும் ஹிஜ்ரி நாட்காட்டி முறை இன்னமும் அதிகாரப்பூர்வமாக வகுக்கப்படவோ, உருவாக்கப்படவோ இல்லை. மேலும், திருமணத்திற்கும் ருக்ஸத்தானாவிற்கும் இடைப்பட்ட காலம் இரண்டு வெவ்வேறு வகை (அதாவது நபவி மற்றும் ஹிஜ்ரி) ஆண்டுகளில் பரவி உள்ளது. எனவே, ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு மேலோட்டமான பார்வை மூலம் கணக்கீட்டில் ஒரு வேளை தவறு செய்திருக்கலாம் என்பது நம்பத்தகுந்த விஷயமே ஆகும். பின்னர் இந்த தவறான கருத்து அன்னாரது உள்ளத்தில் மிகவும் ஆழமாக வேரூன்றி விட்டதால், அதற்கு பிறகு, அவர்களுடைய மீதமுள்ள வாழ்நாளில், அவர்கள் ஒருபோதும் இந்த தவறான கணக்கை கவனிக்கவேயில்லை. இருப்பினும், எப்படி பார்த்தாலும், அன்னாருடைய நிக்காஹ் நடந்தபோது ஹஸ்ரத் ஆயிஷாவுக்கு (ரலி) ஏழு வயது அல்லது அதனை நெருங்கிய வயது இருந்தது என்பது சரியானதாக இருந்தால், அன்னாருடைய ருக்ஸத்தானாவின் நேரத்தில் அவர்களுக்கு ஒன்பது வயது இருக்கும் என்ற மதிப்பீடு எந்த வகையிலும் சரியாக இருக்க முடியாது. இது ஒரு கணிதத்தின் கேள்வி ஆகும். இதனை வேறு எந்த வாதத்தாலும் தவறு என்று நிரூபிக்கவே முடியாது. 

ஆக, இந்தப் பிரச்சினை எந்தக் கோணத்தில் இருந்து பகுப்பாய்வு செய்யப்பட்டாலும், ருக்ஸத்தானாவின் போது, ஹஸ்ரத் ஆயிஷாவின்  (ரலி) வயது பன்னிரண்டு அல்லது அதற்கு அருகில் இருந்தது என்பது நிரூபிக்கப்படுகின்றது. மேலும், அன்னாரது ருக்ஸத்தானாவின் தேதி ஹிஜ்ரி முதலாம் ஆண்டு ஷவ்வால் மாதம் என்று அறிவிக்கப்பட்டாலும் கூட, அப்பொழுதும் அன்னாரது வயது பதினோரு ஆண்டுகள் என நிறுவப்பட்டுள்ளது.  எனவே ஒன்பது ஆண்டுகள் என்னும் தோராயமானது தவறானதும் துல்லியமற்றதும் ஆகும்.

இருப்பினும், ஒரு அனுமானமாக, ஒன்பது வயது என ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் கூட, அதில் ஆட்சேபனைக்கான எந்தப் விஷயமும் இல்லை, ஏனென்றால் அரேபியா போன்ற ஒரு நாட்டில் ஒரு பெண் ஒன்பது அல்லது பத்து வயதில் முதிர்ச்சியடைவது என்பது அசாதாரணமானது இல்லை. நம் சொந்த நாடான இந்தியாவில் கூட, அசாதாரணமான வளர்ச்சியின் திறன்களை கொண்ட சில பெண்கள் பத்து வயதிலேயே பருவமடைந்து விடுகிறார்கள். உண்மையில், பூப்பெய்தும் வயது என்பது முதன்மையாக வானிலை மற்றும் சீதோஷண நிலை, உணவு மற்றும் சுற்றுச்சூழலைப் பொறுத்ததாக உள்ளது. குளிர் நாடுகளில், குறிப்பாக வாசனைப் பொருட்கள் குறைந்த அளவில் உணவுகளில் பயன்படுத்தப்படுகின்ற நாடுகளில், பெண்கள் பொதுவாக தாமதமாக முதிர்ச்சியடைகின்றனர்.

எனவே, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளில், சராசரியாக, பூப்பெய்தும் வயது பதினெட்டு வயது ஆகும். மேலும் பெண்கள் பொதுவாக இருபது வயதில் திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள்; மாறாக, பல சந்தர்ப்பங்களில், இதைவிட இன்னும் அதிக வயதில் திருமணம் நடக்கின்றது. ஆனால், நம் நாட்டில், (1929-இல் எழுதப்பட்டது) இருபது வயதில் ஒரு பெண் இன்னும் திருமணமாகாமல் அமர்ந்திருந்தால், அவளிடம் ஏதோ ஒரு குறை இருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டி, இதனால் தான் அவளுக்கு இன்னும் ஒரு மணப்பொருத்தத்தை தேடிப் கண்டுபிடிக்க முடியவில்லை என்று மக்கள் பொதுவாக குறை கூறத் தொடங்குவார்கள். அதற்கு காரணம், இங்கே பருவமெய்தும் வயது சராசரியாக பதின்மூன்று முதல் பதினான்கு ஆண்டுகள் ஆகும்.

இந்தியாவை விட அதிக வெப்பமாகவும் வறண்டதாகவும் உள்ள அரேபியாவில், பருவமெய்துதலின் சராசரி வயது இந்தியாவை விட குறைவானதாக உள்ளது. மேலும் ஒன்பது அல்லது பத்து வயதில் முதிர்ச்சியடையக்கூடிய பல பெண்களை அங்கு காணலாம். இந்தச் சூழ்நிலைகளில், ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் ஒன்பது அல்லது பத்து வயதில் முதிர்ச்சியடைவதையும், அன்னாரது ருக்ஸத்தானாவுக்கு தகுதியானவராக ஆவதையும் விசித்திரமாக கருதவே முடியாது.  அதிலும் குறிப்பாக, சர் வில்லியம் மூர் தனது புத்தகத்தில் [தி லைஃப் ஆஃப் மஹோமெட், பக்கம் 117, 187] ஏற்றுக்கொண்டுள்ள படி, ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் சராசரியை விட அதிகமான வளர்ச்சியின் திறன்களைக் கொண்டிருந்தார்கள் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இது விசித்திரமான ஒன்றே அல்ல.

 

கால அட்டவணை (மொழிபெயர்ப்பாளர்)

நபவி 4 ஆரம்பம் – ஹஸ்ரத் ஆயிஷாவின் (ரலி) பிறப்பு

நபவி 10 ஷவ்வால் மாதம் - ஹஸ்ரத் ஆயிஷாவின் (ரலி) நிக்காஹ் என்னும் திருமண அறிவிப்பு (வயது 7 ஆண்டுகள்)

நபவி 14 ரபீயுல் அவ்வல் மாதம் – ஹஸ்ரத் நபிபெருமானாரின் (ஸல்) ஹிஜ்ரத் (வயது 10 ஆண்டுகள், சில மாதங்கள்)

ஹிஜ்ரி 2 ஷவ்வால் மாதம் – ருக்ஸத்தானா – மறுவீடு செல்லுதல் (வயது 12 ஆண்டுகள்)

வரலாற்று ஆதார நூல்கள்:

அபூ உமர் – அல் இஸ்த்திஆபு ஃபீ மஃரிஃபத்தில் அஸ்ஹாப் – ஆசிரியர் அபூ உமர் யூஸுஃப் பின் அப்தில்லாஹ் பின் முஹம்மது, பெய்ரூத், லெபனான் (2002)

இப்னு ஹிஷாம் – அஸ் ஸீரத்துன் நபவிய்யாஹ், ஆசிரியர் அபூ முஹம்மது அப்துல் மாலிக் பின் ஹிஷாம், தாருல் குத்பில் இல்மிய்யாஹ், பெய்ரூத், லெபனான், முதல் பதிப்பு (2001)

ஸர்க்கானி – ஷர்ஹுல் அல்லாமத்திஸ் ஸர்க்கானி அலல் மவாஹிபில் லதுன்யாஹ், ஆசிரியர் அல்லாமா ஷிஹாபுத்தீன் கஸ்த்தலானி, பெய்ரூத், லெபனான், முதல் பதிப்பு (1996)

அல் அய்னி – உம்தத்துல் காரி ஷர்ஹு ஸஹீஹில் புகாரி, ஆசிரியர் இமாம் பதுருத்தீன் அபீ முஹம்மது மஹ்மூது பின் அஹ்மது அல் அய்னி, ஹதீஸ் 3894, தாரு இஹ்யாஇத் துராத்தில் அரபீ, பெய்ரூத், லெபனான், முதல் பதிப்பு (2003)

தபக்காத்து – அத் தபகாத்துல் குபுரா, ஆசிரியர் முஹம்மது பின் ஸஅது, தாரு இஹ்யாஇத் துராத்தில் அரபீ, பெய்ரூத், லெபனான், முதல் பதிப்பு (1996)

ப்னு ஹஜர் – தஹ்ஸீபுத் தஹ்ஸீபு, அல் இமாம் ஷிஹாபுத்தீன் அபுல் ஃபதுல் அஹ்மது பின் ஹஜர் அல் அஸ்க்கலானி, முதல் பதிப்பு, தாயிரத்துல் மஆரிஃபின் நிஸாமிய்யத்தில் காயினாஹ், ஹைதராபாத், தக்கன் (1326 ஹிஜ்ரி)

கமீஸ் – தாரிக்குல் கமீஸ் ஃபீ அஹ்வாலி அந்ஃபஸி நஃபீஸ், ஆசிரியர் ஹுஸைன் பின் முஹம்மது பின் ஹஸன், முஅஸ்ஸஸத்து ஷஃபான், பெய்ரூத்

தபரீ – தாரிக் அர்ருஸூலி வல் முலூக்கு (தாரிக் அத்தபரீ) ஆசிரியர் அபூ ஜாஃபர் முஹம்மது பின் ஜரீர் அத் தபரீ, தாருல் ஃபிக்ர், பெய்ரூத், லெபனான், இரண்டாம் பதிப்பு (2002)

ஸீரத்துல் ஹலபிய்யாஹ் – அஸ் ஸீரத்துல் ஹலபிய்யாஹ், (இன்ஸானுல் உயூனி ஃபீ ஸீரத்தில் அமீனி வல் மஃமூன்) ஆசிரியர் அல்லாமாஹ் அபுல் ஃபர்ஜ் நூருத்தீன் அலீ பின் இப்ராஹிம் பின் அஹ்மது அல் ஹலபிய், தாருல் குத்பில் இல்மிய்யாஹ், பெய்ரூத், லெபனான், முதல் பதிப்பு (2002)

தி லய்ஃப் ஆஃப் மஹோமெட் – ஆசிரியர் ஸர் வில்லியம் மூர், ஸ்மித் எல்டெர் அண்ட் கோ பதிப்பகம், இலண்டன் (1878)

நன்றி: அல்-இஸ்லாம் இணையதளம்

(நூல்: நபிமார்களின் முத்திரை – அன்னாரின் வாழ்வும், குணநலன்களும் – தொகுதி 2 பக்கம் 237– 246; ஆசிரியர் ஹஸ்ரத் ‘கமருல் அன்பியா’ மிர்ஸா பஷீர் அஹ்மது ஸாஹிப் M.A  (ரலி) அவர்கள்)

மொழியாக்கம்: ஜனாப் ஃபயாஸ் அஸ்லம் சாஹிப் - சென்னை

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.