ஹாரூத், மாரூத்தின் உண்மைநிலை - தொடர் 2

ஹாரூத், மாரூத்தின் உண்மைநிலை - தொடர் 2

இரண்டாவது சந்தர்ப்பமாக திருக்குர்ஆன் பாபிலோனைக் குறிப்பிட்டுள்ளது. அக்காலத்திலும் இஸ்ரவேலர்கள் மறைவான சொசைட்டிகளினால் பணியைப் பெற்றனர். ஆனால் அப்போது அவற்றின் தலைவர் மற்றும் லீடராக இறைவனுடைய நபிமார்கள் இருந்தனர். அவர்கள் இறைக் கட்டளையின் கீழ் அவற்றை நிறுத்த முயன்று வந்தனர். அவர்களின் பணி இஸ்ரவேலர்களின் எதிரிகளை உடைப்பதும் வெட்டுவதுமாக இருந்தது. இவர்கள் இந்த நோக்கத்திற்காக தங்களுடன் இணைத்துக் கொண்டவர்களிடம் இவ்வாறு கூறி வந்தனர், பாருங்கள், நாங்கள் இறைவன் புறமிருந்து ஒரு சோதனையாக இருக்கிறோம். எங்கள் மூலமாக நல்லவர்களும் தீயவர்களும் வேறுபடுத்திக் காட்டப்படுவார்கள். எனவே எங்களுடைய பேச்சை இது குஃப்ராகும் என மறுத்து விடாதீர்கள். அவர்கள் தங்களின் இந்த நோக்கம் மற்றும் திட்டத்தில் பெண்களை ஆயத்தப் படுத்தவில்லை, அவர்களை தங்களுடன் இணைத்துக் கொள்ளவுமில்லை. பெண்களை தங்களுக்கு இணைத்துக் கொள்ளாதிருப்பது என்பது பெருவாரியான மறைவான சொசைட்டிகளிடம் தொடர்ந்து வந்து உள்ள ஒரு பழமையான சம்பிரதாயமாகும். இஸ்ரவேலர்களின் இந்த வசனத்தில் ஹாரூத் மற்றும் மாரூத் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த நபிமார்கள் தங்களின் இந்த மறைவான திட்டங்களினால், எவர்களை குறித்து இறைவன் அவர்களுக்கு எதிராக முயற்சி செய்யுங்கள், அவர்களுக்கு அழிவை ஏற்படுத்துங்கள் என்று கூறுவானோ அவர்களுக்கு மட்டுமே இழப்பை ஏற்படுத்தி வந்தனர். எனவே பாபிலோனில் என்ன சம்பவம் நடந்தது? என்பதை நாம் அறிய வேண்டியதே இப்போது மீதமுள்ள இரண்டாவது விஷயமாகும்.

பாபிலோன் தொடர்பாக நாம் நினைவில் வைக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஹஸ்ரத் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஒரு சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு பாபிலோனின் அரசனாகிய நெபுகத் நேசர் யூதர்களை எருசலேமிலிருந்து பிடித்து அவர்களை கைதிகளாக்கி தம்முடன் கொண்டு சென்று விட்டார். இவர்கள் 12 கோத்திரத்தினராக இருந்தனர். அவர்களில் 10 கோத்திரத்தினரை அவர் கைது செய்து கொண்டு சென்று விட்டார் இரண்டை விட்டுவிட்டார். (இந்த 10 கோத்திரத்தினர் பல்வேறு இடங்களில் பரவி காஷ்மீர் போன்ற இடங்களுக்கு வந்துவிட்டனர்) இஸ்ரவேலரை நாடுகடத்தியதன் காரணம் என்னவென்றால் நீங்கள் சபத்தை மதிக்கவில்லை என்றால் உங்கள் மீது அழிவு வந்து விடும் என்று எரோமியா தீர்க்கதரிசி முன்னறிவிப்பு செய்திருந்தார். அதன் காரணமாகவே அவர்கள் கைதுக்குள்ளாகி பாபிலோனுக்கு சென்றுவிட்டனர். பாபிலோனில் அவர்கள் வசிக்கத் தொடங்கி பல காலங்கள் கடந்து விட்டபோதும் அவர்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை. இறுதியாக இஸ்ரவேல் நபிமார்களின் மூலமாக அவர்கள் திரும்ப தங்கள் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்ற முன்னறிவிப்புகள் கிடைக்கப் பெற்றன. இந்த முன்னறிவிப்புகளுக்கு ஏற்ப 70 ஆண்டுகளுக்குப் பிறகு குரூஸ் என்பவர் இவரை ஆங்கிலத்தில் சைரஸ் என்று அழைக்கின்றனர், மேதிய பாரசீக அரசனாகினார். அவர் பாபிலோனின் அரசனோடு போர் ஏற்பட்டுவிடும்படியான ஏற்பாட்டை இறைவன் செய்தான். இந்த அரசன் பெரும் வலிமை பெற்று வந்தான். எனவே பாபிலோன் மற்றும் பெற அரசுகள் அவர்மீது தாக்குதல் தொடுக்க எண்ணியது. ஆனால் இவர் அவர்களைவிட இராஜதந்திரியாக வெளிப்பட்டார். அவர் அவர்களை ஒவ்வொருவராக கொல்லத் தொடங்கி, பாபிலோன் மீதும் தாக்குதல் தொடுத்து விட்டார். இரண்டு நபிமார்களாகிய ஹாரூத் மற்றும் மாரூத் ஆகியோர் அவருடன், அவர் வெளியில் இருந்து தாக்குதல் தொடுத்தால் இவர்கள் யூதர்களுக்கு உள்ளிருந்து அவருக்கு உதவி செய்வதாக உடன்படிக்கை செய்து கொண்டனர். பாபிலோன் வெற்றி கொள்ளப்பட்டால் உங்களுக்கு எருசலேம் திரும்பிச் செல்ல அனுமதி அளிக்கப்படும், இன்னும் நான் உங்களுக்கு வணக்கத் தலங்களை கட்ட பெரும் உதவி புரிவேன் என்று அவர் அவர்களுக்கு வாக்குறுதி அளித்தார். இவ்வாறாக அவர் பாபிலோன் மீது தாக்குதல் தொடுத்தார். உள்ளுக்குள் இருந்து யூதர்கள் அவருக்கு உதவி புரிந்தனர், பாபிலோன் வெற்றி கொள்ளப்பட்டு விட்டது. அவர்களுக்கு திரும்ப தங்கள் சொந்த நாடான எருசலேமுக்கு செல்ல அனுமதி கிடைத்தது. எஸ்ரா நபியின் காலத்தில் எருசலேம் மீண்டும் குடியமர்வு நடைபெற்றது. குரூஸ் அவர்களுக்கு தன் புறம் இருந்து நிறைய பொருட்களை கொடுத்தார். அதில் மரக்கட்டை போன்றவைகளும் இருந்தன..

இந்த இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஹாரூத், மாரூத் என்பது நாடு கடத்தப்பட்ட காலத்தில் இஸ்ரவேலர்களை மீட்டு கொண்டு வருவதற்காக நியமிக்கப்பட்டிருந்த இரண்டு நபிமார்கள் ஆவர். அவர்கள் மேதிய பெர்சிய அரசனின் உதவியால் சுதந்திரத்தைப் பெற்றனர். திருக்குர்ஆன் இந்த இரண்டு நபிமார்களின் பண்புப் பெயரை கூறியுள்ளது. அதாவது ஹாரூத் மற்றும் மாரூத். சொல் விளக்கத்தில் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது போல் ஹாரூத் என்பது 'ஹரத்' என்பதிலிருந்து தோன்றியதாகும். இதன் பொருள் கிழித்தல் என்பதாகும். மாரூத் 'மரத்'-ல் இருந்து தோன்றியதாகும். இதன் பொருள் உடைத்தல் என்பதாகும். (தாஜுல் உரூஸ்) எனவே ஹாரூத் மற்றும் மாரூத் என்பதன் பொருள் கிழிப்பவர் மற்றும் உடைப்பவர் என்பதாகும். அந்த நபிமார்களின் பொறுப்பில் சில அரசுகள் அல்லது குழுக்களை கிழிப்பதற்கான மற்றும் அவற்றின் சக்தியை உடைப்பதற்கான பணி விடப்பட்டிருந்தது. எனவே அவர்களுக்கு இந்த பண்புப்பெயர் வைக்கப்பட்டது. பைபிளை ஆராய்ந்து பார்த்தால் இது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியாவும் ஆவர் என்று ஏறக்குறைய கூறிவிட முடியும். எஸ்றா பாகம் 5 ஐ படித்துப் பார்த்தால் ஆகாய் மற்றும் சகரியா நபி ஆகியோரே யூதர்களின் விடுதலைக்காக முயற்சி செய்து வந்தனர் என்பதை அறிய முடிகிறது..

இப்போது மீதமுள்ள மூன்றாவது விஷயமாவது, ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும் யூதர்கள் எப்போதாவது இது போன்ற சதிகளைச் செய்தார்களா இல்லையா? இதனை அறிய வரலாற்றை படித்துப் பார்க்கும்போது தெரியவருவது என்னவென்றால் முதலில் யூதர்கள் ரஸூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதிராக 'கஅப் பின் அஷ்ரஃப்' என்பவரை தூண்டி விட்டார்கள். அவர் அன்னாருக்கு எதிராக மொத்த அரேபியாவிலும் எதிர்ப்பின் ஒரு அபாயகரமான நெருப்பை எரியச் செய்தார். பிறகு அவர் இத்துடன் நின்று கொள்ளாமல் தனது கவிதைகளில் முஸ்லிம் பெண்களின் மானத்தின் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்துவிட்டார். எதுவரை என்றால் ரஸூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த தூய பெண்களையும் அவர் தனது வெட்கக்கேடான தாக்குதலுக்கு இலக்காக்குவதில் இருந்தும் தயங்கவில்லை. ஆனால் இந்த அனைத்து எதிர்ப்புகளையும் கடந்து இஸ்லாத்தின் ஆட்சி வலுப்பெற்று கொண்டே செல்வதையும், முஸ்லிம்களின் பாதங்கள் பின்தங்காமல் மேலும் மேலும் முன்னேறிச் செல்வதையும் கண்ட அவர் சில அந்நிய நாட்டு அரசுகளுடன் சேர்ந்துகொண்டு இஸ்லாத்தை அழிக்கும் முயற்சியைத் தொடங்கிவிட்டார்..

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் நிலை எவ்வாறு இருந்தது என்றால் யூதர்கள் கிறிஸ்தவர்களின் தொல்லைகளை தாங்க முடியாதிருந்தது. ஏனென்றால் ரோமானிய சீசர் யூத மதத்தை அழிப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் கைநழுவ விடவில்லை. இந்த நோக்கத்திற்காக அவர் சுயம் எல்லா வகையான அநீதிகளையும் கைக்கொண்டிருந்தது மட்டுமின்றி யூதர்களை வலுக்கட்டாயமாக மதமாற்றமும் செய்துவந்தார், அவர்களை நாடு கடத்தியும் வந்தார். எனவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் ஏதேனும் அரசின் மீது யூதர்கள் உதவி செய்யும் என்ற நம்பிக்கை வைக்க முடிந்தது என்றால் அது பாரசீக அரசாங்கமாகவே இருந்தது. அங்கு அவர்களின் சக மதத்தவர்கள் நிறையபேர்களின் கை ஓங்கி இருந்தது. அவர்கள் ஈரானிய அரசரின் அரசவையில் குறிப்பான மதிப்புமிக்க இடத்தில் அமர வைக்கப்பட்டு வந்தனர். எனவே ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இஸ்லாத்தை அழிப்பதற்காக ஏதேனும் சூழ்ச்சி நடைபெற்றது என்பது உறுதியாகும் பட்சத்தில் அது யூதர்களின் சதியாகவே இருந்தது என்பதையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஏனென்றால் அரேபிய இணைவைப்பாளர்களுக்கு ஈரானியர்களுடன் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை.

இப்போது நாம் இஸ்லாத்திற்கு எதிராக யூதர்களின் தரப்பிலிருந்து ஏதேனும் சதி நடைபெற்றதா இல்லையா? என்பதை பார்க்க வேண்டும். வரலாறு இவ்விஷயத்தை ஒப்புக் கொள்கிறது, ஈரானிய அரசனாகிய இரண்டாம் குரூஸ் ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை கைது செய்யும் கட்டளையை பிறப்பித்திருந்தார். அவர் தனது யமன் ஆளுநரின் பெயரில் எழுதிய கட்டளை என்னவென்றால் அரேபியாவில் ஒரு மனிதர் நபித்துவ வாதம் புரிவதாக எமக்கு அறிக்கை எட்டியுள்ளது. அவரை தண்டிக்க அவரைப் பிடித்து என்னிடம் அனுப்புவீராக. யமன் ஆளுநர் தனது இரு ஆட்களை அவர்களிடம் அனுப்பினார். அவர்கள், நாங்கள் தாங்களை கைது செய்வதற்காக அனுப்பப்பட்டிருக்கின்றோம் என்று தகவல் தெரிவித்தனர். அத்துடன் தாங்கள் எங்களுடன் செல்லுங்கள், மறுக்காதீர்கள். இல்லையென்றால் ஈரானின் அரசர் கோபமுற்று அரேபியாவின் மீது தாக்குதல் தொடுத்துவிடுவார் என்ற விஷயத்தின் மீதும் அழுத்தம் கொடுத்தனர். அன்னார் அவர்களை அடுத்த நாள் சந்திக்குமாறு கூறினார்கள். அவர்கள் அடுத்த நாள் அன்னாரை சந்தித்தபோது அன்னார் கூறினார்கள், எனது இறைவன் எனக்கு தெரிவித்ததாவது, அவன் இன்று இரவு உங்கள் இறைவனை கொன்றுவிட்டான். அவர்கள் அறியாமையால் ஒருவேளை இவ்வாறு செல்லாமல் இருப்பதற்காக சாக்குபோக்கு கூறுகிறார் என்று எண்ணிக் கொண்டனர். நாங்கள் தாங்கள் நலனை நாடியவாறு கூறுகின்றோம், தாங்கள் எங்களுடன் செல்லுங்கள். இல்லையென்றால் அரசர் கோபமுற்று விடுவார். அவர் ஒட்டுமொத்த அரேபியாவையே அழித்துவிடக் கூடும் எனக் கூறினர். ஆனால் ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், எனது இறைவன் எனக்கு தெரிவித்ததாவது, அவன் இன்று இரவு உங்கள் இறைவனை கொன்றுவிட்டான். எனவே நான் எதனை உங்களிடம் கூறினேனோ அதனையே உங்கள் ஆளுநரிடம் சென்று கொண்டு சேர்த்து விடுங்கள்.

அவர்கள் திரும்பிச் சென்று யமன் ஆளுநரிடம் இதே விஷயத்தைக் கூறினர். ஆளுநர் கூறினார், இந்த விஷயம் எந்த அளவிற்கு உண்மை என்று நாம் சில நாட்கள் காத்திருந்து பார்ப்போம். இவ்விஷயம் உண்மையாகியது என்றால் அவர் உண்மையிலேயே உண்மையான நபியாவார். இல்லையென்றால் அரேபியாவிற்கு நல்லது கிடையாது. குரூஸ் முழு அரேபியாவையும் அழித்து விடுவார். ஒரு சில நாட்களுக்குப் பிறகு துறைமுகத்திற்கு ஒரு கப்பல் வந்தது. அதிலிருந்து ஒரு பயணி இறங்கி யமன் ஆளுநரிடம் வந்தார். அவர் ஆளுநருக்கு முத்திரையிடப்பட்ட ஒரு அரச கடிதத்தை கொடுத்தார். ஆனால் முத்திரை வேறு ஒரு அரசருடையது எனத் தெரியவந்தது. கடிதத்தைப் பார்த்த உடனேயே அவரது புருவம் உயர்ந்தது. அவர் கூறினார், அரேபிய நபியின் செய்தி உண்மையாகிவிட்டது. பிறகு அவர் கடிதத்தை திறந்தார், அது குரூஸ்வின் மகனாகிய ஷீர்வியாவின் கடிதமாக இருந்தது. அவரை ஆங்கிலத்தில் சைரஸ் (SIROES) எனக் கூறுகின்றனர். அதில் எழுதப்பட்டிருந்தது என்னவென்றால் எமது தந்தை கொடுங்கோலராக இருந்தார். அவரது கொடுமைகளினால் பொறுமையிழந்து நாம் அவரை கொன்று விட்டோம். இப்போது நான் அவரது ஆட்சி வாரிசாக இருக்கிறேன். நீர் எமது பெயரால் அனைத்து மக்களிடமும் கீழ்படிதலுகான உடன்படிக்கையை பெற்றுக் கொள்ளுங்கள். எனது தந்தை அரேபியாவின் ஒரு நபித்துவ வாதியை கைது செய்வதற்காக அனுப்பியிருந்தார். அதுவும் அநீதியான கட்டளையாக இருந்தது அதனையும் நாம் ரத்து செய்கிறோம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். புதிய கட்டளை கிடைக்கப்பெறாத வரை அவர் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். (தபரீ பாகம் 3 பக்கம் 1583,1584).

இந்த சம்பவம் தொடர்பாக மக்களுக்கு வியப்பாக இருந்தது, இதற்கான காரணங்கள் என்ன? ஏன் கிஸ்ரா ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை கைது செய்யுமாறு கட்டளை பிறப்பித்தார்? ஆனால் இந்த சம்பவம் தெரிவிப்பது என்னவென்றால் அரேபியாவுடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஈரானிய அரசனை சிலர் தூண்டி விட்டனர். அவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை கைது செய்யுமாறு கட்டளை பிறப்பித்து விட்டார். இவ்விஷயம் வெளிப்படுத்துவது என்னவென்றால்

1, ஈரான் அரசனுக்கு அரேபியர்கள் கூறியிருக்க முடியாதிருந்தது. ஏனென்றால் ரோமானியர்களுக்கும் ஈரானியர்களுக்கும் இடையே விரோதப்போக்கு இருந்துவந்தன.

2, ஈரானிய அரசனுக்கு அரேபியர்கள் கூறியிருக்க முடியாதிருந்தது. ஏனென்றால் அரேபியர்கள் மிகவும் அற்பமானவர்களாக கருதப்பட்டு வந்தனர்.

ஈரான் அரசன் ஹஸ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் முஸ்லிம்களின் படைகள் ஈரான் மீது போர் தொடுத்தபோது கூறினார், நீங்கள் இரண்டிரண்டு பொற்காசுகளை பெற்றுக் கொண்டு திரும்பி உங்கள் நாட்டிற்கு சென்று விடுங்கள். நீங்கள் அற்பமானதை உண்ணும் மக்களாவீர்கள், உங்களுக்கு நாடுகளுடன் என்ன தொடர்பு? எனவே அவர்களின் பார்வையில் அரேபியர்கள் இவ்வளவு அற்பமானவர்களாக இருந்திருக்கும்போது அரேபியர்களுக்கு ஈரான் அரசனை தூண்டி விடும் அளவிற்கு எங்கிருந்து தைரியம் பிறந்திருக்கக் கூடும்?

அசல் விஷயம் என்னவென்றால் ஈரானிய அரசில் பெரும் பெரும் பொறுப்புகளில் யூதர்கள் அமர்ந்திருந்தனர். அங்கு பெரும் பலத்தைக் கொண்டிருந்தனர். அவர்களின் தலைவர் ஈரான் அரசரின் அவையில் குறிப்பிடும்படியான மதிப்புமிக்க இடத்தில் அமரவைக்கப்பட்டு வந்தார். இந்த மக்களே இஸ்லாம் மற்றும் இஸ்லாத்தின் தோற்றுனருக்கு எதிராக கடும் விரோதிகளாக இருந்தனர். எல்லா பக்கங்களிலும் தோல்வியைக் கண்ட இவர்கள் பல்வேறு வழிகளின் மூலமாக ஈரான் அரசனை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதிராக தூண்டிவிடத் தொடங்கி விட்டனர். இதன் காரணமாகவே மேற்கூறப்பட்ட கடிதத்தை அவர் எழுதினார்.

சில முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்கள் ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் தப்லீக் கடிதத்தை இச் சம்பவத்திற்கான காரணமாக கூறியுள்ளனர். இது தவறாகும். அந்தக் கடிதம் இவ்விஷயத்தின் காரணம் கிடையாது. மாறாக கிஸ்ராவின் அதிகாரி அன்னாரின் கடிதத்திற்கு முன்பாகவே அன்னாரை கைது செய்வதற்காக அன்னாரிடம் சென்று விட்டார். எனவே இந்த கடிதம் (கிழித்த சம்பவம்) அவர் தரப்பிலிருந்து இருக்க முடியாது. மாறாக அவரது கொலைக்கு பிறகு அரியணையில் அமர்ந்த இரண்டாவது கிஸ்ராவின் தரப்பிலிருந்து இருந்தது. அதாவது அந்த கடிதம் கிஸ்ராவை குறிப்பிட வில்லை. மாறாக  தந்தையை கொன்ற அவரது மகன் ஷீர்வியாவைக் குறிக்கிறது.

யூதர்களின் இந்த சதியை 'சர் வில்லியம் மூர்' க்கும் ஒத்துக் கொள்ள வேண்டி வந்தது. அவர் தனது 'லைஃப் ஆஃப் முஹம்மத் (ஸல்)' என்ற நூலில் பாகம் இரண்டில் எழுதுகிறார்:

"ஈரான் அரசர் கிஸ்ராவின் அதிகாரி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் கடிதம் கிடைப்பதற்கு முன்பாக புறப்பட்டு விட்டிருந்தார்." அடுத்து அவர் யூதர்கள் அன்னாருக்கு எதிராக ஈரானிய அரசரை தூண்டி வந்தனர் என்பதையும் ஒத்துக் கொள்கிறார். அரேபியர்களுக்கு ஈரானிய அரசரின் அவையில் எந்த மதிப்பும் இருக்கவில்லை. கிறிஸ்தவர்கள் அவரது எதிரியாக இருந்தனர். எனவே அவர்களாலும் அவரை தூண்ட முடியாது. மிச்சமிருப்பது யூதர்கள் மட்டுமே. பாரசீக அரசரின் உதவியால் பாபிலோனியர்கள் அழிந்ததைப் போன்று மதீனாவையும் நாம் வெற்றி கொண்டு விடுவோம் என்ற எண்ணம் அவர்களின் மனதில் ஆழமாக குடிகொண்டிருந்தது. இதற்கான அதிகப்படியான சான்று என்னவென்றால் யூதர்களின் தரப்பில் இருந்து தொடர்ச்சியாக ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வந்ததாகும். அன்னாரின் உயிரைப் பறிக்க முயற்சி செய்யப்பட்டு வந்தது. அன்னாரின் மீது செய்யப்பட்ட அனைத்து மறைவான தாக்குதல்களும் யூதர்களின் தரப்பிலிருந்தே நிகழ்ந்தவையாகும். உதாரணமாக ஒரு யூதப் பெண்மணியின் தரப்பில் இருந்து அன்னாருக்கு விஷம் கொடுத்தது நிரூபணமாகியுள்ளது. இதேபோல் ரகசியமாக அன்னாரின் மீது ஒரு பெரிய கனமான கல்லை தள்ளிவிட்டு கொலை செய்யும் முயற்சி யூதர்களின் தரப்பில் இருந்து செய்யப்பட்டிருந்தது..

இந்த அனைத்து ஆய்வுகளிலிருந்தும் நிரூபணமாவது என்னவென்றால்

1, மறைமுக சொசைட்டிகளின் தொடக்கம் யூதர்களால் ஏற்பட்டது.

2, இவர்கள் ஹஸ்ரத் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் எதிரிகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர்.

3, மூன்று முறை இவர்கள் மறைவான முயற்சிகளை மேற்கொண்டார்கள்: 1-ஹஸ்ரத் ஜுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு எதிராக, 2- பாபிலோனியர்களுக்கு எதிராக, 3-ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதிராக.

இந்த அனைத்து சம்பவங்களின் பிடி கிடைத்துவிட்டது எனும்போது இதிலிருந்து இந்த வசனங்களில் ஹஸ்ரத் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் எதிரிகள் மற்றும் பாபிலோனியர்கள் சம்பவங்கள் நிரூபணமாகி விட்டது. இதேபோல் ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தொடர்பான ஈரானிய அரசனின் பொருத்தமற்ற செயல் மற்றும் ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை கொலை செய்ய யூதர்கள் செய்த அனைத்து முயற்சிகளையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. (தஃப்ஸீரே கபீர் பாகம் 2 பக்கம்: 67-80)

மொழியாக்கம்: முஅல்லிம் முஸ்ஸம்மில் அஹ்மது - தூத்துக்குடி

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.