சூரா பக்கராவின் வசனம் 103-ற்கு (பிஸ்மில்லாஹ்வை சேர்த்து) பல்வேறு கருத்துக்கள், விளக்கங்கள் தற்போதைய முஸ்லிம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. மேலும் குறிப்பாக இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள ஹாரூத் மாரூத் என்பவர்களை பற்றி முஸ்லிம் சமூகத்தில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகிறது. அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் பார்வையில் இந்த வசனத்திற்கான விளக்கம் என்ன? மற்றும் யார் அந்த ஹாரூத் மாரூத்? என்பதற்கான பதிலை நாம் கீழே காணலாம்.
தஃப்சீரே கபீர் எனும் நூலின் எழுத்தாளர் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் இரண்டாவது கலீஃபா ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் இந்த வசனத்திற்கான விளக்கத்தை இவ்வாறு எடுத்து கூறியுள்ளார்கள்:
அல்லாஹ் திருக்குர்ஆனில் ஹாரூத், மாரூத் தொடர்பாக கூறுகின்றான்:
وَ اتَّبَعُوۡا مَا تَتۡلُوا الشَّیٰطِیۡنُ عَلٰی مُلۡکِ سُلَیۡمٰنَ ۚ وَ مَا کَفَرَ سُلَیۡمٰنُ وَ لٰکِنَّ الشَّیٰطِیۡنَ کَفَرُوۡا یُعَلِّمُوۡنَ النَّاسَ السِّحۡرَ ٭ وَ مَاۤ اُنۡزِلَ عَلَی الۡمَلَکَیۡنِ بِبَابِلَ ہَارُوۡتَ وَ مَارُوۡتَ ؕ وَ مَا یُعَلِّمٰنِ مِنۡ اَحَدٍ حَتّٰی یَقُوۡلَاۤ اِنَّمَا نَحۡنُ فِتۡنَۃٌ فَلَا تَکۡفُرۡ ؕ فَیَتَعَلَّمُوۡنَ مِنۡہُمَا مَا یُفَرِّقُوۡنَ بِہٖ بَیۡنَ الۡمَرۡءِ وَ زَوۡجِہٖ ؕ وَ مَا ہُمۡ بِضَآرِّیۡنَ بِہٖ مِنۡ اَحَدٍ اِلَّا بِاِذۡنِ اللّٰہِ ؕ وَ یَتَعَلَّمُوۡنَ مَا یَضُرُّہُمۡ وَ لَا یَنۡفَعُہُمۡ ؕ وَ لَقَدۡ عَلِمُوۡا لَمَنِ اشۡتَرٰٮہُ مَا لَہٗ فِی الۡاٰخِرَۃِ مِنۡ خَلَاقٍ ۟ؕ وَ لَبِئۡسَ مَا شَرَوۡا بِہٖۤ اَنۡفُسَہُمۡ ؕ لَوۡ کَانُوۡا یَعۡلَمُوۡنَ
"மேலும் யூதர்களாகிய அவர்கள் சுலைமானுடைய ஆட்சிக்கெதிராக கலகக்காரர்கள் பின்பற்றிய (வழி)தனைப் பின்பற்றுகின்றனர். சுலைமான் நிராகரிக்கவில்லை. ஆயினும் கலகக்காரர்கள் நிராகரித்தனர். அவர்கள் மக்களுக்கு ஏமாற்று வேலைகளைக் கற்று கொடுத்தனர். மேலும் பாபிலோனியாவிலுள்ள ஹாரூத், மாரூத் ஆகிய இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதை (பின்பற்றுவதாகவும் கூறுகின்றனர்). ஆனால் அவ்விருவரும் நாங்கள் (இறைவனிடமிருந்து வந்துள்ள) ஒரு சோதனையே. எனவே (எங்கள் கூற்றை) மறுக்காதீர் என்று கூறாமல் எவருக்கும் (எதையும்) கற்றுக் கொடுத்ததில்லை. எனவே அவர்கள் அவ்விருவரிடமிருந்து, ஒருவனுக்கும் அவனுடைய மனைவிக்குமிடையில், வேறுபாட்டை உண்டாக்கக் கூடியதைக் கற்றுக் கொண்டனர். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையினால் அன்றி எவருக்கும் அதன் மூலம் தீங்கு விளைவிக்கவில்லை. (ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பகைவர்களாகிய) இவர்களோ தமக்கு தீங்கு தரக்கூடியவற்றையும் பலன் அளிக்காதவற்றையும் கற்றுக் கொண்டிருக்கின்றனர். இதனை மேற்கொண்டவனுக்கு மறுமையில் எப்பங்கும் கிடையாது என்பதை இம்மக்கள் திட்டவட்டமாக அறிந்துள்ளனர். எப்பொருளுக்கும் பதிலாகத் தம்மையே அவர்கள் விற்று விட்டனரோ அப்பொருள் மிகவும் தீயதே. (இதனை) அவர்கள் அறிந்திருந்தால்! (எவ்வளவு நன்றாக இருக்கும்)" (திருக்குர்ஆன் 2: 103)..
ஹாரூத், மாரூத் தொடர்பாகவும் பொதுமக்களிடம் காணப்படும் பிரபலமான பழங்கதை என்னவென்றால் அவர்கள் இரண்டு மலக்குகளாக இருந்தனர். அவர்கள் இறைவன்மீது ஆதமுடைய நிகழ்வில் ஆட்சேபனை செய்திருந்தனர், அதில் வானவர்களின் கூற்று உண்மையாகியது. அதாவது பூமியில் குழப்பம் விளைவிக்கக் கூடிய ரத்தம் சிந்த கூடிய இது போன்ற படைப்பை படைக்கப் போகிறாயா? என்றனர். அல்லாஹ் கூறினான், நீங்கள் அறியமாட்டீர்கள். இறுதியில் அவர்களின் கூற்று உண்மையாகியது, ஆதமின் சந்ததிகள் உலகில் ஷைத்தானின் பிடியின் கீழ் சென்று விட்டனர். அந்த வானவர்கள் இறைவனிடம், நாங்கள் உலகில் இருந்திருந்தால் இந்த கெடுதல் எவ்வாறு நடந்திருக்க முடியும்? என்றனர். இதனால் அல்லாஹ் ஹாரூத், மாரூத்தை உலகிற்கு அனுப்பினான். நீங்கள் உலகிற்கு செல்லுங்கள், நீங்கள் எவ்வாறு செயலாற்றுகிறீர்கள் என்பதை நாம் பார்க்கிறோம் என்றான். அவர்கள் உலகிற்கு வந்துவிட்டார்கள், மக்களோடு இருந்தார்கள். அவர்களுக்கு 'இஸ்மே அஸீம்' (மாபெரும் பெயர்) மற்றும் மாயவித்தை தெரிந்திருந்தது. அவர்கள் மக்களுக்கு மாய வித்தையை கற்பித்து வந்தார்கள். மக்கள் வேண்டுமென்றே நிராகரிப்பை மேற்கொள்கின்றனர் என்பதை இறைவனுக்கு வெளிப்படுத்துவதற்காக, இதனை கற்பது தடுக்கப்பட்டதாகும். இதனால் மனிதன் நிராகரிப்பவனாகி விடுகின்றான். எனவே விரும்புபவர் கற்றுக் கொள்ளலாம் விருப்பம் இல்லாதவர் கற்க வேண்டாம் என்று அத்துடன் கூறிவந்தனர். ஆனால் மக்கள் அவ்வாறிருந்தும் கற்று வந்தனர். அவர்கள் ஆண்களுக்கு மட்டுமே மாயவித்தையை கற்பித்து வந்தார்கள். இதன் காரணமாக பெண்களை விட்டும் தனிமை ஏற்பட்டு வந்தது. இதற்கு நடுவே 'ஸுஹ்ரா' எனும் பெயரைக் கொண்ட தாசி அவர்களிடம் மகத்தான பெயரை கற்றுக்கொள்ள வந்தாள். அவர்கள் இருவரும் அவள்மீது மயங்கி விட்டனர். இதனால் அவ்விருவரும் அவளுக்கு ஒரு நாள் மது கொடுத்து அவளுடன் தீயச் செயலில் ஈடுபட்டு விட்டனர். இதனால் இறைவன் அவர்களிடம் கேட்டான், இதற்கான தண்டனையாக நீங்கள் உலகில் கிணற்றில் தொங்க விரும்புகிறீர்களா அல்லது கியாமத் நாளில் தண்டனை கிடைக்க வேண்டுமா? எனக் கூறுங்கள். அவர்கள் இறைவனின் தண்டனையை ஏற்கனவே கண்டுள்ளார்கள் என்பதால் அவர்கள் உலகிலேயே எங்களுக்கு தண்டனை வழங்கி விடுமாறு கூறினர். இதன்படி பாபிலோனில் உள்ள ஒரு இருண்ட கிணற்றில் போடப்பட்டனர். அதில் அவர்கள் இப்போது வரை சிறை பட்டுள்ளனர். மகத்தான பெயரை கற்றுக்கொண்ட ஸுஹ்ரா பாமரர்களைப் பொருத்தவரை நட்சத்திரமாக மாறி வானத்திற்கு சென்றுவிட்டாள். அவர்களைப் பொருத்தவரை வானத்தில் காணப்படும் விடிவெள்ளி நட்சத்திரம் ஹாரூத், மாரூத்திடம் வந்த அதே தாசியாகும்.
காஷ்மீர் வாசிகள் இவ்விஷயத்தில் ஒரு படி மேலே போய் ஹாரூத், மாரூத் கிணறு காஷ்மீரில் உள்ளது எனக் கூறுகின்றனர். இவ்வாறு அது பாபிலோனில் இருந்து பறந்து அங்கு சென்று விட்டது! இதுபோன்ற மூட நம்பிக்கைகளை முன்வைத்து, வானவர்களின் ஆட்சேபனை சரியானது என்ற முடிவுக்கு அவர்கள் வருகின்றனர். அல்லாஹ் முதலில் ஆதமை அனுப்பினான். ஆனால் அவரின் சந்ததிகள் கெட்டு விட்டனர். பிறகு அல்லாஹ் இரு வானவர்களை அனுப்பினான். ஆனால் அவர்களும் மனிதர்களின் காரணமாக கெட்டு விட்டனர். அவர்களின் இந்த முடிவு முற்றிலும் தவறாகும். அல்லாஹ் திருக்குர்ஆனில் மிகத் தெளிவான சொற்களில் வானவர்கள் அனைவரும் நல்லவர்கள், அவர்களிடம் இறைவனுக்கு மாறு செய்யும் தன்மை கிடையாது எனக் கூறியுள்ளான். ஆனால் மனிதர்களில் சிலர் நல்லவர்களாக, சிலர் தீயவர்களாக இருக்கின்றனர். மனிதர்கள் கெட்டு விட்டனர். மனிதர்களோடு வானவர்களை ஒப்பிடுகையில் அவர்களும் கெட்டு விட்டனர் என்ற ஆட்சேபித்தால் ஆட்சேபனை நீங்காமல் மேலும் உறுதியாகி விடுகிறது. அதாவது இறைவன் எவர்கள் தொடர்பாக அவர்கள் சீர்கெட மாட்டார்கள் என்று கூறியிருந்தானோ அவர்கள் சீர் கெட்டு விட்டனர்...
எனது பார்வையில் இரு வானவர்கள் மக்களுக்கு மாய வித்தையை கற்பித்தனர் எனக் கூறுவது மற்றும் ஹஸ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மாய வித்தையை கற்றிருந்தார்கள், மக்களுக்கும் மாய மந்திரம் கற்பித்தார்கள் எனக் கூறுவது முற்றிலும் தவறாகும். ஏனென்றால் இதனால் நபிமார்கள் மற்றும் வானவர்கள் என இருவர் மீதும் ஆட்சேபனை எழுகிறது. அதுமட்டுமின்றி இந்த அனைத்து விஷயங்களும் முற்றிலும் வரலாற்றிற்கும் எதிரானதாகும். இவ்வகையான எந்த ஒரு மாய மந்திரமும் கிடையாது. மிஸ்மரிஸம் முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகும். ஆனால் இங்கு ஏதோ ஒன்றை ஊதியதும் அங்கு வியப்பான ஒரு பொருள் உருவாகிவிட்டது என்பது முற்றிலும் தவறாகும். இதுபோல் ஒரு போதும் நிகழ்வது கிடையாது.
அசல் விஷயம் என்னவென்றால் இந்த வசனத்தின் விளக்கத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இருந்த யூதர்களின் சில மறைமுக சதிகள் மற்றும் சூழ்ச்சிகளைப் பற்றி கூறப்பட்டுள்ளது. அவர்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதிராக ஹஸ்ரத் ஸுலைமான் (அலை) அவர்களின் காலத்தில் இருந்த அரசாட்சியில் அவர்களின் எதிரிகள் அவர்களுக்கு எதிராக செயல்பட்டதைப் போன்ற வழிமுறைகளை கையாளுகின்றனர். அவற்றின் மூலமாக அவர்கள் தாங்களின் ஆட்சியை உடைக்க விரும்புகிறார்கள் என்பதை கூறியுள்ளான். மேலும் யூதர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதிராக செய்யும் இந்த சூழ்ச்சிகளில் ஒரு போதும் வெற்றி பெற மாட்டார்கள் என்பதைக் கூறியுள்ளான்.
விரிவுரையாளர்களால் கூறப்பட்டுள்ள சம்பவம் சரி என்றால்; அவற்றின் அதிகமானவற்றை நான் விட்டுவிட்டேன், முந்தைய வசனங்களுடன் இந்த வசனம் தொடர்பில்லாமலும் பொருந்தாமலும் போய்விடுகிறது. ஆனால் இறைவன் என்மீது திறந்துள்ள எனது இக்கருத்தின் தொடர்ச்சி முந்தைய வசனங்களுடன் நிலைநிற்கிறது. வானவர்கள் மீதும் எந்த ஆட்சேபனையும் எழாது, ஹஸ்ரத் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தின் எந்த சம்பவங்களுக்கு எதிராகவும் எந்த விஷயமும் எழாது. மேலும் இந்த வசனம் ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உண்மைத்துவத்திற்கு ஒரு மாபெரும் சான்றாக அமைந்துவிடுகிறது.
நான் ஏற்கனவே கூறியதைப் போன்று இந்த வசனம் தொடர்பாக மக்களிடையே பரவியுள்ள பழங்கதைக்கு முதலாவதாக எந்த சான்றும் கிடையாது. இரண்டாவதாக அவை எப்படிப்பட்ட அபத்தமானவை என்றால் அறிவால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. திருக்குர்ஆனின் வாக்கியங்கள் அவற்றை ரத்து செய்கின்றன.
இதன் பொருள் என்ன என்பதை இப்போது நான் கூறுகிறேன். மக்கள் எளிதாக இதன் பொருளை புரிந்து கொள்வதற்காக, அவர்கள் இதன் விளைவுவரை எட்ட நான் இயல்பான விதத்தில் பயன்தரும் அறிவு மற்றும் சிந்தனை ரீதியான முறையை கவனத்தில் கொள்வேன். அதற்கேற்ப விளக்கி விரிவுரையளிப்பேன்.
இந்த வசனத்திலிந்து தெரியவருவதாவது இங்கு மூன்று காலங்களில் செயல்கள் கூறப்பட்டுள்ளது. மூன்று முறை நிகழ்ந்த அந்த செயல் மறைவான விஷயமாகவும் சூழ்ச்சியாகவும் இருந்தது. இந்த செயல் கீழ்காணும் மூன்று சந்தர்ப்பங்களில் நிகழ்ந்தது:
- ஹஸ்ரத் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில்.
- பாபிலோனில்.
- ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில்.
ஹஸ்ரத் சுலைமான்
அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தின் நிகழ்வு 'சுலைமானுடைய ஆட்சிக்கெதிராக
கலகக்காரர்கள் பின்பற்றிய (வழி)தனைப் பின்பற்றுகின்றனர்' எனும் சொற்களில்
இருந்து நிரூபணமாகிறது. பாபிலோனின் சந்தர்ப்பத்திற்கு 'பாபிலோனியாவிலுள்ள
ஹாரூத், மாரூத் ஆகிய இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதை'
என்ற சொற்கள் சாட்சியாக இருக்கிறன. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களின் காலத்தை, 'இவர்களோ தமக்கு தீங்கு
தரக்கூடியவற்றையும் பலன் அளிக்காதவற்றையும் கற்றுக் கொண்டிருக்கின்றனர். இதனை
மேற்கொண்டவனுக்கு மறுமையில் எப்பங்கும் கிடையாது என்பதை இம்மக்கள் திட்டவட்டமாக
அறிந்துள்ளனர்.' என்ற கூற்று நிரூபிக்கின்றது. இன்னும் 'இவர்கள் நம்பிக்கை கொண்டு இறையச்சத்துடன் செயல்பட்டிருந்தால்'
(2:104) என்ற அடுத்த
வசனத்தில் இருந்தும் இதற்கான சான்று கிடைக்கிறது. இவ்வாறு இந்த மூன்று நிகழ்வுகள்
இந்த செயல் மூன்று முறை அரங்கேறியுள்ளதை வெளிப்படுத்துகிறன.
நான்காவதாக இந்த வசனத்தில் நிரூபணமாவது என்னவென்றால் மூன்று
முறையும் இந்த செயல் யூதர்களின் மூலமாகவே நிகழ்ந்துள்ளது என்பதாகும். இந்த நான்கு
விஷயங்களும் நமது பொருள்களை இன்னும் சுருக்கமாக்கி விடுகின்றன. எனவே மேற்கண்ட
நான்கு விஷயங்களையும் தனக்குள் கொண்டிருக்கும் பொருளே சரியாக இருக்க முடியும்.
அதாவது அந்த பொருளே இந்த வசனங்களுக்கேற்ப அமைய முடியும், அவை:
- மூன்று முறை நிகழ்ந்துள்ளதை வெளிப்படுத்தக்கூயதாக அச்செயல் இருக்க வேண்டும்.
- மறைமுக சதி அல்லது மறைமுக குழுக்களுடன் தொடர்புடையதான செயலை வெளிப்படுத்தக்கூயதாக இருக்க வேண்டும்.
- அதன் ஒரு நிகழ்வு ஹஸ்ரத் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்திலும் இரண்டாவது பாபிலோனிலும் மூன்றாவது ஹஸ்ரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும் நிகழ்ந்திருக்க வேண்டும்.
- அந்த பொருள், மூன்று நிகழ்வுகளும் யூதர்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றன என்பதை கூற வேண்டும்.
எனவே இதற்கு எதிராக கொடுக்கப்படும் பொருளை வசனம் ரத்து செய்துவிடும். இதேபோல் விரிவுரையாளர்கள் கொடுத்துள்ள பொருள்களில் இந்த நான்கு கோணங்களில் ஏதேனும் ஒரு கோணம் நிச்சயமாக விடுபட்டிருக்கும். அதாவது:
- ஒன்று யூதர்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருக்காது.
- அல்லது அது மூன்று முறை நிகழ்ந்திருக்காது.
- அல்லது அந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் நடைபெற்று இருக்காது.
- அல்லது அதில் மறைமுக சதி மற்றும் குழுக்களைப் பற்றிய குறிப்பு இடம் பெற்றிருக்காது.
இப்போது நாம் இந்த நான்கு
அடிப்படைகளையும் உள்ளடக்கிய,
அடுத்து மூன்று காலங்களையும் உள்ளடக்கிய, இந்த
இடத்தில் கூறப்பட்டுள்ள அதே காலங்களை சார்ந்த அந்த விஷயம் எது? என்பதை பார்த்தால் இந்த நான்கு அடிப்படைகளில் இருந்து ஒரு மூல விஷயம்
நமக்கு தெளிவாக தெரிகிறது. அதன் மீது நாம் நமது ஆய்வின் அடிப்படையை வைக்க
முடியும். அந்தப் பொருள் மறைமுக சதி மற்றும் சொசைட்டியுடன் தொடர்பு கொண்ட
பொருளாகும். அது ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே பாகுபாட்டை தோற்றுவித்து விடுகிறது.
அதாவது இதில் ஆண் மட்டுமே அங்கம் வகிக்க முடியும்; பெண்
கிடையாது என்ற நிபந்தனை அங்கு காணப்படுகிறது. இந்த நிபந்தனையினால் நமது
ஆய்வுகளுக்கு மிகவும் உதவி கிடைத்து விடுகிறது.
ஆண் பெண்ணை பிரிக்கக்கூடிய இதுபோன்ற ஏதேனும் சொசைட்டி உள்ளதா?
அதன் தொடர்பு இந்த காலங்களுடன் உள்ளதா? என்பதை
நாம் பார்க்கிறோம். இதனை சிந்தித்துப் பார்த்தால் தெரியவருவதாவது, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பாகுபாட்டை தோற்றுவிக்கக்கூடிய, ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் வரை காணக்கூடிய
இன்னும் சொல்லப்போனால் இன்றிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்பு
வரை தொடர்ந்து வந்துள்ள உலகின் ஒரே ஒரு சொசைட்டி தான் உள்ளது. அது 'ஃப்ரீ மேஸனரி சொசைட்டி' (freemasonry society)
ஆகும். இது பஞ்சாபில் 'மாய சொசைட்டி' என்றழைக்கப்படுகிறது. இது ஒரு மறைமுக சொசைட்டி ஆகும். இதன் அடிப்படை
என்னவென்றால் பெண்கள் இதன் உறுப்பினராக முடியாது, ஆண்கள்
மட்டுமே உறுப்பினராக முடியும். இதிலிருந்து நம்மால் கருத்தின் மூலத்திற்கு அருகில்
சென்று விடுகிறோம். நாம் இதன் மீது நமது ஆய்வின் அடிப்படையை அமைத்துக் கொள்ள
முடியும். ஏனென்றால் இந்த சொசைட்டி மறைவானதாகும். அடுத்து,
ஆண்களை மட்டுமே தனக்குள் இணைத்துக் கொண்டுள்ளது. தற்கால ஃப்ரீ மேஸன் சொசைட்டிக்கு
இந்த சம்பவங்களுடன் எந்த தொடர்பும் கிடையாது. இதில் மூன்று காலங்களிலும் நிரூபணமான,
வரலாற்று நிகழ்வுகள் உறுதிபடுத்திக் கூடிய அந்த ஃப்ரீ மேஸன்
சொசைட்டி பற்றி கூறப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எந்த ஃப்ரீ மேஸன் சொசைட்டியும் இன்றுவரை தொடர்ச்சியாக நிலை பெற்றிருக்கவில்லை எனும் விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். ஒருசில நான்கு நூற்றாண்டுகள் வரை இருந்தது. ஒரு சில ஐந்து நூற்றாண்டு வரை இருந்தது. ஒருசில பன்னிரெண்டாம் நூற்றாண்டில் அழிந்துவிட்டது. ஒருசில பதினைந்தாம் நூற்றாண்டில் அழிந்துவிட்டது. ஒருசில பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றி பிறகு அதே நூற்றாண்டில் அழிந்துவிட்டது. ஒரு சில பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றியது. எனவே நாம் ஏதேனும் ஒரு சொசைட்டியின் அடிப்படையின் மீது உறுதியான அஸ்திவாரத்தை அமைத்துவிட முடியாது. ஏனென்றால் நிறைய சொசைட்டிகள் தோன்றியுள்ளன. அவை முந்தைய சொசைட்டிகளின் விஷயங்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டுள்ளன, சிலவற்றை கைவிட்டு விட்டன.
ஆனால் நான் ஏற்கனவே கூறியுள்ள ஒரு கோட்பாட்டின்படி இதுபோன்ற மறைமுக சொசைட்டியின் தொடர்பு யூதர்களுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த மூன்று விஷயங்களும் யூதர்களுடனேயே தொடர்புடையதாக இருக்கிறது. ஃப்ரீ மேஸன் சொசைட்டிக்கு யூதர்களுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்பதை நாம் பார்க்க வேண்டும். ஜூவிஷ் என்சைக்ளோபீடியா பாகம் 5 -ல் freemasonry என்பதின் கீழ் ஃப்ரீ மேஸனுக்கு யூதத்துடன் ஏதேனும் தொடர்புள்ளது என்ற விஷயத்தை சரிசெய்ய முயற்சி செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து ஃப்ரீ மேஸனுக்கு யூதத்துடன் தொடர்பு இருந்துள்ள விஷயம் தெளிவாக நிரூபணமாகிறது.
முதலாவதாக அவர்களுக்கு இந்த சொசைட்டியுடன் தொடர்பு இருந்துள்ளது என்பதை இந்த கருத்திலிருந்து மனிதனால் புரிந்துகொள்ள முடியும். அவ்வாறில்லை என்றால் அவர்களுக்கு இவ்வாறு பதிலளிக்க வேண்டிய தேவை என்ன? இதுமட்டுமின்றி கீழ்காணும் கருத்திலிருந்தும் ஃப்ரீ மேஸன் சொசைட்டியின் தொடர்பு யூதத்துடன் இருந்துள்ளது என்பதும் தெளிவாகிறது.
ஜூவிஷ் என்சைக்ளோபீடியாவில் "ஃப்ரீ மேஸன் சொசைட்டிகளின் அடிப்படைகளில் யூத அடையாளங்கள் காணப்படுகின்றன என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஏனென்றால் அந்த அடையாளங்களின் ஆரம்ப தொடர்பு, ஹஸ்ரத் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களின் இஞ்சினியர்களுடன் இருந்தது நிரூபணமாகிறது" என்று எழுதப்பட்டுள்ளது.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால் இந்த சொசைட்டியின் அடையாளங்களை ஹஸ்ரத் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு முன்பு வணக்கத்தலத்தைக் கட்டிய இஞ்சினியர்களுடன் குறிப்பிடப்படுகிறது. ஹஸ்ரத் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது முதல் வணக்கத்தலத்தைக் கட்டியபோது அந்நேரம் முதல் எங்களது சொசைட்டியின் ஆரம்பம் ஏற்பட்டது என இந்த சொசைட்டியும் இதனை ஒப்புக் கொள்கிறது. இன்னும் சிலர் இதையும் தாண்டி, ஹஸ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் எங்களது தொடக்கம் ஏற்பட்டது எனக் கூறுகின்றனர். ஹஸ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் எங்களது 'கிராண்ட் மாஸ்டர்' என அவர்கள் கூறுகிறார்கள். ஜீவிஷ் என்சைக்கிளோபீடியாவில் எழுதப்பட்டுள்ளது, இவர்களின் அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ள விஷயம் என்னவென்றால் வணக்கத்தலத்தைக் கட்டிய ஈராம் அபி என்பவருடன் இவற்றின் தொடர் உள்ளது என்பதாகும். இதனைப் பற்றிய குறிப்பு 2 நாளாகமம் 2:13,14 வசனங்களில் இவ்வாறு வருகிறது:
"இப்போதும் ஈராம் அபியென்னும் புத்திமானாகிய நிபுணனை அனுப்புகிறேன். அவன் தாணின் குமாரத்திகளில் ஒரு ஸ்திரீயின் குமாரன்; அவன் தகப்பன் தீரு தேசத்தான்; அவன் பொன்னிலும, வெள்ளியிலும், வெண்கலத்திலும், இரும்பிலும், கற்களிலும், மரங்களிலும், இரத்தாம்பரநூலிலும் இளநீலநூலிலும் மெல்லியநூலிலும் சிவப்புநூலிலும் வேலைசெய்யவும், சகலவிதக் கொத்துவேலை செய்யவும், என்னென்ன செய்யவேண்டுமென்று அவனுக்குச் சொல்லப்படுமோ, அவைகளையெல்லாம் உம்மிடத்திலுள்ள நிபுணரோடும், உம்முடைய தகப்பனாகிய தாவீது என்னும் என் ஆண்டவனின் நிபுணரோடுங்கூட யூகித்துச் செய்யவும் அறிந்தவன்." (2 நாளாகமம் 2:13,14 )
ஃப்ரீ மேஸன்களின் கூற்றின்படி வணக்கத் தலத்தைக் கட்டிய பிறகு மூன்று வேலையாட்கள் ஈராம் அபியை கொலை செய்துவிட்டனர். ஃப்ரீ மேஸன்களின் சடங்குகளில் அவரது மரணத்திற்கு மிகப்பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஃப்ரீ மேஸன் சொசைட்டியின் தொடர்பு யூதர்களுடன் இருக்கிறது என்பது இவ்விஷயத்தில் இருந்தும் வெளிப்படுகிறது, ஸ்காட்லாந்தின் ஃப்ரீ மேஸன் சொசைட்டியில் பயன்படுத்தப்படும் சந்திர மாதங்கள் மற்றும் வருடம் ஆரம்ப யூத காலத்தில் பயன்படுத்தப்பட்டவையாகும். ஆனால் ஜூவிஷ் என்சைக்ளோபீடியா ஆசிரியர் இது தொடர்பாக, அது கிறித்தவர்களின் மூலமாக அவர்களிடம் நுழைந்திருக்கலாம், யாருக்கு தெரியும்! எனக் கூறியுள்ளார். அவர் அவர்களிடம் நுழைந்துள்ள இந்த மரபுச் சொற்களின் பட்டியலையும் வழங்கியுள்ளார். அவை கிட்டத்தட்ட முப்பது, நாற்பது உள்ளன. இதேபோல் ஃப்ரீ மேஸன்களின் மரபுச் சொற்களில் ஈராம் என்ற பெயரும் வருகிறது. அந்த அனைத்து சடங்குகளும் மரபுகளும் யூதத்தைச் சேர்ந்தவையாகும். என்சைக்ளோபீடியாவில் இது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஃப்ரீ மேஸன்களின் நூல்களிலும் ஹஸ்ரத் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன், அவர்களின் போட்டி இருந்து வந்துள்ளது காணப்படுகிறது. ஃப்ரீ மேஸன்களின் ஒரு நூலாக 'உலகின் மறைவான அமைப்புகள்' (secret society of the world) உள்ளது. இதன் பாகம் 1 பக்கம் 1-10-ல் எழுதப்பட்டுள்ளதாவது, ஹஸ்ரத் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் காலத்தில் ஈராம் என்ற அவர்களின் ஒரு இஞ்சினியர் இருந்தார். அவர் மீது பல்கீஸ் மோகம் கொண்டார், அவர் பல்கீஸ் மீது மோகம் கொண்டார். ஸுலைமானுக்கு பொறாமை ஏற்பட்டு அவர், பொறாமை கொண்டிருந்த ஈராமின் மூன்று பணியாளர்களை தம்முடன் இணைத்துக் கொண்டு அவரை கொலை செய்து விட்டார். மேலும் பல்கீஸை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டார். அவ்வேளையிலிருந்து ஃப்ரீ மேஸன் தொடர்ந்து வருகின்றன. அவர்களில் கட்டிடக்கலையின் அடையாளங்கள் காணப்படுகின்றன. இன்னும் சொல்லப் போனால் ஃப்ரீ மேஸனர் - ACCEPTED MASONS என்பதன் பொருளே 'சுதந்திர கட்டட நிபுணர்கள்' என்பதாகும்.
இந்த அறிவிப்பில் இருந்தது தெரியவருவதாவது ஃப்ரீ மேஸனர் சொசைட்டியுடன் ஹஸ்ரத் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் எதிரிகளுக்கு ஆழமான தொடர்பு இருந்துள்ளது. ஹஸ்ரத் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் ஃப்ரீ மேஸன்களுக்கும் விரோதம் இருந்தது என்று மக்கள் புரிந்து வந்துள்ளனர்.
இதன் பிறகு நாம் பைபிளை பார்த்தோமென்றால் அதிலிருந்தும் சில சொசைட்டிகள் ஹஸ்ரத் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு எதிராக இருந்தன என்பதைக் காண்கிறோம். அவைகளில் ஈராமின் பெயர் வரவில்லை என்றாலும் யூதர்களுக்கு ஹஸ்ரத் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் விரோதம் இருந்து வந்தது என்பதை நிச்சயம் அறிய முடிகிறது. அவர்கள் அவரை காஃபிர் என்று கூறிவந்தனர். அவரைக் குறித்து திருக்குர்ஆன் இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ள அதே விஷயங்களை குறிப்பிட்டு வந்தனர். 1 இராஜாக்கள் 11:3,4-ல் இருந்து ஹஸ்ரத் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் மீது சிலைவணக்க குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதும் அவர்கள் இணைவைப்பவராக ஆகிவிட்டார் என கூறப்பட்டுள்ளதும் தெரியவருகிறது. அதில் எழுதப்பட்டுள்ளதாவது:
"அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப் பண்ணினார்கள். சாலொமோன் வயது சென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை." (1 இராஜாக்கள் 11:3,4)
அடுத்ததாக வெளிப்படையாக அவரின் ஆட்சியின்கீழ் இருந்தவர்களே அவருக்கு எதிராக குழப்பம் விளைவித்தனர் என்பதை அதிலிருந்து விளங்க முடிகிறது. பைபிளின் கூற்றுப்படி ஹஸ்ரத் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் இணைவைப்பவராகி விட்டதால் இறைவன் அவருக்கு எதிராக மூன்று எதிரிகளை எழுப்பி விட்டான்:
ஒன்று, ஏதோமியனாகிய ஆதாத். இரண்டு, தமஸ்கின் அரசன் எலியாதாவின் குமாரன் ரேசோன். மூன்று, எப்பிராயீம். இவரை அகியா என்னும் தீர்க்கதரிசி ஸுலைமானுக்கு எதிராக தூண்டினார்.
1 இராஜாக்கள் 11:14,23,26 வசனங்களில் எழுதப்பட்டுள்ளது:
"கர்த்தர் ஏதோமியனாகிய ஆதாத் என்னும் ஒரு விரோதியைச் சாலொமோனுக்கு எழுப்பினார்; இவன் ஏதோமிலிருந்த ராஜகுலமானவன்."
"எலியாதாவின் குமாரனாகிய ரேசோன் என்னும் வேறொரு விரோதியை தேவன் எழுப்பினார்; இவன் தன் ஆண்டவனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவை விட்டு ஓடிப்போய், ஆதாத் பொல்லாப்புச் செய்ததுமல்லாமல், ரேசொன் சாலொமோனுடைய நாளெல்லாம் இஸ்ரவேலுக்கு விரோதியாகி, சீரியாவின்மேல் ராஜாவாயிருந்து, இஸ்ரவேலைப் பகைத்தான்."
இந்த சான்றுகளில் இருந்து அவருக்கு எதிராக பல உள்விரோதிகள் தோன்றி விட்டது தெரியவருகிறது. இதேபோல் அவர்களின் தரப்பிலிருந்து அவருக்கு எதிராக மறைமுக சதிகளும் நடைபெற்று வந்தன என்பதும் தெரிகிறது.
பைபிளிலிருந்து தெரியவரும் மற்றுமொரு விஷயம் என்னவென்றால் அவர்களிடம் மறைவான அடையாளங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன என்பதாகும். 1 இராஜாக்கள் 11:29-32 ல் எழுதப்பட்டுள்ளது:
"அக்காலத்திலே யெரொபெயாம் எருசலேமிலிருந்து வெளியே போகிற போது, சீலோனியனான அகியா என்னும் தீர்க்கதரிசி புதுச்சால்வையைப் போர்த்துக்கொண்டிருந்து, வழியிலே அவனைக் கண்டான்; இருவரும் வயல்வெளியிலே தனித்திருக்கையில், அகியா தான் போர்த்துக்கொண்டிருந்த புதுச்சால்வையைப் பிடித்து, அதைப் பன்னிரண்டு துண்டாகக் கிழித்துப்போட்டு, யெரொபெயாமை நோக்கி: பத்துத் துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்யபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன். ஆனாலும் என் தாசனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் தெரிந்துகொண்ட எருசலேம் நகரத்துக்காகவும், ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும்."
உருவக மொழியில் பேசிக்கொள்வது ஃப்ரீ மேஸன்களிடம் காணப்பட்ட அந்த சந்திப்பை வெளிப்படுத்துகிறது. இந்த நோக்கத்திற்காகவே போர்வை 12 துண்டுகளாக ஆக்கப்பட்டன. ஏனென்றால் இஸ்ரவேல் 12 கோத்திமாக இருந்தது. 10 துண்டுகள் எரொபெயாமுக்கு கொடுக்கப்பட்டது. அவருக்கு 10 துண்டுகள் கொடுக்கப்பட்டதன் பொருள் இஸ்ரவேலின் 10 சமுதாயங்கள் உன்னுடன் உள்ளன. எனவே நீ ஹஸ்ரத் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு எதிராக கலகம் செய் என்பதாகும். இதற்கு பிறகு உடனடியாக கலகம் ஏற்பட்டு விட்டது. அந்த பத்து கோத்திரமும் அவரை தங்களின் அரசனாக ஆக்கிக் கொண்டன. திருக்குர்ஆனின் கூற்றின்படி; ஒன்று ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது இணைவைப்பின் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது அல்லது எரொபெயாம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த உடனேயே பல்வேறு சிலைகளுக்கு ஆலயம் கட்டி இணைவைப்பில் மூழ்கி விட்டார். 2 நாளாகமம் 11:15 ல் இது தொடர்பாக எழுதப்பட்டுள்ளது:
"அவன் மேடைகளுக்கென்றும், பேய்களுக்கென்றும், தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்கென்றும் ஆசாரியர்களை ஏற்படுத்தினான்." (2நாளாகமம் 11:15)
இந்த சான்றுகளில் இருந்து தெளிவாக தெரிவது என்னவென்றால் அக்காலத்தில் அவர்கள் உருவக மொழியில் பேசி வந்தனர். ஸுலைமானுக்கு தெரியாத வண்ணம் நீங்கள் சைகைகளில் தங்களின் பணிகளைச் செய்யுங்கள் என்று அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது.
எனவே "யூதர்களாகிய
அவர்கள் சுலைமானுடைய ஆட்சிக்கெதிராக கலகக்காரர்கள் பின்பற்றிய (வழி)தனைப்
பின்பற்றுகின்றனர். சுலைமான் நிராகரிக்கவில்லை. ஆயினும் கலகக்காரர்கள்
நிராகரித்தனர். அவர்கள் மக்களுக்கு ஏமாற்று வேலைகளைக் கற்று கொடுத்தனர்."
என்ற வசனத்தில் ஹஸ்ரத் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்து வந்த
அந்த அனைத்து சதிகளைக் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் ஹஸ்ரத் நபிகள்
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்து யூதர்களும் அதேபோன்ற
கெடுதல்களைச் செய்வார்கள். ஆனால் அந்த அனைத்து சதிகளிலும் அவர்கள் தோல்வியைத்
தழுவுவார்கள் என்பது கூறப்பட்டுள்ளது. (தொடரும்)
-மொழியாக்கம்: முஅல்லிம் முஸ்ஸம்மில் - தூத்துக்குடி
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None