எகிப்து அதிபர் அன்வர் சாதத் ,லிபியா அதிபர் கர்னல் கடாபி ,வடக்கு ஏமன் அதிபர் அப்துர் ரஹ்மான் அல்ரியானி ஆகிய மூவரும் அண்மையில் லாகூரில் நடைபெற்ற முஸ்லிம் நாடுகளின் உச்சி மாநாட்டுக்குச் செல்லும் முன் சவுதி அரேபிய நாட்டு மன்னர் பைசலை சந்தித்து அவருக்கு 'அமீருல் மூமினீன் 'என்ற பட்டத்தை அளிக்க முற்பட்டதாகவும் ஆனால் மன்னர் பைசல் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் பெய்ரூத் நகரிலிருந்து வெளிவரும் நாளேடான 'அல்தஹார்' 24-2-1974 அன்று ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
முஸ்லிம் நாடுகளின் உச்சி மாநாட்டின் போது பாகிஸ்தான் பிரதமர் பூட்டோவும் மற்றும் பல முஸ்லிம் நாடுகளின் அதிபர்களும் மன்னர் பைசலிடம் ,அவர் 'அமீருல் மூமினீனாக ' வேண்டும் என்ற யோசனையை வலியுறுத்தியதாகவும் அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் கூட அச்செய்தி கூறியது .
முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட வேண்டும் ;முஸ்லிம் வல்லரசு உருவாக வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு உச்சி மாநாட்டை கூட்டிய இந்த முஸ்லிம் நாடுகளில் அதிபர்களுக்கு உலக முஸ்லிம்களுக்கு என்று ஒரு தலைவர் இல்லையே என்ற எண்ணம் எழுந்திருக்கவேண்டும்! அப்பிரச்சனை அவர்களின் மனதை உருத்தியிருக்க வேண்டும் .
மார்க்கத்தின் பெயரால் முஸ்லிம் வல்லரசு என்ற ரீதியில் உலக முஸ்லிம்கள் ஒன்று பட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இந்த அதிபர்கள் தமக்கென ஒரு மார்க்க தலைவர் வேண்டும் என எண்ணியிருக்க வேண்டும். அதனால் தான் அவர்கள் அவசர அவசரமாக மன்னர் பைசலை 'அமீருல் மூமினீனாக'ஆக்குவதற்கு முயன்றிருக்கிறார்கள் .
‘அமீருல் மூமினீன்' என்பது ‘கலீஃபாவிற்குத் தரப்படும் இன்னொரு பெயர் .இதற்கு பொருள் நம்பிக்கையாளர்களின் தலைவர் இந்த மேலான பதவியை மன்னர் பைசலுக்கு அளிக்க முயன்ற அந்த முஸ்லீம் நாட்டு அதிபர்களின் மார்க்க அறிவை என்னவென்பது? இதற்கு முன்னரும் மன்னர் பாரூக்கிற்கு இந்த பெரும் பதவியை அளிக்க முன்வந்தார்கள். மார்க்கம் அறியாத ஒரு சிலர் ஹைதராபாத் நிஜாமை கூட கலீஃபாவாக ஆக்கத் துடித்தனர் .இன்னும் சிலர். ஆனாலும் அவர்களெல்லாம் தம் முயற்சியில் வெற்றி பெறவில்லை.
வரலாற்றை நாம் புரட்டும்போது இஸ்லாத்தில் கிலாஃபத்தை - உலக முஸ்லிம்களுக்கு ஒரு தலைவரை ஏற்படுத்த பல முயற்சிகள் செய்யப்பட்டிருப்பதையும் அவை எல்லாம் தோல்வியில் முடிந்திருப்பதையும் காணமுடியும். ஏன் ? “நாமே கலீஃபாவை தேர்ந்தெடுகின்றோம்” என்று திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
எனவே உண்மையான அமீருல் மூமினீன் கலீஃபா இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்க வேண்டும். ஆரம்ப கால முஸ்லிம்கள் கலீஃபாக்களை தம் ஒப்புயர்வற்ற தலைவர்களாக கொண்டிருந்தார்கள். அந்த அமீருல் மூமினீன்களெல்லாம், இஸ்லாம் உலகிற்கு காட்டித்தந்த ஜனநாயகத்தின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள்.
அமீருல் மூமினீன்கள் ஆட்சிபுரிந்த அக்காலத்தில் எந்த முஸ்லிம் நாட்டிலும் தனி ஆட்சி நடைபெறவில்லை .அந்த கலிபாக்களின் பிரதிநிதிகளாக ஒவ்வொரு நாட்டிலும் கவர்னர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள் .இவ்வாறாக எல்லா முஸ்லீம் நாடுகளும் அந்த அமீருல் மூமினீன்களின் நேரடி ஆட்சியின்கீழ் இருந்தார்கள். ஸக்காத்து மூலம் ஒரு நல்ல பொருளாதார திட்டமும் அமலில் இருந்தது. ஒரே பைத்துல்மால் இருந்தது .
இவைகளையெல்லாம் கருத்தில் கொள்ளாது ,இந்த முஸ்லிம் நாட்டுத் தலைவர்கள் அன்வர் சாதத் ,கர்னல் கடாபி போன்றோர் மன்னர் ஃபைசலை 'அமீருல் மூமினீனாக ஆக்க முயன்றிருப்பது குருடனை ராஜபார்வை பார்க்கச் சொன்ன கதையை நமக்கு நினைவூட்டுகிறது .
ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு ஒரு போப் இருப்பதுபோல் முஸ்லிம்களுக்கு ஒரு தலைவர் பெயரளவில் இருக்க வேண்டும் என்று இந்த முஸ்லீம் நாட்டு அதிபர்கள் எண்ணினார்களா? ' அமீருல் மூமினீனாக ' ஒருவரை ஏற்றுக்கொண்டால் அன்வர் சாதத்தும் ,ஜுல்பிஹார் அலி பூட்டோவும் ஜோர்தான் மன்னர் ஹுசேனும் ,மொராக்கோ மன்னர் ஹஸனும் ,ஈரான் மன்னர் ஷரீஸா பெஹ்லவியும் , குவைத் மன்னரும் இன்னும் எங்கெல்லாம் முஸ்லிம் ஆட்சி இருக்கின்றதோ அந்நாடுகளின் அதிபர்கள் எல்லாம் தமது பதவிகளை துறந்து அந்த அமீருல் மூமினீனின் நேரடி ஆட்சியின் கீழ் தமது நாடுகளை கொண்டுவர வேண்டுமே!
உலக முஸ்லிம்கள் அனைவரும் சுன்னி,ஷியா ,காதிரிய்யா ,சாதுலிய்யா, இஸ்மாலியா என்பன போன்ற பேதங்களை விட்டுவிட்டு ஒரே தலைவரின் ஆணைக்குட்பட்ட மக்களாய் மாற வேண்டுமே ! இவ்வாறில்லாமல் ஒருவர் அமீருல் மூமினீனாக நியமிக்கப்படுவதாக இருந்தால் அந்த அமீருல் மூமினீனுக்கும் களிமண்ணால் செய்த ஒரு பொம்மைக்கும் எவ்வித வேறுபாடும் இருக்காதே!
பதவி மோகம் மனிதனோடு கூடப்பிறந்தது. உலக முஸ்லிம்களின் தலைவர் என்று மேன்மையானதொரு பதவி தம்மை தேடி வந்தும் மன்னர் ஃபைசல் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டாரென்றால் அதற்கு காரணம் இருக்கிறது. எந்த உயர்ந்த பதவியை இந்த முஸ்லீம் நாட்டு அதிபர்கள் மன்னர் ஃபைசலுக்கு அளிக்க முனைந்தார்களோ அந்த கண்ணியத்திற்குரிய பதவி ஏற்கனவே இறைவனால் இன்னொருவருக்கு தரப்பட்டிருக்கிறது .
ஆம்! "உங்களுக்கு முன்னுள்ளவர்களில் கலீஃபாக்களை ஏற்படுத்தியது போல் உங்களுக்கும் கலீபாக்களை ஏற்படுத்துவதாக நன்நம்பிக்கை கொண்டு நற்செயல்களில் ஈடுபட்டிருப்போருக்கு இறைவன் வாக்குறுதியளிக்கின்றான். (திருக்குர்ஆன் 24 -56) என்று திருமறை கூறுவதற்கிணங்க அஹ்மதிய்யா இயக்கத்தில் இறைவன் கிலாஃபத்தை ஏற்படுத்தியிருக்கின்றான் .
நான் இறைவனால் நியமிக்கப்பட்ட கலீஃபா! எனக்கும் இறைவனுக்கும் தொடர்பு இருக்கின்றது என்று வாதிக்கும் ஒரு தலைவர் அஹ்மதிகளுக்கு இருக்கிறார் இன்று! உலகெங்கும் வாழ்கின்ற அஹ்மதிகள் அவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்தாலும் ஐரோப்பாவில் இருந்தாலும் அல்லது அமெரிக்காவில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரே தலைவரின் கலீஃபாவின் ஆணைக்கு உட்பட்டவர்களாகவே வாழ்கின்றார்கள்.
இன்றைய உலகில் எத்தனையோ முஸ்லிம் பிரிவுகள் இருக்கின்றன .ஆனால் அஹ்மதிய்யா இயக்கத்தை தவிர எந்தப் பிரிவிலும் இத்தகைய தன்மை இல்லை. இறைவனுக்கும் தனக்கும் தொடர்பு இருக்கிறது என்று வாதிக்கும் ஒரு தலைவர் வேறு எந்தப் பிரிவிலும் இல்லை. இருக்கவும் முடியாது !
இது ஒரு நபிமொழியை நம் நினைவுக்கு கொண்டு வருகிறது. ஒரு காலம் வரும் முஸ்லிம்கள் 73 கூட்டங்களாக பிரிவார்கள். அதில் ஒரு கூட்டத்தை தவிர ஏனையோர் நரகம் செல்வார்கள் என்று நபி பெருமானார் (ஸல் ) அவர்கள் அறிவித்த போது அந்தக் கூட்டம் எது ? என்று சஹாபாக்கள் வினவினார்கள் .அப்போது நபி பெருமானார் (ஸல் )அவர்கள் "நானும் எனது சஹாபாக்களும் ஆகிய நீங்களும் இருப்பதுபோல் இருப்பவர்களே அவர்கள்" என்று விடையளித்தார்கள் .
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களை தம் அருந்தலைவராக ஏற்றிருந்தார்கள் சஹாபா பெருமக்கள் .அவர்களின் ஒவ்வொரு ஆணைக்கும் கீழ்ப்படிந்து அப்படியே அவைகளை நிறைவேற்றியிருந்தார்கள் .அன்னாரின் மறைவுக்கு பின் 'அமீருல் மூமினீன் 'கள் ஆட்சி புரிந்தார்கள் .அவர்களையும் அந்த சஹாபா பெருமக்கள் தங்களின் ஒப்புயர்வற்ற தலைவர்களாக ஒருமனதாக ஏற்று ,அவர்களின் கட்டளைகள் அனைத்திற்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்கள். இத்தகைய ஒரு நிலை இன்று அஹ்மதிய்யா ஜமாஅத்தில் மாத்திரமே இருக்கின்றது.
தவ்ராத்தை ஏற்றுக் கொண்ட மக்கள் பல பிரிவுகளாக பிரிந்து சிதறுண்ட போது அவர்களை ஒன்றுபடுத்த ஹஸ்ரத் மூஸா (அலை ) அவர்களின் கலீஃபாவாக நபி ஈஸா (அலை)அவர்கள் தோன்றியதுபோல அண்ணல் மாநபியை பின்பற்றிய உயர் சமூகம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்த இக்கால கட்டத்தில் அந்த மாநபியின் நிழலாக ,உலக முஸ்லிம்களுக்கு வழிகாட்டும் தலைவராக இறைவன் தோன்றச் செய்தான் . அச் சீர்திருத்த செம்மலின் மறைவுக்குப் பின் கிலாஃபத் மலர்ந்தது .
இடையனற்ற ஆட்டு மந்தையைப் போல் சிதறுண்டு ஆன்மீகத் துறையிலும் ,பௌதிக துறையிலும் வீழ்ச்சியடைந்திருக்கும் இஸ்லாமிய சமுதாயம் ஒன்றுபட்டு அன்று பெற்றிருந்த மகத்துவத்தை,மாண்பை மீண்டும் பெற வேண்டுமானால் அதற்காக இறைவனால் இன்று திறக்கப்பட்ட ஒரே வழி அஹ்மதிய்யா கிலாஃத்தின் கீழ் ஒன்று படுவது தான்.
மர்ஹூம் எம் .கலீல் அஹமது சாஹிப்
(1974 ஆம் ஆண்டு சமாதானவழி இதழில் வெளிவந்த கட்டுரை)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None