அர்ஷ் என்றால் என்ன? அதனை வானவர்கள் சுமந்து கொண்டிருக்கிறார்களா?

 

அர்ஷ் என்றால் என்ன? அதனை வானவர்கள் சுமந்து கொண்டிருக்கிறார்களா?

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான், மற்றும் அகனை நான்கு வானவர்கள் சுமந்து கொண்டுள்ளனர்; என்பதற்கு அஹ்மதி அல்லாதவர்கள் வெளிப்படையான பௌதீகமான பொருளை கொடுக்கின்றனர். ஆனால் அது தவறானதாகும் என்பதை இக்காலத்தில் தோன்றிய மார்க்கத்தின் நீதிபதி ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தமது நூட்களின் வாயிலாக தெளிவுப்படுதியுள்ளார்கள். அந்த மேற்கோள்களை நாம் வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

அர்ஷ் என்பதற்கு உண்மையான பொருள் என்ன?

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

“மறு பக்கம் மனிதனுடன் அவனுக்கு இருக்கும் தொடர்பினால் எவரும் வேதத்தை நம்புபவர்கள் போன்று மனிதனை அ(ந்த இறை)வன் என்றே கருதி விடக் கூடாது என்ற தவற்றிலிருந்து பாதுகாப்பதற்காக அவன் எல்லாரையும் விட மேலானவனும், எல்லா படைப்பினத்தையும் விட மிக மறைவிலும் மறைவான இடத்தில் இருக்கிறான் என்றும் கூறி விட்டான். அதை ஷரீஅத்தின் மரபுச் சொல்லில் அர்ஷ் என்று கூறுகிறோம்.

மேலும் அர்ஷ் என்பது படைக்கப்பட்ட ஒன்றல்ல. மறைவிலும் மறைவான அந்தஸ்தின் பெயராகும். இறைவனை மனிதனைப் போன்று எதிலோ அமர்ந்திருப்பதாக கற்பனை செய்யும் அளவுக்கு எந்தவொரு நாற்காலியும் இல்லை. மாறாக, அது படைப்பினங்களை விட்டு வெகு தொலைவிலுள்ள, தூய்மையான, பரிசுத்தமான அந்தஸ்து ஆகும்.

அதற்கு அர்ஷ் எனக் கூறப்படும். உதாரணமாக, இறைவன் அனைவரிடத்திலும் படைத்தல் மற்றும் படைக்கப்படுதல் ஆகியவற்றிற்கிடையிலுள்ள தொடர்பை நிலைநாட்டிய பிறகு அர்ஷில் நிலை கொண்டான் என திருக்குர்ஆனில் வந்துள்ளது. அதாவது எல்லா தொடர்புகள் இருந்தாலும் அவன் தனியாகவே இருந்தான். அவன் படைப்பினங்களுடன் சேர்ந்து விடவில்லை.

சுருக்கமாக, இறைவன் மனிதனுடன் இருப்பது, எல்லாவற்றையும் சூழ்ந்திருப்பது ஆகியவை இறைவனுடைய தஷ்பீஹீ (ஒப்புமையுள்ள) பண்பு ஆகும்.

இறைவன் மனிதனுக்கு தனது நெருக்கத்தை நிரூபித்துக்காட்டுவதற்காகவே அவன் திருக்குர்ஆனில் இந்தப் பண்பைக் குறிப்பிட்டுள்ளான். மேலும் இறைவன் எல்லா படைப்பினங்களை விட்டும் மறைவிலும் மறைவாக இருப்பது, எல்லாவற்றையும் விட மிக மேலாகவும், உயர்வாகவும், மிகத் தொலைவிலும் இருப்பது, மக்லூகிய்யத் (படைக்கப்படுதல்) என்பதை விட்டும் தொலைவில் உள்ள அந்த தூய்மையான, பரிசுத்தமான இடத்தில் இருப்பது - அது அர்ஷ் என அழைக்கப்படுகிறது - ஆகிய அந்தப் பண்பின் பெயர் தன்ஸீஹீ பண்பு ஆகும். (அதாவது இறைவனின் ஒப்பற்ற பண்பு, மனித திறனுக்கும், அறிவுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கின்ற இறைவனின் தனிச் சிறப்பான பண்பு ஆகும்).

இறைவன் இதன் மூலமாக தனது தவ்ஹீது மற்றும் ஒருவன், இணையில்லாதவன், படைப்பினங்களின் பண்புகளை விட்டும் தனது பண்பு தூய்மையானதாக இருத்தல் ஆகியவற்றை நிரூபிப்பதற்காக அவன் (மனித திறனுக்கும், அறிவுக்கும் அப்பாற்பட்டதாகவும் இறைவனுக்கு மட்டுமே உரியதாகவும் இருக்கும் ஒப்பற்ற) இந்த தன்ஸீஹீ பண்பை திருக்குர்ஆனில் குறிப்பிட்டிருக்கிறான்.

மற்ற சமுதாயங்கள் இறைவனைப் பற்றி ஒன்று, தன்ஸீஹீ (ஒப்பற்ற) பண்பாகக் குறிப்பிட்டுள்ளது. அதாவது, நர்கன் என்ற பண்புப் பெயரால் அழைத்திருக்கிறது. (அதாவது மனிதப் பண்புகளை விட்டும் அப்பாற்பட்டவன்; தனித்தன்மை வாய்ந்தவன்); அல்லது அவனை சர்கன் என்ற பண்பைக் கொண்டவனாக ஒப்புக் கொண்டு, அவனை படைப்பினம் போன்ற ஒருவன் என்ற அளவுக்கு ஒப்புமைப்படுத்தி இருக்கிறது. (அதாவது அவன் படைப்பினங்களைப் போன்றே எல்லா பண்புகளையும் கொண்டிருப்பவன்.

மேலும் அவனை தனிச்சிறப்பான பண்புகளையும் கொண்டவன்; படைப்பினங்களைப் போன்ற பண்புகளையும் கொண்டவன் என ஏற்கவில்லை). இந்த இரு பண்புகளையும் (மற்ற சமுதாயங்கள்) ஒன்று சேர்க்கவில்லை. (அதாவது ஒப்புமையுள்ள பண்பு, அவனுக்கே உரித்தான தனித்தன்மை வாய்ந்த பண்பு ஆகிய இரண்டும் அவனிடம் இருப்பதாக ஒப்புக்கொள்ளவில்லை.)

ஆனால் இறைவன் திருக்குர்ஆனில் இந்த இரண்டு பண்புகளின் கண்ணாடியில் தனது முகத்தைக் காட்டியிருக்கிறான். மேலும் இதுதான் முழுமையான தவ்ஹீது ஆகும். (சஷ்மயே மஃரிஃபத். ரூஹானீ கஸாயின் தொகுதி 23 பக்கம் 97-99)

அர்ஷ் என்பது இறைவன் அமர்ந்திருக்கும் பௌதீகமான படைக்கப்பட்ட ஒன்று என்பது முஸ்லிம்களின் கொள்கையல்ல. முழுக் குர்ஆனையும் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை படித்துப் பாருங்கள். அதில் அர்ஷும் ஓர் எல்லைக்குட்பட்டதும் படைக்கப்பட்டதும் ஆகும் என எங்கேயும் காணமாட்டீர்கள்.

இருப்பைக் கொண்டுள்ள ஒவ்வொரு பொருளையும் நான்தான் படைத்துள்ளேன் என இறைவன் திருக்குர்ஆனில் மீண்டும் மீண்டும் கூறியுள்ளான். நானே வானம், பூமி, ஆன்மாக்கள், அவற்றின் எல்லா ஆற்றல்களையும் படைத்தவன் ஆவேன். நான் சுயமாகவே நிலைபெற்றிருப்பவன். மேலும் எல்லா பொருள்களும் என்னால் நிலைபெற்றுள்ளன. ஒவ்வோர் அணுவும். காணப்படுகின்ற ஒவ்வொரு பொருளும் என்னால் படைக்கப்பட்டதாகும். ஆனால் அர்ஷ் என்பதும் ஏதோ பௌதீகமான ஒன்று. அதைப் படைத்தவன் நான் என்று எங்கேயும் கூறவில்லை...

திருக்குர்ஆனில் எங்கெல்லாம் அர்ஷ் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் அதன் பொருள், இறைவனின் மகத்துவம், ஆளுமை, மேன்மை என்பதாகும். இதன் காரணமாகவே அதை படைக்கப்பட்டவற்றுடன் இணைக்கவில்லை.

மேலும் இறைவனுடைய மகத்துவம், ஆளுமை ஆகியவற்றின் தோற்றம் நான்காகும். அது வேதத்தின் அடிப்படையில் நான்கு தேவதைகள் எனக் கூறப்படுகின்றன. ஆனால் திருக்குர்ஆனின் மரபுச் சொல்லில் அவற்றின் பெயர் வானவர்கள் என்பதுமாகும். (நஸீமே தஃவத். ரூஹானீ கஸாயின் தொகுதி 19 பக்கம் 453 - 456)

திருக்குர்ஆனில் அர்ஷ் என்பதன் கருத்து ஒப்புவமையுள்ள அந்தஸ்தை விட்டும் மேலானதும் எல்லா உலகத்தை விட்டும் உயர்வானதும், மறைவிலும் மறைவான தூய்மையான, புனிதமான அந்தஸ்து ஆகும். அது கற்களாலோ அல்லது செங்கற்களாலோ அல்லது வேறு எந்த பொருளாலோ செய்யப்பட்ட ஒன்று; அதில் இறைவன் அமர்ந்திருக்கிறான் என்பதல்ல. எனவேதான் அர்ஷை படைக்கப்படாதது எனக் கூறுகிறோம். இறைவன் சில நேரத்தில் நம்பிக்கையாளரின் உள்ளத்தில் நிலைகொள்கிறான் என அவன் கூறுவது போன்று அர்ஷின் மீது அவனது தோற்றம் ஏற்படுகிறது என அவன் கூறுகிறான்.

மேலும் எல்லாவற்றையும் நான் சுமந்து கொண்டிருக்கிறேன் என அவன் தெளிவாகக் கூறுகிறான். ஏதாவதொன்று என்னையும் சுமந்து கொண்டிருக்கிறது என அவன் எங்கேயும் கூறவில்லை. எல்லா உலகத்தையும் விட மேலான அந்தஸ்தைக் கொண்ட அர்ஷ் என்பது அவனது தன்ஸீஹீ பண்புகளின் (ஒப்பற்ற பண்புகளின், தனித்தன்மை வாய்ந்த பண்புகளின்) தோற்றமாகும். இறைவனிடம் தொன்மையிலிருந்தே, ஆரம்பத்திலிருந்தே இரு பண்புகள் இருந்து வருகின்றன என நாம் மீண்டும் மீண்டும் எழுதியுள்ளோம்.

ஒரு பண்பு, தஷ்பீஹீ (ஒப்புமையுள்ளது) ஆகும்; இன்னொரு பண்பு தன்ஸீஹீ (ஒப்பற்றது, தனித்தன்மை வாய்ந்தது) ஆகும். இறைவனுடைய வார்த்தையில் இரண்டு பண்புகளையும் குறிப்பிடுவது அவசியமானதாக இருந்தது. அதாவது தஷ்பீஹீ (ஒப்புமையுள்ள) பண்பு; தன்ஸீஹீ (ஒப்பற்றதும், தனித்தன்மை வாய்ந்ததுமான) பண்பு.

எனவே இறைவன் தனது தஷ்பீஹீ (ஒப்புமையுள்ள) பண்பை வெளிப்படுத்துவதற்காக தனது கை, கண், அன்பு, கோபம் ஆகிய பண்புகளை திருக்குர்ஆனில் குறிப்பிட்டிருக்கிறான். மேலும் அவனைப் போன்றவன் என்ற சந்தேகம் உருவாகியிருக்கலாமோ என்ற வகையில் சில இடத்தில், அவனைப் போன்றவன் எவனுமில்லை என்று கூறி விட்டான். (திருக்குர்ஆன் 42: 12 காண்க).

சில இடத்தில்,

ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ

எனக் கூறி விட்டான். சூரா ரஅது 11-வது ஜுஸூவிலும்,

اَللّٰہُ الَّذِیۡ رَفَعَ السَّمٰوٰتِ بِغَیۡرِ عَمَدٍ تَرَوۡنَہَا ثُمَّ اسۡتَوٰی عَلَی الۡعَرۡشِ

என்ற வசனம் உள்ளது. (திருக்குர் ஆன் 13:3). பொருள்: உங்கள் இறைவன் நீங்கள் காண்பதைப் போன்று, வானங்களை தூண்கள் இன்றி உயர்த்தி இருக்கிறான். பிறகு அவன் அர்ஷில் நிலை கொண்டான்.

இந்த வசனத்தின் வெளிப்படையான பொருளின்படி, இறைவன் முதலில் அர்ஷில் நிலை கொள்ளவில்லையா என்ன? என்ற சந்தேகம் உருவாகிறது. இதற்குரிய விடை, அர்ஷ் என்பது ஒரு பௌதீகமான பொருள் அல்ல. மாறாக, அது அவனது பண்பாகிய மறைவிலும் மறைவாக இருக்கும் ஒரு நிலைமையாகும்.

எனவே இறைவன் வானம், பூமி மற்றும் எல்லாவற்றையும் படைத்திருக்கும்போது நிழலான முறையில் தனது ஒளியால் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றிற்கு ஒளியை வழங்கியிருக்கும்போது மனிதனையும் உருவகமாக தனது வடிவில் படைத்திருக்கிறான். மேலும் தனது கண்ணியத்திற்குரிய பண்புகளை அவன் மீது ஊதியவாறு இந்த வகையில் இறைவன் தனக்காக ஒரு உருவகத்தை நிலைநாட்டினான். ஆனால் அவன் ஒவ்வோர் உருவகத்தை விட்டும் தூயவன் ஆவான்.

எனவே அர்ஷில் நிலை கொள்வதன் மூலம் தனது பரிசுத்தத்தன்மையை அவன் வெளிப்படுத்தி இருக்கிறான். சுருக்கமாக, அவன் எல்லாவற்றையும் படைத்து அவன் படைப்பினங்களைப் போன்றவன் அல்லன்; மாறாக, அனைவரையும் விட தனித்தவனாகவும், மறைவிலும் மறைவான இடத்திலும் இருக்கிறான். (சஷ்மயே மஃரிஃபத். ரூஹானீ கஸாயின் தொகுதி 23 பக்கம் 276 - 277)

வானவர்கள் அர்ஷை சுமந்து கொண்டிருப்பதன் உண்மையான பொருள் என்ன?

இன்னோர் ஆட்சேபனையை எதிரிகள் எடுத்து வைக்கின்றனர். அது என்னவெனில், மறுமை நாளில் அர்ஷை எட்டு வானவர்கள் சுமந்து கொண்டிருப்பார்கள் என திருக்குர்ஆனின் சில இடங்களிலிருந்து தெரிகிறது. இதிலிருந்து உலகில் நான்கு வானவர்கள் அர்ஷை சுமந்து கொண்டிருக்கிறார்கள் என வசனத்தின் சைகையாகத் தெரிகிறது.

இறைவனின் அர்ஷை யாராவது சுமந்து கொள்வதை விட்டும் அவன் தூயவன் என்ற ஆட்சேபனை இவ்விடத்தில் எழுகிறது.

இதற்குரிய விடை என்னவெனில், அர்ஷ் எந்தவொரு பௌதீகமான பொருளும் அல்ல - அது சுமக்கப்படுவதற்கு அல்லது சுமக்கப்படத் தகுந்ததாக இருப்பதற்கு என்பதை நீங்கள் இப்போது கேட்டுள்ளீர்கள். மாறாக, பரிசுத்தமான, புனிதமான அந்தஸ்தின் பெயர் அர்ஷ் ஆகும்.

எனவேதான் அதை படைக்கப்படாதது என்று கூறுகிறோம். இல்லையென்றால் ஓர் உருவமுள்ள பொருள் இறைவனுடைய படைப்பிலிருந்து எப்படி வெளியே இருக்க முடியும்?

மேலும் அர்ஷைப் பற்றிக் கூறப்பட்டவையெல்லாம் உருவகங்களாகும். எனவே இப்படிப்பட்ட ஆட்சேபனை வெறும் அறிவீனம் என்பதை அறிவுடையவர் புரிந்து கொள்ள முடியும்.

வானவர்கள் அர்ஷை சுமந்து கொண்டிருப்பதன் உண்மையான நுண்ணிய கருத்தை நாம் இப்போது வாசகர்களுக்கு தெரிவிக்கின்றோம்.

இறைவன் தனது பரிசுத்தமான இடத்தில் - அதாவது அவனது பரிசுத்தமான பண்பு அவனது எல்லா பண்புகளையும் மறைத்து அவனை மறைவிலும் மறைவாக ஆக்கி விடும்போது - திருக்குர்ஆனின் மரபுச் சொல்லில் அதன் பெயர்தான் அர்ஷ் ஆகும் - அப்போது இறைவன் மனிதனுடைய அறிவை விட்டும் உயர்வானவனாகி விடுகின்றான். மேலும் அவனைக் கண்டறிவதற்கு அறிவுக்கு சக்தி இருப்பதில்லை. அப்போது அவனது நான்கு பண்புகள் - அவற்றை நான்கு வானவர்களாக பெயரிடப்பட்டுள்ளது - அவை உலகில் வெளிப்பட்டு விட்டன. அவை அவனது மறைவான இருப்பை வெளிப்படுத்துகின்றது.

ஒன்று, ருபூபிய்யத் ஆகும். அதன் மூலமாக அவன் ஆன்மீகமாகவும், பௌதீகமாகவும் மனிதனை முழுமை செய்கிறான். ஏனெனில் ஆன்மா மற்றும் உடல் உருவாவதற்கு ருபூபிய்யத் தேவைப்படுகிறது. மேலும் அவ்வாறே இறைவனின் வார்த்தைகள் இறங்குவதற்கும், வழக்கத்திற்கு அப்பாற்பட்ட அவனது அடையாளம் வெளிப்படுவதற்கும் ருபூபிய்யத் தேவைப்படுகிறது.

இரண்டாவது, இறைவனின் ரஹ்மானிய்யத் ஆகும். இது வெளிப்பட்டு விட்டது. அதாவது எந்த செயலுமின்றி எண்ணற்ற அருள்களை மனிதனுக்காக அவன் உருவாக்கி இருக்கின்றான். இந்தப் பண்பும் அவனது மறைமுகமான இருப்பை வெளிப்படுத்துகிறது.

மூன்றாவது, இறைவனின் ரஹீமிய்யத் ஆகும். அது என்னவெனில், நற்செயல் செய்கின்றவர்களுக்கு முதலில் தனது ரஹ்மானிய்யத்தின் எதிர்பார்ப்பிற்கேற்ப நற்செயல்களுக்கான ஆற்றல்களை வழங்குகின்றான். பிறகு ரஹீமிய்யத்தின் எதிர்பார்ப்பினால் நற்செயல்களை அவர்களிடமிருந்து வெளிப்படுத்துகின்றான். இவ்வாறு அவர்களை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுகிறான். இந்தப் பண்பும் அவனது மறைவான இருப்பை வெளிப்படுத்துகிறது.

நான்காவது பண்பு, மாலிக்கி யவ்மித்தீன் என்பதாகும். இதுவும் அவனது மறைமுகமான இருப்பை வெளிப்படுத்துகிறது. அவன் நல்லவர்களுக்கு நற்கூலியும், தீயவர்களுக்கு தண்டனையும் வழங்குகிறான். இந்த நான்கு பண்புகள் அவனது அர்ஷை சுமந்து கொண்டிருக்கின்றன. அதாவது அவனது மறைமுகமான இருப்பு பற்றி இந்தப் பண்புகளின் மூலமாக இந்த உலகத்தில் தெரிய வருகிறது. மேலும் இந்த இறைஞானம் எனும் உலகம் மறுமையில் இரட்டிப்பாகி விடும். அதாவது, நான்குக்கு பதிலாக எட்டு வானவர்களாகி விடுவார்கள். (சஷ்மயே மஃரிஃபத். ரூஹானீ கஸாயின் தொகுதி 23 பக்கம் 278-279)

 

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.