ஹிஜாப் என்ற அரபு வார்த்தைக்கு திரை, தடுப்பு, மதில் என்று பல பொருட்கள் உண்டு. திரை என்ற அர்த்தம் இருப்பதால், அது பெண்களுக்கான ஒன்றாக மட்டுமே கருதப்பட்டுவிட்டது போலும்!
ஹிஜாப் என்பது பெண்களுக்காக மட்டுமோ அல்லது அது ஒரு மத அடையாளமோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஒரு மதத்தை சார்ந்த விஷயமோ அல்ல. மாறாக ஹிஜாப் என்பது இப்பூமியில் உள்ள ஒவ்வொரு பெண் மற்றும் ஆணின் ஒழுக்கத்தை நிர்ணயிக்கும் ஆடையாகும் அடையாளம் ஆகும். ஆனால் இன்று நாம் பார்க்கிறோம் கர்நாடகா அரசு ஹிஜாபை ஒரு மதம் சார்ந்த அடையாளமாக பார்க்கிறது. ஆகவே இதை பள்ளி மற்றும் கல்லூரியில் தடை செய்து வருவதை நாம் பார்க்கிறோம்.
தொன்று தொட்ட காலத்திலிருந்து ஒவ்வொரு மார்க்கமும் மதமும், தமது பெண்களுக்கு இதை கடைபிடிக்க சொல்கிறது என்பதை இவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்து சமூகத்தின் வேதமாகிய ரிக் வேதத்தில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது:
"உனக்காகப் படைத்த உன் சீமாட்டிக்குக் கூறு! உன்னுடைய கண்களைத் தாழ்வாக்கிக் கொள்! பார்வையை மேல் நோக்காதே! அது உன் பாதத்தை நோக்கி இருக்கட்டும்! பிறர் எவரும் உன் வெளித்தோற்றத்தைப் பார்க்கா வண்ணம் திரையிட்டுக் கொள்!” (ரிக்வேதம் மண்டலம் 8, சூக்தம் 33, வசனம்19)
அதே போன்று பைபிளில் இவ்வாறு பதிவு செய்யபட்டுள்ளது:
"ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே. (1 கொரிந்தியர் 11:5)
“தூதர்களினிமித்தம் பெண்கள் தலையின் மேல் முக்காடிட்டுக் கொள்ள வேண்டும்.” என்று பவுல் கூறுகின்றார். (கொரிந்தியா 11:10 )
"ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்து, தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்தபோது, ஒட்டகங்கள் வரக்கண்டான்.
ரெபெக்காளும் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கைக் கண்டபோது,
ஊழியக்காரனை நோக்கி: அங்கே வெளியிலே நமக்கு எதிராக நடந்துவருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக்கொண்டாள். (ஆதியாகமம் 24:63-65)
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. (மத்தேயு 5:28)
குர்ஆனும் இதைத்தான் கூறுகிறது:
"நீர், நம்பிக்கை கொண்ட ஆண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைக் கீழ்நோக்கி வைத்திருக்குமாறும், தங்கள் மறைவான உறுப்புகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் கூறுவீராக. இது அவர்களுக்கு மிகத் தூய்மையானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதனை நன்கு அறிபவனாவான். (24:31)
நீர் நம்பிக்கை கொண்ட பெண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைக் கீழ்நோக்கி வைத்திருக்குமாறும், தங்கள் மறைவான உறுப்புக்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும், தானாகவே வெளிப்படுவதைத் தவிர3 தங்கள் அலங்காரத்தை வெளிப்படுத்தாமலிருக்குமாறும், தங்கள் முந்தானை இடையில் தங்கள் மார்புகளை மறைத்து அணிந்து கொள்ளுமாறும், அவர்கள் தங்கள் கணவர்கள், அல்லது தங்கள் தந்தையர்கள், அல்லது தங்கள் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தங்கள் ஆண் மக்கள் அல்லது தங்கள் கணவர்களின் ஆண் மக்கள் அல்லது சகோதரர்கள் அல்லது தங்கள் சகோதரர்களின் ஆண் மக்கள் அல்லது தங்கள் சகோதரிகளின் ஆண் மக்கள் அல்லது தங்கள் (இனத்தைச்) சேர்ந்த பெண்கள் அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் அல்லது பாலுணர்ச்சிக்கு அப்பாற்பட்ட ஆண் ஊழியர்கள் அல்லது பெண்களின் மறைவான உறுப்புக்களைப் பற்றித் தெரியாத சிறுவர்கள் ஆகியவர்களைத் தவிர வேறெவரிடமும் தங்கள் அலங்காரத்தை வெளிப்படுத்தாமலிருக்குமாறும், தங்கள் அலங்காரத்துள் மறைத்து வைத்திருப்பது வெளிப்பட வேண்டுமென்பதற்காகத் தங்கள் கால்களை (நிலத்தில் வேகமாக)த் தட்டி நடக்காமலிருக்குமாறும் கூறுவீராக. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் யாவரும் வெற்றி பெற வேண்டுமென்றால் அல்லாஹ்வின் பால் திரும்புங்கள். (24:32)
ஆனால் துரதிஷ்டவசமாக காலம் செல்ல செல்ல, இந்த கட்டளையை பெண்கள் கடைபிடிப்பதை தவறிவிட்டனர். ஆனால், இன்று இஸ்லாத்தில் மட்டுமே பெண்கள் இதை முறையாக கடைபிடித்து வருகின்றனர். ஆதலால் இந்த ஹிஜாப் இஸ்லாமிய பெண்களுக்கு மட்டுமே உரிய ஆடை என்று கருதுவது சரியானது கிடையாது. மாறாக இந்த ஒழுக்கமான ஆடையை ஒவ்வொரு பெண்களும் கடைபிடிக்க வேண்டும். இதனால் அப்பெண்ணின் ஒழுக்கம் மட்டும் அல்ல மாறாக ஓர் ஆணின் ஒழுக்கமும் சமுதாயத்தில் நிலைத்து நிற்கும். காரணம் இக்கலியுக காலத்தில் நாம் பெண்களுக்கு நிகழும் பல்வேறு சம்பவங்களை பார்த்து வருகிறோம். இதற்கு முக்கிய காரணம் பெண்கள், ஆடை போட்டுக் கொள்வது எனது உரிமை. அதை நான் எவ்வாறு வேண்டுமானாலும் போட்டுக் கொள்வேன் என்ற சிந்தனையை தவறாக பயன்படுத்தி; தமது கவர்ச்சியை சமூகத்தில் வெளிப்படுத்துகின்றனர். இதை காணும் ஆண்கள் தம்மை கட்டுப்படுத்திக் கொள்ளாது, தமது வெட்கக்கேடான செயலை சில சமயம் அதே பெண்களிடம் வெளிப்படுத்துகின்றனர். இல்லை என்றால் தம்மை எதிர்க்க முடியாத நிலையில் இருக்கும் குழந்தைகளிடம் காட்டுகின்றனர். இதை நாம் அவ்வப்போது காணொளியில் செய்தி வாயிலாக அறிந்து வருகிறோம்.
ஆண்களும் பலகீனமாகவே படைக்கப்பட்டுள்ளனர். ஆகவேதான் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆண்கள் இத்தகைய தீய செயலில் வீழ்ந்து விடாமல் இருக்க ஓர் அழகிய அறிவுரையை கூறிச் சென்றுள்ளாகள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஓர் அந்நியப் பெண் மீது திடீரெனப் பார்வை பட்டுவிட்டால் உடனே பார்வையைத் திருப்பிக்கொள்ளுங்கள். அவள் மீது இரண்டாவது பார்வையைச் செலுத்தாதீர்கள். முதல் பார்வை உம்முடையது; இரண்டாது பார்வை உம்முடையதன்று. மாறாக, ஷைத்தானுடையது.”
ஷைத்தான் என்ற தீய செயலை தூண்டக்கூடியவன், உன்னை வழிகெடுத்து தீய செயலில் தள்ளி விடாமல் இருக்க வேண்டும் என்று சொன்னால் நீ உனது பார்வைக்கு திரையிட வேண்டும். இல்லை என்றால் வெட்கக்கேடான செயலில் நீ வீழ்வது மட்டுமல்ல, சமுதாயத்திலும் சீர்கேடுகள் தலை விரித்து ஆட ஆரம்பித்து விடும். இத்தகைய செயல்கள் ஒரு சமுதாயத்தில் வெட்க உணர்வு இல்லாமல் ஆகி விடுவதற்கு காரணமாகவும் அமைந்து விடுகிறது. இதை சிந்தனை படைத்த சில மக்கள் அறிகின்றனர். ஆனால் அதை எவ்வாறு தவிற்பது. அதிலிருந்து நமது பெண்மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்று அறியாது தவிக்கின்றனர்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் 7% உயர்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது.
இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டில் நாளொன்றுக்கு சாராசரியாக 87 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 4 லட்சத்து 5 ஆயிரத்து 861 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 சதவீதம் அதிகமாகும்.
இதேபோல், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களும் 4.5% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகு நிலை சமூகத்தில் உருவாகாமல் இருக்கவே நமக்கு முன் வந்த வேதங்கள் யாவும் கூறிய போதனைகளை நாம் மேல பதிந்திள்ளோம். ஆனால் அதை படித்து சிந்தித்து அதன்படி நடப்பதற்கு யாரும் இன்று இல்லை என்பது வேதனைக்குரியதாகும். இதனை முறையாக கடைபிடித்து வருபவர்கள் ஓநாய்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்கின்றனர். ஆனால் இதை முறையாக கடைபிடிக்காதவர்கள் ஓநாய்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனர்.
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் ஐந்தாவது ஆன்மீக தலைவர் (கலீஃபா) ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மது (அய்யதஹுல்லாஹ்...) அவர்கள் 2015 -ஆம் ஆண்டு U.K.ஆண்டு மாநாட்டின் பெண்கள் மத்தியில் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறுகின்றார்கள்:
"ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்: “இந்தக் காலம் எப்படிப்பட்ட பலவீனமான காலம் என்றால், எந்தக் காலத்திலாவது பர்தா அணியும் பழக்கம் இல்லாதிருந்தாலும் இந்தக் காலத்தில் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் இது கலியுகமாகும். பூமியில் தற்போது குழப்பமும், சோதனையும், மது அருந்துவதும் மேலோங்கி இருக்கிறது. மேலும் உள்ளங்களில் நாத்திகத்தின் சிந்தனைகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இறைவனுடைய கட்டளைகளை நிறைவேற்றுவதன் முக்கியத்துவம் உள்ளங்களிலிருந்து வெளியேறி விட்டன. நாவுகளில், எல்லாம் இருக்கின்றன; சொற்பொழிவுகளும், தர்க்க சாஸ்திரமும் நிரம்பி காணப்படுகின்றன. ஆனால் உள்ளம் ஆன்மீகத்திலிருந்து வெற்றிடமாக இருக்கிறது. இப்படிப்பட்ட காலத்தில் நமது அப்பாவி ஆடுகளை ஓநாய்களின் காடுகளில் மேயவிடுவது எப்படி பொருத்தமானதாக இருக்க முடியும்?
"திருக்குர் ஆன் முஸ்லிம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்கள் பார்வைகளை தாழ்த்தி வைக்குமாறு கட்டளையிடுகிறது. அதாவது பெண்களுக்கு மட்டும் பர்தாவை போதிக்கவில்லை; ஆண்களுக்கும் பர்தாவை போதிக்கிறது. அவர்கள் ஒருவர் மற்றவரைப் பார்க்கவே மாட்டார்கள் என்றால் பாதுகாப்பாக இருப்பார்கள்.... பார்வைதானே ஆபாசமான சிந்தனைகளை உருவாக்குகிறது!"
“இஸ்லாமிய பர்தா என்பதன் பொருள், பெண் கைதியைப் போன்று வீட்டில் அடைத்து வைக்கப்பட வேண்டும் என்பது ஒருபோதும் அன்று. திருக்குர்ஆனின் பொருள் என்னவெனில், பெண் திரையிட வேண்டும். அவர்கள் அந்நிய ஆணைப் பார்க்கக் கூடாது. சமூக விஷயங்களுக்காக எந்தப் பெண்களுக்கு வெளியே செல்ல வேண்டிய தேவை இருக்கிறதோ அவர்களுக்கு வீட்டிலிருந்து வெளியே செல்வது தடையல்ல. அவர்கள் தாராளமாகச் செல்லட்டும். ஆனால் பார்வையின் பர்தா அவசியமானதாகும். பார்வைகளை தாழ்த்தி வைக்கவும், நன்மைகளை ஈட்டுவதில் பெண்களுக்கு எந்த விதத்திலும் வேறுபாடு வைக்கப்படவில்லை. அவர்கள் நன்மைகளில் ஆண்களுக்கு சரிசமமாக வர வேண்டாம் என்று கூறப்படவில்லை. அவர்கள் நன்மைகளில் இணையாக செயல்படுவது தடுக்கப்படவுமில்லை. பெண்களை விலங்கிட்டு வையுங்கள் என இஸ்லாம் எங்கே கூறியிருக்கிறது? இஸ்லாம் ஆபாசத்தின் அடிப்படையை தகர்க்கிறது.”
ஆக, இவ்வாறான வெட்கக்கேட்டை தவிர்த்து வெட்க உணர்வை நிலை நாட்டவே, வெட்க கேடான செயலை மூலையில் கிள்ளி எறிந்திடவே, பெண்கள் தமது உடல், உடல் உறுப்புகள் மற்றும் தமது அழகை மற்ற அந்நிய ஆண்களுக்கு முன்னாள் வெளிப்படுத்தாமல் இருக்க இஸ்லாம் இவ்வாறான ஹிஜாப் என்ற ஆடையை கடைபிடிக்க சொல்கிறது. மட்டுமல்ல மாற்று மதமும் இதை கடைபிடிக்க சொல்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாம் மட்டும் இதனை கூறவில்லை. இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பாக வந்த வேதங்களின் படி மக்கள் செயல்படாது இருந்ததின் விளைவாகவே; குர்ஆன் என்ற அழகிய வேதத்தை மக்களின் நேர்வழிக்காக சமூகத்தின் சீர்திருதத்திற்காக இறைவன், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலமாக இந்த மனித குலத்திற்கு தந்தான். அதில் பல அறிய அறிவுரைகளை கூறுவதோடு, பெண்கள், ஆண்கள் மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்த கருத்துக்களை இறைவன் பதிவு செய்துள்ளான். அதில் ஒன்றுதான், பர்தா என்ற கட்டளை.
ஆக, ஹிஜாப் என்பது ஒரு பெண்ணின் ஒழுக்கத்தை மட்டும் பேணி காட்கும் விஷயம் அல்ல மாறாக ஒரு சமுதாயத்தில் சீர்கேடு, வெட்கக்கேடு நிலைபெறாமல் இருக்கவும், வெட்க உணர்வுகள் நிலைபெற வேண்டும் என்பதற்காகவும் இஸ்லாம் மட்டுமல்ல ஒவ்வொரு மதமும் கடைபிடிக்க சொல்கிறது.
எனவே, ஒரு மனிதன் அது பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, உள்ளளவில் தூய்மையாக வேண்டும் சமுதாயத்திலிருந்து வெட்கக்கேடான செயலை நீக்க வேண்டும் என்றால் அதற்கு பல வழிகளை குர்ஆனும் சரி இன்னும் பல வேதங்கள் நமக்கு வழிகாட்டுகின்றன. அதாவது, அந்நிய ஆண்கள் மற்ற பெண்களை கூர்ந்து பார்த்து தடுமாறி வீழ்ந்து விடாமல் இருப்பதற்கு அவர்கள் தமது பார்வைகளை கீழ்நோக்கி வைத்துக் கொள்ளட்டும் என்று கூறுவதோடு, பெண்களும் தமது அழகு மற்றும் இதர உறுப்புக்களை அது கவர்ச்சியாக வெளிப்படாமல் இருக்கும் வண்ணம் ஒரு மேலாடையை அணிந்து கொள்ளுமாறு வலியுறுத்தி கூறுகிறது.
ஆகவே மாற்று மத அன்பர்கள், ஹிஜாப் என்ற இந்த ஒழுக்கமான ஆடையை ஒரு குறிப்பிட்ட ஒரு மதத்தின் அடையாளம் என்று கருதாமல்; இந்த ஆடை முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் அல்ல மாறாக சமுதாயத்தில் வாழும் அனைத்து மதத்தை சார்ந்த பெண்களுக்கும் கடமையானது என்று கருத வேண்டும். மேலும் ஓர் ஆணையும் வெட்கக்கேட்டிலிருந்து இது பாதுகாக்கிறது என்று புரிந்து கொண்டு, நடுநிலையுடன் சிந்தித்து சமூகத்தில் சீர்குலைவை தவிர்த்து அமைதியை நிலைநாட்ட முயற்சிக்க வேண்டும்.
சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக. ஆமீன்
ஆக்கம்: இப்னு ரஹ்மத்
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None