தற்போதைய முஸ்லிம்கள் மத்தியில் ஒரு தவறான கருத்து உள்ளது அதாவது அவர்கள் எண்ணுகின்றார்கள், ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள் கடல் மீது தனது தடியை கொண்டு அடித்ததும் அந்த கடல் உடனே பிளந்தது. இது அற்புதம் என்று ஒரு கற்பனை கதையை நம்பி வருகின்றனர். ஆனால் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் கருத்து என்னவென்றால் இது அற்புதம்தான் ஆனால் இந்த அற்புதம் பாமர முஸ்லிம்கள் நம்புவதை போல் நடக்கவில்லை என்பதுதான் உண்மை ஆகும். இது குறித்து அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் இரண்டாவது கலீஃபா அவர்கள் தமது திருக்குர்ஆன் விரிவுரையில் விளக்கமாக எழுதியுள்ளார்கள். அதனை நாம் கீழே உண்மையை தேடும் வாசகர்களுக்காக பதிவு செய்கிறோம்.
ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபதுல் மஸீஹ் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
وَ اِذۡ فَرَقۡنَا بِکُمُ الۡبَحۡرَ فَاَنۡجَیۡنٰکُمۡ وَ اَغۡرَقۡنَاۤ اٰلَ فِرۡعَوۡنَ وَ اَنۡتُمۡ تَنۡظُرُوۡنَ
"மேலும் நாம் உங்களுக்காக கடலைப் பிரித்து நாம் உங்களை காப்பாற்றியதையும், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தை மூழ்கடித்த (நேரத்)தையும் நினைத்துப் பாருங்கள். (திருக்குர்ஆன் 2: 51)
திருக்குர்ஆனில் இந்த சம்பவம் இவ்வசனம் மட்டுமின்றி 26:64 மற்றும் 20:78-80 லும் வந்துள்ளது.
இந்த வசனங்களையும் இணைத்துப் பார்த்தால் திருக்குர்ஆனின் கூற்றிற்கேற்ப சம்பவத்தின் நிலை எவ்வாறு தெரிகிறது என்றால் இஸ்ரவேலர்கள் புனித பூமியை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். பின்னால் ஃபிர்அவ்னுடைய படை வந்து சேர்ந்து விட்டது. அதைப்பார்த்து இஸ்ரவேலர்கள் பதற்றமடைந்தனர். இப்போது நாம் பிடிக்கப்பட்டு விடுவோம் என எண்ணினர். ஆனால் இறைவன் ஹஸ்ரத் மூஸாவின் மூலமாக அமைதியை வழங்கினான். ஹஸ்ரத் மூஸாவிடம் கூறினான், தமது கைத்தடியை கடலின் மீது அடிப்பீராக. அதன் விளைவாக கடலில் ஒரு வழி ஏற்பட்டுவிட்டது. அவர்கள் அதன்வழியாக முன்னேறிச் சென்றனர். அவர்களின் இருபுறமும் மணல் குவியலைப்போல் தண்ணீர் இருந்தது. அதாவது உயரமாக காட்சியளித்தது ஃபிர்அவ்னின் படை அவர்களைப் பின்தொடர்ந்தது. ஆனால் இஸ்ரவேலர்கள் பாதுகாப்பாக கடந்து விட்டதும் தண்ணீர் மீண்டும் வந்தது. எகிப்தியர்கள் மூழ்கிவிட்டனர்.
இந்த நிகழ்வைப் புரிந்து கொள்வதற்காக திருக்குர்ஆனின் போதனைக்கு ஏற்ப அனைத்து அற்புதங்களும் இறைவன் தரப்பிலிருந்தே நிகழ்கின்றன. எந்த மனிதருக்கும் இவற்றில் பங்கு கிடையாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். எனவே ஹஸ்ரத் மூஸா (அலை) கைத்தடியை எடுத்து கடலில் அடிப்பது ஒரு அடையாளத்திற்காக மட்டுமே இருந்தது. ஹஸ்ரத் மூஸாவிற்கோ அல்லது கைத்தடிக்கோ கடலை பிளப்பதில் எந்தப் பங்கும் இருக்கவில்லை. திருக்குர்ஆனின் சொற்களிலிருந்து கடல் இரண்டு துண்டாகி அதிலிருந்தது ஹஸ்ரத் மூஸா வெளியேறினார்கள் என்பது ஒருபோதும் நிரூபணம் ஆகவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். மாறாக திருக்குர்ஆனில் இந்த சம்பவம் தொடர்பாக இரு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று ஃபரக. மற்றொன்று இன்ஃபலக. இவற்றின் பொருள் தனித்து விடுதல் என்பதாகும். எனவே திருக்குர்ஆனின் சொற்களின் படி இந்த நிகழ்வின் விளக்கம் எவ்வாறு நிரூபணமாகிறது என்றால் இஸ்ரவேலர்கள் (கடலைக்) கடக்கும்போது கடல் தனித்து விட்டது. அதாவது கரையை விட்டு அகன்றுவிட்டது. அதிலிருந்து தரை வெளிப்பட்டது. அதன்மீது இஸ்ரவேலர்கள் கடந்து சென்றனர் என்பதாகும். கடலின் கரைகளில் இதுபோன்று அவ்வப்போது நிகழ்கிறது. நெப்போலியனின் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது, அவர் எகிப்தின் மீது தாக்குதல் தொடுத்தார். அப்போது அவரும் தனது படையின் ஒரு பகுதியுடன் செங்கடலின் கரையை நீரேற்றத்தின் நேரத்தில் கடந்தார். கடக்க கடக்க நீரேற்றத்தின் நேரம் வந்துவிட்டது. அவர் நூலிழையில் தப்பினார். இந்த சம்பவத்தில் உள்ள அற்புதம் என்னவென்றால் இறைவன் இஸ்ரவேலர்களை நீரேற்றத்தின் வேளையில் கடலுக்கு முன்னால் கொண்டு சேர்த்தான். அது நீரேற்றத்தின் வேளையாக இருந்தது. ஹஸ்ரத் மூஸா கையை உயர்த்தியதும் அல்லாஹ்வின் கட்டளையின் கீழ் தண்ணீர் நிரம்ப ஆரம்பித்துவிட்டது. ஆனால் ஃபிர்அவ்னின் படை ஏற்கனவே கடலில் நுழைந்து விட்டதாலும் அவனது படை மிகவும் பின்தங்கிய வேகத்தில் இஸ்ரவேலர்களைப் பின்தொடர்ந்து வந்ததாலும் இதுபோன்ற அசாதாரண தடைகளை சந்திக்க நேர்ந்ததால் படை கடலில் இருக்கும் போதே வெள்ளம் வந்துவிட்டது. எதிரிகள் மூழ்கிவிட்டனர். இந்த கருத்தை திருக்குர்ஆனின்
فَکَانَ کُلُّ فِرۡقٍ کَالطَّوۡدِ الۡعَظِیۡمِ
இதனால் அது பிரிந்தது. ஒவ்வொரு பகுதியும் ஒரு பெரும் குன்று போல் காணப்பட்டது. (26:64) எனும் சொற்களும் உறுதிப்படுத்துகின்றன. இதன் பொருள் என்னவென்றால் கடல் பிளந்தபோது ஒவ்வொரு பகுதியும் ஒரு உயரமான மணல் மேட்டை போல் ஆகிவிட்டது என்பதாகும். இப்போது தெரிவது என்னவென்றால் கடல் இரண்டு துண்டுகளாக பிளந்துவிட்டது என்பதை திருக்குர்ஆன் கூறுவது நோக்கமாக இருந்திருந்தால் குல் எனும் ஒற்றை பெயரெச்சம் (நக்கரா முஃபர்ரிதா) ஒருபோதும் பயன்படுத்தப்பட்டிருக்காது. எனவே குல் என்ற சொல் வெளிப்படுத்துவது என்னவென்றால் இந்த சந்தர்ப்பத்தில் கடல் பிளக்கவில்லை, மாறாக தனது இடத்தை விட்டு விலகிச் சென்றது என்பதாகும். உதாரணமாக நீர் நிரம்பிய சிறு குழிகளின் கரைகளை கொண்ட கடல்கள் இருக்கின்றன. அக்கடலின் நீர் பின்வாங்கிச் சென்றதும் அந்தக் குழிகள் தண்ணீரால் நிரம்பி காட்சியளிக்கின்றன. இவ்வாறே அவ்வேளையிலும் நிகழ்ந்தது. இஸ்ரவேலர்களின் ஒரு பக்கத்தில் கடல் இருந்தது. மறுபக்கத்தில் கடலின் கரைகளில் சிறுசிறு ஏரிகள் இருந்தன. நடுவில் கடந்து செல்பவர்களுக்கு அவை உயரமாக இருப்பது போன்று காட்சி அளிப்பது இயற்கையாகும். செங்கடலில் வரைபடத்தில் இருந்து தெரிய வருவது என்னவென்றால் அதன் கரையில் நிறைய ஏரிகள் இருக்கின்றன. இவை பண்டைய காலத்தில் அதிகமாக இருந்தன என்பது பண்டைய வரைபடங்களில் இருந்து நிரூபணமாகிறது.
இந்த வசனத்திற்கு நான் எனது பார்வையில் கொடுத்துள்ள பொருளை எழுதிய பிறகு முற்கால விரிவுரையாளர்களின் கருத்துக்களையும் எழுதுவது பொருத்தமாக கருதுகிறேன். முற்கால விரிவுரையாளர்களின் எண்ணம் என்னவென்றால் ஹஸ்ரத் மூஸா (அலை) நைல் நதியை கடந்தார்கள். இந்த அற்புதம் தொடர்பாக அவர்களின் இன்னும் அதிகப்படியான எண்ணம் என்னவென்றால்; அந்த நதி பன்னிரண்டு இடங்களில் பிளந்துவிட்டன என்பதாகும். இந்த விளக்கத்தை அவர்களே அதிகாரம் ஷுஃராவின் 26:64 என்ற வசனத்தின் கீழ் கொடுக்கின்றனர். அவர்களின் பார்வையில் பன்னிரண்டு கோத்திரத்தினரும் தனித்தனியாக கடக்கவேண்டும் என்பதே இந்த பன்னிரண்டு துண்டுகளின் பயனாக இருந்தது. இதற்காக அவர்கள் எந்த அளவிற்கு சிரமம் எடுத்துள்ளார்கள் என்றால் அவர்கள் கூறுகின்றனர், அவர்கள் நதியைக் கடந்து செல்லும்போது இரு பிரிவினருக்கும் இடையே தண்ணீர் சுவர் இருந்தது. இஸ்ரவேலர்கள் நதியில் கடந்து செல்வதற்கு மறுத்துவிட்டனர். இரண்டாவது கூட்டத்தினர் எங்கள் பார்வைக்கு தெரியாதவரை நாங்கள் நதியைக் கடக்கமாட்டோம் எனக் கூறினர். இறுதியில் மூஸா அலைஹிஸ்ஸலாம் துஆ செய்தார்கள். இறைவன் தண்ணீர் சுவற்றில் தடியை நுழைக்குமாறு அவர்களுக்கு கட்டளையிட்டான். அவர்கள் அவ்வாறே செய்தார்கள். சுவற்றில் ஓட்டை விழுந்தது. அவர்கள் அனைவரும் ஒருவர் மற்றவரின் ஓசையைக் கேட்க்கத் தொடங்கினர். காட்சியைக் காணத் தொடங்கினர். (கஷ்ஷாஃப்) இவ்வாறு தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அதில் நீடித்த ஓட்டை இருந்தது. பிறகு மூஸாவின் கைத்தடி எந்தளவிற்கு நீண்டு விட்டது என்றால் யூதர்களின் பன்னிரண்டு கோத்திரத்தினர் கடந்துசென்ற பன்னிரண்டு வழிப்பாதையையும் அது ஒரே தாக்குதலில் கிழித்து விட்டது. அனைத்திலும் ஒரே நேரத்தில் ஓட்டை விழச்செய்தது. ஆனால் இந்த கேள்விக்கு எந்த விரிவுரையாளரும் பதிலளிக்கவில்லை, அதாவது ஒருவர் மற்றவரை காணாமல் நிம்மதி இழந்தவர்களாக இருக்கும் அளவிற்கு எந்த இஸ்ரவேலர்களுக்கு இப்படிப்பட்ட அன்பு இருந்தது? ஒருவர் மற்றவரை பற்றிய நிம்மதியை பெறாமல் மூஸாவை போன்ற நபியுடன் கூட நதியை கடப்பதற்கு யார் தயாராக இருக்கவில்லை? அவர்களுக்காக பன்னிரண்டு வழிகளில் தனித்தனியாக ஏன் அமைக்கப்பட்டன? ஒரே வழியின் மூலமாக ஒட்டுமொத்தமாக அவர்கள் அனைவரும் ஏன் கடக்கவில்லை? அசல் விஷயம் என்னவென்றால் விரிவுரையாளர்கள் ஒரு பெரும் தவற்றில் சிக்கி விட்டனர். அவர்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் தமது சமுதாயத்தை கடக்கவைத்து கூட்டிச் சென்ற அந்த தண்ணீரை நைல் நதியின் தண்ணீராக எண்ணிக் கொண்டனர். ஆனால் இவ்விஷயம் சம்பவங்களிலிருந்து சரி என நிரூபணமாகவில்லை. வரலாற்று மற்றும் தொல்லியல் ஆய்விலிருந்து தெரியவருவது என்னவென்றால்; ஹஸ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் குடியிருப்பின் தலைநகர் இன்றும் உள்ளதைப்போல் நைல் நதியின் கிழக்கு பக்கத்தில் இருந்தது; மேற்கு பக்கத்தில் இல்லை. அக்கால குடியிருப்புப் பகுதியின் சுருக்கமான வரைபடம் கீழே தரப்பட்டுள்ளது:
இந்த வரைபடத்தில் இருந்து மிக நன்றாக புரிந்து கொள்ள முடியும், ஹஸ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் அவர்களின் சமுதாயம் சென்ற கானான் தேசம் நைல் நதியின் வடகிழக்கு பக்கத்தில் இருக்கிறது. ஃபிர்அவ்ன்களின் காலத்தில் அவர்களின் தலைநகராக கோஷன் பகுதி இருந்தது. இதனை ஸமீலாத் பள்ளத்தாக்கு என்றும் கூறுவர். (என்சைக்ளோபீடியா பப்ளிக்கா பாகம் 4 பக்கம் 4012 அமேசியஸ் சொல்லின் கீழ்) இந்த பள்ளத்தாக்கு நைல் நதியின் கிழக்கில் உள்ளது. இந்த இடத்திலிருந்து கானான் செல்லக்கூடியவருக்கு நைல் நதியைக் கடக்க வேண்டியதே கிடையாது. இதன் மேற்கு திசையில் அவர் செல்வார். எனவே இந்த வசனத்தில் நைல் நதியைக் கடப்பதைப் பற்றி குறிப்பிடப்படவில்லை. மாறாக வேறு வெள்ளத்தைக் கடந்து செல்வதைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த இடத்திலிருந்து ஹஸ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சென்ற காதிஸ் வரை எந்த நதியும் கிடையாது. (இந்த வரைபடத்தை கண்டால் தெரியவரும்) எனவே ஹஸ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் அவர்களின் சமுதாயம் கடந்து சென்ற அந்த இடம் எவ்வாறிருப்பினும் கடல் அல்லது கடலில் ஒரு பகுதியாகவே இருந்தது.
எனவே ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதி மூஸாவின் கைத்தடியின் அடியால் நின்றுவிட்டது. அதன் ஒரு பக்கத்தில் தண்ணீர் மதில் போல் நின்று விட்டது. மறுபக்கத்தின் தண்ணீர் மறுபக்கத்தில் மதில் போல் நின்று விட்டது. அதில் தடியால் குத்தி துளையிடப்பட்டது என்ற இந்த அனைத்து பொருள்களும் கற்பனைக் கதைகளாகும். திருக்குர்ஆன் இதனை மெய்ப்பிக்கவில்லை. திருக்குர்ஆன் 'பஹ்ர்' மற்றும் 'யம்ம' எனும் சொல்லைக் கூறியுள்ளது. இது நதிக்காகவும் கூறப்படுகிறது என்றாலும் கடல் அல்லது உப்பு நீர் ஏரிக்காக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரவேலர்கள் வசித்த பகுதி மற்றும் கானானிற்கு இடையில் கடல் அல்லது கடலின் நீர்த்தேங்கிய பகுதியே வருகிறது. ஓடக்கூடிய எந்த நதியும் வரவில்லை. எனவே ஹஸ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் கடந்து சென்ற இடம் கடல் அல்லது அதன் ஒரு பகுதியாக இருந்தது.
(தஃப்ஸீரே கபீர் பாகம் 1, 2:51 வசனத்தின் விளக்கத்தின் கீழ்)
மொழியாக்கம்: முஅல்லிம் முஸ்ஸம்மில் - தூத்துக்குடி
அனைத்து மக்களும் ஏற்கக்கூடிய அறிவியல் பூர்வமான திருக்குர்ஆன் விளக்கங்கள்.அருமை.ஜஸாக்குமுல்லாஹ்.
பதிலளிநீக்கு