ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களின் மரணமடைந்து விட்டார்கள், வாக்களிக்கப்பட்ட மஸீஹாக முஹம்மதிய உம்மத்தில் நீர் தோன்றியுள்ளீர் என்ற இறையறிவிப்பு மட்டுமே ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் உண்மைக்கு மிகப்பெரிய சான்றாகும்
مسیح ابن مریم رسول اللہ فوت ہو چکا ہے اور اس کے رنگ میں ہو کر وعدہ کے موافق تو آیا ہے۔ وَکَانَ وَعْدُ اللہِ مَفْعُوْلًا۔ اَنْتَ مَعِیْ وَ اَنْتَ عَلَی الْحَقِّ الْمُبِیْنِ۔ اَنْتَ مُصِیْبٌ وَّ مُعِیْنٌ لِّلْحَقِ۔
[Urdu] Masih Ibn-e-Maryam [Messiah, son of Marry], Messenger of Allah, has died and you have come in his spirit according to promise.
[Arabic] [Allah's promise will certainly be fulfilled. You are with Me and you are established on patent truth. You are on the right path and are a helper of truth.] (Izala-e-Auham,pp.561-562, Ruhani Kahazain, vol.3, p.402)
அல்லாஹ்வின் தூதர் மர்யத்தின் மைந்தர் மஸீஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மரணமடைந்து விட்டார்கள். வாக்குறுதிகளின் படி அவருடைய சாயலில் நீர் வந்திருக்கின்றீர். அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறவே செய்யும். (இஸாலயே அவ்ஹாம், பக்கம் 561-562)
இது ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் இமாம் மஹ்தி ஆகிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள், அல்லாஹ்வின் புறமிருந்து 1891 ஆம் ஆண்டு பெற்ற இல்ஹாமாகும். காலம் காலமாக பெரும்பாலான முஸ்லிம்களிடையே வேரூன்றிவிட்ட, ‘வானத்தில் இருந்து ஈஸா நபி (அலை) அவர்கள் இறுதி காலத்தில் இறங்குவார்கள், என்ற அந்த நம்பிக்கையை தகர்த்தெறிவதாக இந்த இறையறிவிப்பு இருந்தது. இதன் காரணமாக, இஸ்லாமிய வரலாற்றில் எவருமே சந்திக்காத எதிர்ப்பின் புயலை ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ்(அலை) அவர்களும், அவர்களின் வாதத்தினை ஏற்றுக்கொண்ட அன்னாரின் புனித தோழர்களும் சந்தித்தார்கள். இவர்கள் மார்க்கத்தை விட்டு வெளியேறிய முர்த்தத்கள் (நவூதுபில்லாஹ்) என்றும் நிராகரிப்பாளர்கள் என்றும் அவர்கள் மீது மார்க்கத் தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களோ, ஈஸா (அலை) அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்ற தனது இறையறிவிப்பின் அடிப்படையிலான இந்த வாதத்தை திருக்குர்ஆனின் வசனங்களின் மூலம் பொய்யாக்கிவிட்டால், தான் உடனே பாவமன்னிப்பு கேட்டு இந்த கொள்கையை விட்டு விடுவதாக சவால் விட்டார்கள்.
இன்று வரை இந்த சவால் முறியடிக்கப்படவில்லை. எவராலும் ஈஸா(அலை) அவர்கள் இன்றளவும் உயிரோடு தான் இருக்கிறார்கள் என்று நிரூபிக்க முடியவில்லை. அதற்கு மாற்றமாக, இஸ்லாமிய அறிஞர்கள், ஈஸா நபி இறந்து விட்டார் என்று ஏற்றுக் கொள்ளவும் ஆரம்பித்து விட்டார்கள். அல்லது ஈஸா இன்று வரை உயிருடன் வானத்தில் வாழ்ந்து வருகிறார், என்பதற்கான ஆதாரத்தை வழங்கும் கடமையில் இருந்தும், சுமையில் இருந்தும் தங்களை விடுவித்துக் கொள்ளும் முகமாக, இந்த விஷயத்தை ஒரு முக்கியத்துவம் அற்ற விஷயமாகவும் சிலர் பேச ஆரம்பித்து விட்டார்கள். பொதுமக்கள் மத்தியிலும் இந்த நம்பிக்கையின் மீதான பிடி தளர்ந்துக் கொண்டே வருகிறது.
ஆனால் கடந்த நூற்றாண்டில் இந்த ‘இன்னமும் மரணிக்காத ஈஸா நபி’ கொள்கை எவ்வளவு உணர்வுப்பூர்வமாக நம்பப்பட்டு வந்தது என்பதற்கு கீழ்க்காணும் ஃபத்வா (மார்க்கதீர்ப்பே) ஓர் உதாரணமாகும்.
மதராஸை (சென்னை) சேர்ந்த காஸி உபைதுல்லாஹ் 1893ஆம் ஆண்டு அஹ்மதி முஸ்லிம்களை குறித்து வெளியிட்ட ஃபத்வா, ஃபத்வாவின் தலைப்போ “ஃபத்வா தர் தக்ஃபீரே முன்க்கிரே உரூஜே ஜிஸ்மி வ நுஸூலே ஈஸா அலைஹிஸ்ஸலாம்” அதாவது “ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உடலோடு உயர்த்தப்பட்டதையும் பின்னர் இறங்கி வருவதையும் மறுப்போரின் நிராகரிப்பு குறித்த ஃபத்வா”:
“முஸ்லிம்களின் அடக்கஸ்தலங்களில் அவர்களை கண்டிப்பாக அடக்கக்கூடாது….அதற்கு மாறாக, அவருடைய உடலை குளிப்பாட்டாமல், கஃபன் என்னும் ஆடையை அணிவிக்காமல், ஒரு நாயைப் போல, ஒரு குழியில் தூக்கி போடுங்கள்”
(நாங்கள் ஸுன்னத் ஜமாஅத்தில் இருந்து வந்து அஹ்மதிய்யத்தை ஏற்றுக் கொண்டோம். சிறுவயதில் என்னுடைய தந்தை வீட்டில் பேசிக்கொண்டிருந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது–காதியானிகள் சொல்வது போல் காஷ்மீரில் ஈஸா நபியின் கப்ரு இருக்கின்றதா என்று போய் பார்த்தால் கூட நாம் காஃபிர் ஆகிவிடுவோம் – என்று என் தந்தை கூறினார்.)
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) முன்னறிவித்தபடியே அன்னாருக்குப் பின் மூன்று நூற்றாண்டுகளுக்குள், இந்த பொய்க் கொள்கை முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகிய இரு சமுதாயத்தினராலும் கைவிடப்படும் என்பது நிச்சயம் நிறைவேறப்போகிறது என்பதற்கான அடையாளங்கள், இந்த 130 வருடங்களில் வெளிப்பட்டுவிட்டன.
இந்த இல்ஹாம் ஹஸ்ரத் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மரணத்தை மட்டும் அல்லாமல் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) ஆகிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் உண்மையையும் பறைச்சாற்றிக் கொண்டிருக்கின்றது என்பதை சொல்லுவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். அதாவது கட்டுரையில் ஆரம்பத்தில் நாம் சொன்ன அந்த ஒரே ஒரு இறையறிவிப்பே அன்னார்தான் வர வேண்டிய மஸீஹ் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
இறைவன் இந்த சமுதாயத்திற்கு வழங்கிய பாதுகாப்பு
உண்மையில் ஈஸா நபி (அலை) அவர்கள் இறுதிக் காலத்தில் இறங்குவார்கள் என்ற எம்பெருமானாரின் (ஸல்) முன்னறிவிப்பு ஓர் அரணைப் போல் நின்று பொய்வாதிகளிடம் இருந்து இந்த உம்மத்தை காத்து உள்ளது. ராணுவத்தில் செய்திகளை அனுப்பும் பொழுது குறியாக்கம் (Encode) செய்து அனுப்புவார்கள், அதை இடைமறித்து கேட்போருக்கு ஒன்றும் புரியாது. அந்த செய்தி செல்ல வேண்டிய இடத்தை அடைந்து விட்டால் அங்கு அதனை விளங்கி கொள்வதற்கான (Decode) முறையை வைத்திருப்பார்கள். அத்தகைய ஒரு விஷயமாகத்தான் இறைவன் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களின் இறங்குதலை, ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தோன்றும் காலம் வரையில் ஒரு மறை பொருளாக வைத்திருந்தான். உண்மையாளராகிய அன்னாரின் தோற்றத்திற்கு முன்னர் மஹ்தி என்று வாதித்த பொய்யர்களால் அதனை விளங்க முடியவில்லை.
எத்தனையோ பேர் தம்மை முஸ்லிம்கள் எதிர்பார்த்திடும் இமாம் மஹ்தி என்று வாதித்தார்கள். ஆனால் அவர்களுள் எவராலும் வானத்தில் இருந்து அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப ஈஸா நபியை இறக்கிட முடியவில்லை. ஏனென்றால் மஹ்தியின் காலத்தில் ஈஸா நபி வானத்தில் இருந்தும் இறங்கி வருவார் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருந்ததனால் அவர்களே தாங்கள் பொய்யர்கள் என்பதற்கு சாட்சியாளர்கள் ஆக இருந்தார்கள்.
உண்மையாளரான ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஹ்தி மஸீஹ் (அலை) தோன்றிய பொழுது, இறைவன் ஈஸா நபி இறங்குதல் என்பதன் உண்மையான, ஆத்மீகமான பொருளை, அதன் தாத்பர்யத்தை அன்னாருக்கு புரிய வைத்தான். இதன் அடிப்படையில் அவர்கள் வாதமும் செய்தார்கள். அதாவது, ஈஸா நபியின் இறங்குதல் (நுஸூல்) என்பது இந்த உம்மத்தில் தோன்றக்கூடியவரை பற்றி கூறப்பட்ட ஒரு முன்னறிவிப்பு என்றும், இஸ்ரவேல் சமுதாயத்தைச் சேர்ந்த மூஸவி மஸீஹ் ஆகிய ஈஸா நபி (அலை) அவர்கள் குர்ஆனின் கூற்றுப்படி இறந்து விட்டார்கள் என்றும் அறிவித்தார்கள்.
இறைவன் இந்த விஷயத்தை மறைவானதாக வைத்திருந்ததன் மூலம் முஸ்லிம்களை குழப்பத்தில் இருந்தும் காப்பாற்றி பெரும் கருணை புரிந்துள்ளான். இல்லையென்றால் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு முன் தோன்றிய அந்த மஹ்தி என்று வாதித்த பொய்யர்களில் ஒவ்வொருவரும் தாங்களே மஸீஹ் என்றும் வாதித்து இருப்பர்.
இனிமேலும் வருங்காலத்திலும் பொய்யர்கள் எவரும் இந்த சமுதாயத்தை குழப்பிட முடியாது. ஏனென்றால், எவரேனும் ஒரு பொய்வாதி நானே மஸீஹும் மஹ்தியுமாக வந்துள்ளேன். ஈஸா (அலை) அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறினால், முஸ்லிம்கள் உடனே அவரிடம் இதைத்தான் மிர்ஸா ஸாஹிப் ஏற்கனவே வாதித்துவிட்டார்களே! நீ போய் அவர் கையில் பைஅத்து செய்து விட்டு வா என்று அந்த பொய்வாதியிடம் கூறுவர். அதே போல் நான் தான் மஹ்தி, சிறிது காலத்தில் ஈஸா வானத்தில் இருந்து வருவார் என்று கூறி இழிவடையும் துணிவும் இனி எந்த பொய்வாதிக்கும் இல்லை.
அல்ஹம்துலில்லாஹ்! இவ்வாறாக, நமது எஜமானர் ஆகிய நபி பெருமானார் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இருந்து பெற்று நமக்கு சொன்ன முன்னறிவிப்புகளும், இறைவனால் அனுப்பப்பட்ட இமாம் மஹ்தி ஆகிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் இக்காலத்தில் பெற்ற இறை அறிவிப்பும் முஸ்லிம் சமுதாயத்தை பொய்வாதிகளை விட்டும், பொய்யர்களை விட்டும் இரு மருங்கிலும் பாதுகாக்கும் அரண்களாக திகழ்கின்றன. பின்வரும் ஹதீஸையும் நினைவூட்டுகின்றன.
“கைஃப த்தஹ்லிக்கு உம்மத்துன் அன அவ்வலுஹா வ ஈஸப்னு மர்யம ஆகிருஹா”
“நான் ஆரம்பத்திலும், மர்யத்தின் மகன் ஈஸா இறுதியிலும் இருக்கக்கூடிய அந்த சமுதாயம் எவ்வாறு அழிவிற்க்காளாகும்?”
(கன்ஸுல் உம்மால் ஹதீஸ் கிரந்தம்)
இதுவும் கவனத்தில் கொள்ளத்தக்கது
நபிகள் நாயகம்(ஸல்) மற்றும் அவர்களுடைய தோழர்களின் காலத்திற்கு பிறகு, மிர்ஸா ஸாஹிப் தான் முதன்முதலில் ஈஸா நபி இறந்துவிட்டார் என்று வாதித்தாரா? வேறு யாரும் அவ்வாறு நம்பவில்லையா? என்றால் நம்முடைய பதில் நிச்சயமாக அவ்வாறு கூறக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அக்காலத்தில் இமாம் புகாரி, இமாம் மாலிக், இமாம் இப்னு கய்யிம் (ரஹ்மதுல்லாஹி அலைஹிம்) போன்றோரும், இக்காலத்தில் மௌலானா அபுல் கலாம் ஆஸாத், ஸர் ஸய்யிது அஹ்மது கான் போன்றோரும், அஹ்லே குர்ஆன் போன்ற சில பிரிவினரும் இதில் அடங்குவர்.
ஆனால் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுடைய வாதம் ஈஸா (அலை) மரணித்துவிட்டார் என்பது மட்டுமன்று. வரவேண்டிய மஸீஹ் இந்த உம்மத்தில் தோன்றிவிட்டார் என்பதுமாகும்.
இந்த இரண்டு இன்றியமையாத பகுதிகளைக் கொண்டதாக அன்னாருடைய வாதம் இருக்கின்றது. இப்படி இது வரையிலும் யாரும் வாதிக்கவில்லை. இதில் ஒரு பகுதியை மட்டும் வாதித்து மற்றதை கவனிக்காதவரின் வாதத்தினால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. ஏனென்றால், இந்த உம்மத்தின் பாதுகாப்பை மஸீஹின் வருகையுடன் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இணைத்துள்ளார்கள். மஹ்தி என்று பொய்யாக வாதித்து ஈஸா நபி இனிமேல் வருவார் என்று சமாதானம் கூறியோரையும், ஈஸா நபி மரணித்துவிட்டார் என்று கூறி வரக்கூடிய சீர்திருத்தவாதி பற்றிய முன்னறிவிப்புகளை ஒதுக்கி தள்ளிய அஹ்லே குர்ஆன், ஸய்யிது அஹ்மது கான் போன்ற இரு தரப்பினரையுமே முஸ்லிம்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நமது எதிரிகள் கூட மிர்ஸா ஸாஹிபிற்கு ஏதாவது பதில் சொல்லவேண்டுமே என்றுதான் அத்தகையோரின் அறிவிப்புகளைத் தேடி செல்கிறார்கள்.
அதே வேளையில் இறைவனுக்கு அஞ்சக்கூடிய இந்த உம்மத்தின் அறிஞர் பெருமக்கள், திருக்குர்ஆன் ஈஸா நபி (அலை) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறுவதையும், நபிமொழிகள் ஈஸா நபி (அலை) இறங்கிவருவார்கள் என்று கூறுவதையும் கண்டு அதில் முரண்பாடு இருப்பதாக தோன்றினாலும் அந்த ஆதாரங்களை அப்படியே நமக்காக பாதுகாத்து வந்தார்கள், அல்லாஹ் அதன் விளக்கத்தை தக்க சமயத்தில் வெளிப்படுத்துவான் என்னும் நம்பிக்கையில்.
அஹ்மதி முஸ்லிம்கள், இதனைக் குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பொழுது, ஈஸா நபியின் மரணத்தை மறுத்திட முடியாத எதிரிகள் கேட்கின்ற ஒரு பொதுவான கேள்வி, இவர்தான் அந்த மஸீஹ் என்பதற்கு என்ன ஆதாரம் என்பதாகும் நல்லுள்ளம் கொண்டோர் ஈஸா நபியின் மரணத்தை ஏற்றுக் கொண்டு, வரக்கூடியவர் இந்த உம்மத்தைச் சேர்ந்தவர் ஆகத்தான் இருக்க வேண்டும் என்பதனையும் உணரும்பொழுது, அவர்களுக்கு நாம் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் உண்மைக்கான சான்றுகளை குர்ஆன், ஹதீஸ், முன்னோர்களின் அறிவிப்புகள் மற்றும் பகுத்தறிவு ரீதியான வாதங்களின் மூலம் எடுத்து வைக்கும்பொழுது அவர்கள் மகிழ்வுடன், ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களை ஏற்றுக் கொள்ளவும் செய்கின்றனர். ஆனால், எதிரிகள், ஈஸா நபி வருவார் என்ற கொள்கையை உடும்புப்பிடியாக பிடித்துக் கொண்டு இருப்பதால், ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் உண்மைக்கான சான்றினை நாம் சமர்ப்பிக்கும் பொழுது அவர்கள் அதனை ஏளனம் செய்வதைத் தவிர வேறு ஒன்றும் நடப்பதில்லை.
ஆனால், ஒரு கோணத்தில் பார்க்கும்பொழுது,
அல்லாஹ்வின் தூதர் மர்யத்தின் மைந்தர் மஸீஹ் அலைஹிஸ்ஸலாம் மரணமடைந்து விட்டார்கள். வாக்குறுதிகளின் படி அவருடைய சாயலில் நீர் வந்திருக்கின்றீர். அல்லாஹ்வின் வாக்குறுதிகள் நிறைவேறவே செய்யும்.
என்ற இறையறிவிப்பு மட்டுமே ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் உண்மைக்கு போதுமான சான்றாக, எதிரிகளை எங்கும் அசைய முடியாதபடி கட்டி போடக்கூடியதாக இருக்கின்றது.
உதாரணத்திற்கு, ஈஸா நபி (அலை) அவர்கள் இறந்துவிட்டார் என்று ஒருவர் நம்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது, வாக்களிக்கப்பட்ட மஸீஹ் யார் என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லி ஆக வேண்டும்.
1) அவர் ஒன்று, அஹ்லே குர்ஆன் வாதிகளை போல, மஸீஹின் இரண்டாம் வருகை குறித்த நபிமொழிகளை நிராகரித்திட வேண்டும். அப்படி செய்யும்பொழுது, மீண்டும் மீண்டும் பதியப்பட்டுள்ள ஒரு செய்தியைக் கொண்ட வரலாற்று ஆதாரங்களை அவர் மறுத்ததாகிவிடும். அவரின் இச்செயல் பகுத்தறிவிற்கு எதிரானதாகிவிடும். மேலும் குர்ஆனில் கூறப்பட்டுள்ள மஸீஹ் குறித்த முன்னறிவிப்புகளையும் அவர் மறுத்தாகவேண்டும். ஹதீஸையும், சுன்னத்தையும் நம்பக்கூடியோர் இதனை செய்யவே முடியாது ஏன் என்றால் இனிமேல் ஹதீஸ் பக்கம் அவர்களால் போகவே முடியாது
2) அல்லது அவர் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) இந்த உம்மத்தில் தான் தோன்றுவார் என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டாக வேண்டும்
மேற்கூறிய இரண்டு வழிகளில், முதலாவது தவறான வழியாகும் என்பதை அறிவுடையோர் ஏற்றுக் கொள்வர். மேலும் இந்த முதலாவது வழியை பின்பற்றுவோர்,
- ஈஸா நபி (அலை) அவர்களின் மரணம் குறித்த திருமறை வசனங்களின் விளக்கத்தை அஹ்மதிய்யா ஜமாஅத்தின் நிறுவனர் விளக்கியது போல் ஏற்றுக் கொள்ள வேண்டும்
- சிலுவைச் சம்பவம், அதன் பிறகு ஈஸா (அலை) எங்கு போனார்கள் என்பது குறித்தும் விளக்கவேண்டும் அல்லது அஹ்மதிய்யா ஜமாஅத்தின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும்
- இத்தனை காலமாக இவர்களுடைய முற்கால அறிஞர்களும், சம கால அறிஞர்களும் கூறி வந்தது இட்டுக்கட்டப்பட்ட பொய் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்
- அவர்களுக்கு புரியாதது, விளங்காதது, மிர்ஸா ஸாஹிபிற்கு விளங்கியது, எனவே மிர்ஸா ஸாஹிபின் திருமறை ஞானத்துடன் ஒப்பிடும்பொழுது அவர்களுடைய ஞானம் குறைபாடுடையது என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்
- ஒரு பொய்யை தூக்கி பிடித்துக் கொண்டு அதனை மறுப்போர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, தாக்குதல் புரிந்து, கொலைகள் செய்து, ஊர் விலக்கி வைத்து, மிகப் பெரும் அநீதி இழைத்து விட்டோம் என்று அவர்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும்
- ஈஸா நபி (அலை) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்கும் பட்சத்தில் பொது மக்களிடையே எத்தகைய பார தூர விளைவுகளை அது ஏற்படுத்தும் என்பது இவர்களுடைய மிகப்பெரிய கவலையாக இருக்கும்
- எல்லாவற்றிர்க்கும் மேலாக, மிக முக்கியமான விஷயமான ‘இஸ்லாத்தின் உலகளாவிய வெற்றி, முஸ்லிம்களின் ஒருமைப்பாடு, சீர்திருத்தம்’ இவற்றிற்கான இறை ஏற்பாடாக, வாக்குறுதியாக முஸ்லிம்கள் கை கொண்டு வந்த ‘ஈஸா நபியின் வருகை’ என்னும் கொள்கையை முதுகுக்கு பின் இவர்கள் வீசி எறியும் பட்சத்தில் மாற்று ஏற்பாடு என்ன? இல்லை இனிமேல் நவூதுபில்லாஹ் வீழ்ச்சியும் அழிவும் மட்டுமே எஞ்சியுள்ளதா? தஜ்ஜாலும், யாஜூஜ், மாஜூஜும் என்றென்றும் நிலைத்திருப்பாரோ? சிலுவையின், சிலைவணங்கிகளின், நாத்திகரின் ஆட்சியும் நிரந்தரமாகி விடுமோ?
- இமாம் மஹ்தியின் நிலையையும் யோசித்து பாருங்கள். அவரால் தஜ்ஜாலைக் கொல்லவே முடியாது. எனவே அவனை உயிருடன் வைத்துக்கொண்டு இவர் எப்படி உலகை நீதியைக் கொண்டு நிரப்புவார்? முஸ்லிம்களுக்கு செல்வத்தை வாரி வழங்குவார்? என்பதற்கும் இவர்கள் பதில் தேட வேண்டும். இல்லையென்றால் இந்த பிரச்சனையை ஒரே அடியாக தீர்க்கும் விதமாக இமாம் மஹ்தியும் வரமாட்டார் அல்லது இறுதி காலம் குறித்த எந்த முன்னறிவிப்பும் உண்மையல்ல (நவூதுபில்லாஹ்) என்று கூற வேண்டிய பரிதாபகரமான நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவர்.
இரண்டாவது வழியை ஏற்றுக் கொண்டவருக்கோ (அதாவது வரக்கூடியவர் இந்த உம்மத்தில் தான் தோன்றுவார் என்னும் நிலைப்பாட்டை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டவர்) அஹ்மதிய்யா ஜமாஅத்தின் நிறுவனர் தான் அந்த வாக்களிக்கப்பட்ட மஸீஹ் என்னும் முடிவில் இருந்து தப்பிச் செல்லவே முடியாது. ஏனென்றால், அந்த மஸீஹ் இனிமேல் இந்த உம்மத்தில் பிறந்து வருவார் என்று கூறினால், அப்படி வரக்கூடியவர் முதலில் அஹ்மதிய்யா ஜமாஅத்தின் நிறுவனரைத்தான் உண்மைப்படுத்துவார். அன்னார் இறைவனிடமிருந்து தான் பெற்றதாக வாதிக்கும் இறை அறிவிப்பைத்தான் உண்மைப் படுத்துவார், மூன்று நூற்றாண்டுகளுக்குள் இந்த கொள்கை முஸ்லிம்களாலும், கிறிஸ்தவர்களாலும் கைவிடப்படும் என்ற அன்னாருடைய தீர்க்கதரிசனத்தையும் உண்மைப்படுத்துவார். காலம் காலமாக முஸ்லிம்கள் போற்றி வரும் (உயிருள்ள ஈஸாவை நம்பி அதனை போதித்தும் வந்த) அறிஞர்களையும், திருக்குர்ஆன் விரிவுரையாளர்களையும் அவர் பொய்ப்படுத்திவிடுவார்.
ஈஸா நபி வரமாட்டார், நபி பெருமானாரின் உண்மை பேரன்பர் தான் வருவார் என்ற ஓர் மகத்தான சத்தியத்தை, ஓர் அசத்தியவாதி (நவூதுபில்லாஹ்) உலகிற்கு அறிவித்து, அதற்காக கடும் எதிர்ப்புகளையும் சந்தித்து, அவரும் அவருடைய ஜமாஅத்தும் மிகப்பெரும் தியாகங்களை செய்த பிறகு, அதே சத்தியத்தை சொல்லி இனிமேல் வரப்போகும் (கற்பனை) சத்தியவாதி, உண்மையான வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஆக இருப்பார். உடல் நோகாமல் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவார் என்று கூறினால், அப்படிக் கூறக்கூடியவரை அவர் நிழலே பார்த்து சிரிக்கும்.
இது எப்படி இருக்கிறது என்றால், மிர்ஸா ஸாஹிபு கூறுவதெல்லாம் உண்மை தான், ஆனால் அவர் உண்மையாளரல்ல, இனிமேல்தான் அந்த உண்மையாளர் வரவிருக்கிறார் என்பதை போல் நகைப்பிற்குரியதாக உள்ளது.
இன்னொரு கோணத்திலும் பார்ப்போம். முஸ்லிம்கள் அந்த மஸீஹ் இந்த உம்மத்தில் தான் தோன்றுவார் என்று நம்புகின்ற பட்சத்தில், மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி என்று ஒருவரே பிறக்கவில்லை (நவூதுபில்லாஹ்) என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலைப்பாட்டின் படி வரக்கூடிய மஸீஹ் 1891லோ அல்லது 1991 ஆம் ஆண்டோ அல்லது இனி மேலோ வாதம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அவர் என்னெவென்று வாதிப்பார்? அவரும் இஸ்ரவேல் மெஸாயாவாகிய ஈஸா நபி மரணித்துவிட்டார் என்றுதான் முதலில் வாதித்தாக வேண்டும். அப்பொழுது தான் அவர் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் என்பதை நாம் ஆராய்ந்தே பார்ப்போம். எனவே ஈஸா நபி மரணித்துவிட்டார் என்ற இந்த வாதம் தான் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறியுள்ளபடி நமது வாதத்தின் ஆணி வேராகும்.
இந்த காரணத்தினால் தான், நான் ஈஸா நபி இறந்துவிட்டார் என்று நம்புகிறேன், வரவேண்டியவர் இந்த உம்மத்தில் தான் தோன்றுவார் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அஹ்மதிய்யா ஜமாஅத்தின் நிறுவனர் தான் அந்த வாக்களிக்கப்பட்ட மஸீஹ் என்பதை மட்டும் மறுக்கிறேன் என்று சொல்லக்கூடிய ஒருவரை நீங்கள் தேடினாலும் பார்க்கமுடியாது.
இதனைத்தான் அஹ்மதிய்யா ஜமாஅத்தின் எதிரி ஒருவர் இவ்வாறு இணையத்தில் வரைந்ததை நான் முற்காலத்தில் பார்த்திருக்கிறேன்.
“முஸ்லிம்களெ! நீங்கள் தேவை இல்லாமல் ஈஸா நபிக்காக ஒரு இருக்கையை போட்டு வைத்திருந்தீர்கள். இப்பொழுது மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி வந்து அதில் அமர்ந்து விட்டார். அவரை இப்பொழுது உங்களால் எழுப்ப முடியவில்லை”
அதனால்தான், ஈஸா(அலை) உயிருடன் இருக்கிறார் என்ற கொள்கைக்கு நவீன முஸ்லிம் அறிஞர்கள் இன்றும் முட்டுக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இல்லை அவர் இறந்தாலும் கப்ரில் இருந்து எழுந்து வருவார் (கிறிஸ்தவ கொள்கையான ‘உயிர்த்தெழுதல்’ நினைவுக்கு வருகிறதா??) என்று மௌலானா அபுல் அஃலா மௌதூதி போன்று சப்பைக் கட்டு கட்டுவோரும் பின்வரும் காரணங்களால் பொய்ப்படுத்தப் படுகின்றனர்.
- மரணித்தவர்கள் மீண்டும் பூமியின் பால் வரவே முடியாது என்ற இறை வாக்கு அவர்களின் ஆன்மாக்களுக்கு தடை போடுவது போல் இத்தகையோரின் கருத்துக்கும் தடை போடுகின்றது
- அப்படி கபுரு குழியில் இருந்து ஈஸா (அலை) எழுந்து வருவார் என்றால், வானத்தில் இருந்தும் அவர் இறங்கி வருவார் என்ற நம்பிக்கை என்னவானது? அது பொய்த்துப் போனதா? அல்லது இறங்குவார் (நஸல) என்பதற்கு கப்ரில் இருந்து எழுவார் என்று விளக்க முடியுமா? அப்படி விளக்க முடிந்தால், இறங்குவார் என்பதற்கு இந்த உம்மத்தில் இருந்து தோன்றுவார் என்று இறை அறிவிப்பின் அடிப்படையில் அஹ்மதி முஸ்லிம்கள் விளக்கம் அளித்தால் அதில் என்ன தவறு?
அன்பிற்குரிய அஹ்மதி முஸ்லிம் சகோதரர்களே! ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ்(அலை) அவர்களின் ‘ஈஸா நபியின் மரணம்’ என்னும் ஆயுதமே இக்காலத்தில் எல்லா தஜ்ஜால்களையும் கொல்லக்கூடியதாக இருக்கின்றது. அதனை முழுமையாக கைக்கொண்டு பெயர்தாங்கி முஸ்லிம்கள் மீதும், இஸ்லாத்தின் எதிரிகளின் மீது முழு வெற்றி பெற அல்லாஹ் நமக்கு உதவுவானாக. சிலுவையை முறிக்கும் பணியில், தஜ்ஜாலைக் கொல்லும் பணியில் நாமும் பங்கு பெற தௌஃபீக் வழங்குவானாக. ஆமீன்.
மேலும் அஹ்மதியல்லாத முஸ்லிம் சகோதரர்களே! இந்த பொய் கொள்கையை விட்டு விடுங்கள், இக்காலத்தில் இறைவன் நபி பெருமானார் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் முடிவற்ற அருட்களின் மூலமாக தோற்றுவித்துள்ள அன்னாரின் உண்மை அடியாராகிய வாக்களிக்கப்பட்ட மஸீஹை ஏற்றுக் கொள்ளுங்கள்.
இறந்தவரை விட்டு விடுங்கள், நபி பெருமானாரின் உயிரூட்டும் வல்லமையால் உயிர் பெற்றுள்ள முஹம்மதி மஸீஹை ஏற்றுக்கொள்ளுங்கள். அதில் தான் இஸ்லாத்தின் வாழ்வு இருக்கின்றது. இஸ்லாத்தின் வாழ்வில்தான் மனித குலத்தின் மேம்பாடு இருக்கிறது.
வஸ்ஸலாமு அலா மனித்தபஅல் ஹுதா
நேர்வழியை பின்பற்றுவோருக்கு சாந்தி உண்டாகட்டுமாக.
(ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹி) அவர்கள் மற்றும் அஹ்மதி அறிஞர்களின் வழிகாட்டும் அருளுக்குரிய உரைகள், எழுத்துகளில் இருந்து பயன் பெற்றவாறு இந்த கட்டுரை வரையப்பட்டுள்ளது)
-குலாமே மஸ்ரூர்
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None