“லா நபுவ்வத்த இல்லல் முபஷ்ஷிராத்” ஹதீஸின் விளக்கம்

 


அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் எதிரிகள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு இனி எந்த நபியும் கிடையாது என்பதற்கு ஆதாரமாக  لَا نَبُوَّۃَ اِلَّا الْمُبَشِّرَات என்ற ஹதீஸை வைத்து, பாருங்கள் நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள் அதாவது இனி முபஷ்ஷிராத்தை தவிர எந்த நுபுவ்வத்தும் கிடையாது. ஆகவே இனி எந்த நபியும் இந்த உம்மத்தில் வர முடியாது என்று தவாறாக எண்ணியவாறு கூறுகின்றனர். இதற்கான சிறு விளக்கத்தை நாம் கீழே காண்போம்.

 لَا نَبُوَّۃَ اِلَّا الْمُبَشِّرَات என்ற ஹதீஸ் புகாரி ஹதீஸிலும் வந்துள்ளது. புகாரி ஹதீஸில் இந்த ஹதீஸ் இவ்வாறு வந்துள்ளது;

 لَمْ یَبْقَ مِنَ النَّبُوَّۃِ اِلَّاالْمُبَشِّرَاتُ

அதாவது நபித்துவத்தில் முபஷ்ஷிராத்தை தவிர வேறு ஏதும் மிஞ்சவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வருகிறது. (ஸஹீஹ் புகாரி கிதாபுத் தஃபீர்)

இந்த ஹதீசிலிருந்து தெளிவாக விளங்குவது என்னவென்றால் நபித்துவம் முழுவதுமாக முடிந்துவிடவில்லை மாறாக இதனின் ஒரு பகுதி அதாவது "அல்-முபஷ்ஷிராத்" மிஞ்சியுள்ளது. மேலும் தெளிவாகுவது என்னவென்றால் வாக்களிக்கப்பட்ட மஸீஹிற்கு இந்த உம்மத்தில் நபித்துவம் என்ற பதவியை இதே "அல்-முபஷ்ஷிராத்" தின் காரணமாகவே வழங்கப்பட்டுள்ளது. இது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை பின்பற்றுவதன் விளைவாக கிடைத்துள்ளது.

இது குறித்து ஹதீஸில் இவ்வாறு நாம் காண்கிறோம் அதாவது "அல்-முபாஷ்ஷிராத்" என்றால் "ஸாலிஹானா கனவு காட்சி" ஆகும். இவ்வாறு "ஸாலிஹானா கனவை" நுபுவ்வத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது. ஹதீஸில் இவ்வாறு வருகிறது;

قال رسول اللہ لانبوۃ بعدی الا المبشرات قیل وما المبشرات قال الرویاء الحسنۃ او قال الرویاء الصالحۃ

அதாவது நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள், "எனக்கு பிறகு நுபுவ்வத்தில் முபஷ்ஷிராத் என்ற பகுதி மட்டுமே எஞ்சியுள்ளது. முபஷ்ஷிராத் என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது; அதற்கு பதில் அளித்தவாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "இதன் பொருள் ஸாலிஹானா கனவு காட்சி ஆகும். (முஸ்னது அஹ்மது பின் ஹன்பல் மர்வியாத் அபூ துஃபைல்) 

இரண்டாவது விஷயம் என்னவென்றால், அனைத்து நபிமார்களின் நுபுவ்வத் முபஷ்ஷிராத் மற்றும் முன்ஸிராத் இவற்றை சார்ந்தே இருக்கின்றன. இதை பற்றி திருக்குர்ஆனில் நாம் இவ்வாறு காண்கிறோம்;

وَمَا نُرْسِلُ الْمُرْسَلِیْنَ اِلَّا مُبَشِّرِیْنَ وَمُنْذِرِیْنَ

அதாவது, நற்செய்தி உடையவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமன்றி நாம் தூதர்களை அனுப்புவதில்லை. (6:49)

ஆக இதிலிருந்து தெளிவாக்குவது என்னவென்றால், அனைத்து நபிமார்களின் நுபுவ்வத் முபஷ்ஷிராத் மற்றும் முன்ஸிராத் என்பதை சார்ந்து இருக்கிறது.

சாதாரண மனிதனின் முபஷ்ஷிராத் வெறும் கனவு மட்டுமே. ஆனால் நல்லடியார்கள், இறை நேசர்கள் மற்றும் நபிமார்களின் முபஷ்ஷிராத் என்பது, கஷ்ஃப், இல்ஹாம் மற்றும் ஷரீஅத் அற்ற வஹீயாக இருக்கிறது. ஆகவே எதிரிகள் குறிப்பிடும் இந்த ஹதீஸில் ஷரீஅத் வகை நுபுவ்வத் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அல்லாமா இப்னு ஹஜர் அவர்கள் இந்த ஹதீஸிற்கான விளக்கத்தை கூறியவாறு இவ்வாறு தமது நூலில் பதிவு செய்துள்ளார்கள்;

اللام فی النبوۃ للعھد والمراد نبوتہ والمعنی لم یبق بعد النبوۃ المختصۃ بی الا المبشرات

அதாவது, இந்த ஹதீஸில் வரக்கூடிய "அன்நுபுவ்வத்" என்பது குறிப்பாக ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத் ஆகும். (அல்லாமல் பொதுவான நுபுவ்வத் அல்ல) மேலும் இதன் பொருள் என்னவென்றால், எனது பிரத்தியேகமான நுபுவ்வத்திலிருந்து ஷரீஅத் வகை நிறைவடைந்துவிட்டது. ஆனால் முபஷ்ஷிராத் எஞ்சியுள்ளது. (ஃபத்ஹுல் பாரி பாகம் 12 பக்கம் 375 - தார் நஷருல் குதுபுஸ் சலாமியா லாஹூர்)

 لَمْ یَبْقَ مِنَ الْمَالِ اِلَّا الدَّرَاھِمُ یا لَمْ یَبْقَ مِنَ الطَّعَامِ اِلَّا الْخُبْزُ

அதாவது நிதியில் திர்ஹமை தவிர்த்து வேறு ஏதும் மிஞ்சவில்லை. அல்லது உணவில் ரொட்டியை தவிர வேறு ஏதும் மிஞ்சவில்லை என்பது போன்று உள்ளது. ஆக இதிலிருந்து தெளிவாகுவது என்னவென்றால் எவ்வாறு ரொட்டி உணவின் ஒரு பகுதியாக இருக்கிறதோ அவ்வாறு திர்ஹம் நிதியின் ஒரு பகுதியே ஆகும். இங்கு திர்ஹம் என்பதை நிதி இல்லை என்றோ, ரொட்டியை அது உணவு கிடையாது என்றோ கூற முடியுமா! முடியாது. அவ்வாறு முபஷ்ஷிராத் என்பது நுபுவ்வத்தின் ஒரு பகுதியாக விளங்குவதினால் அதுவும் நுபுவ்வத் ஆகும் என்பதை விளங்கி கொள்ள வேண்டும்.

மூன்றாவது விஷயம் என்னவென்றால், அல்-முபஷ்ஷிராத் என்பது நுபுவ்வத்தின் தனித்துவ பகுதியாகும். ஆனால் ஷரீஅத் கொண்டு வருவது நுபுவ்வத்தின் தற்காலிக பகுதியாகும். இவ்வாறு சில நபிமார்களுக்கு புது ஷரீஅத் கிடைத்துவந்துள்ளது. மேலும் சில நபிமார்கள் தமக்கு முன்பு வந்த ஷரீயத்திற்கு கீழ் இருந்தனர். மேலும் அந்த ஷரீயத்தை கொண்டு தமது சமுதாயத்திற்கு போதனை வழங்கி வந்தார்கள். அல்லாஹ் கூறுகின்றான்:

اِنَّاۤ اَنۡزَلۡنَا التَّوۡرٰٮۃَ فِیۡہَا ہُدًی وَّ نُوۡرٌ ۚ یَحۡکُمُ بِہَا النَّبِیُّوۡنَ الَّذِیۡنَ اَسۡلَمُوۡا لِلَّذِیۡنَ ہَادُوۡا

நிச்சயமாக நேர்வழியும் ஒளியும் பெற்றிருந்த தவ்ராத்தை நாம் இறக்கினோம். (நமக்கு) கட்டுப்பட்டு நடந்த நபிமார்கள் அதனைக் கொண்டு யூதர்களுக்கு தீர்ப்பு வழங்கினர். (5:45)

ஹஸ்ரத் ஷேக்கே அக்பர் முஹியூத்தீன் இப்னு அரபி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

عَلِمْنَا اَنَّ التَّشْرِیْعَ فِی النُّبُوَّۃِ اَمْرٌ عَارِضٌ بِکَوْنِ عِیْسٰی عَلَیْہِ السَّلَامُ یَنْزِلُ فِیْنَا حَکَمًا مِّنْ غَیْرِ تَشْرِیْعٍ وَھُوَنَبِیٌّ بِلاَ شَکٍّ

அதாவது, ஷரீயத்தை கொண்டு வருவது தற்காலிக விஷயமாகும் என்பதை நாம் அறிந்து கொண்டோம். (அதாவது நுபுவ்வத்தின் தனித்துவ பகுதி கிடையாது) இதன் காரணமாகவே ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் நம்மிடத்தில் நீதியாளராக ஷரீஅத் அல்லாமல் இறங்குவார்கள். மேலும் அவர்கள் எவ்வித சந்தேகமுமின்றி நபியாக இருப்பார்கள்." (ஃபுத்தூஹாத்தே மக்கிய்யா பாகம் 1 பக்கம் 545 - தாருஸ் சாதிர் பேரூத்தில் அச்சிடப்பட்டது)

ஆக, நுபுவ்வத்தின் தனித்துவ பகுதியானது அல்-முபஷ்ஷிராத்தே ஆகும் என்பது தெளிவாகிறது. இதனை எதிரிகள் முன்ஸிராத்தின் பொருளாக கருதுகின்றனர். திருக்குர்ஆனில் நபிமார்களின் மகத்துவமாக "தூதர்கள் முபஷ்ஷிரீன்களாகவும், முன்ஸிரீன்களாகவும் இருந்தனர்" என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்கள் எவ்வித சந்தேகமுமின்றி ஷரீஅத் கொண்டு வராத நபியாகவும், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் உம்மத்தியாகவும், மேலும் ஆலிம் வட்டாரத்திற்கு தீர்ப்பளிப்பவராகவும், நீதியாளராகவும் திகழ்கின்றார்கள்.

நான்காவது விஷயம் என்னவென்றால், நுபுவ்வத்தை பற்றி ஹஸ்ரத் இப்னு அரபி அவர்கள் கூறுகின்றார்கள்;

وَلَیْسَتِ النُّبُوَّۃُ بِاَمْرٍ زَائِدٍ عَلَی الْاَخْبَارِ الْاِلٰھِیْ

அதாவது, நுபுவ்வத் என்பது இறைவனிடமிருந்து அதிகமாக மறைவான செய்தி கிடைப்பதை தவிர வேறு மேலதிகமாக எதுவும் கிடையாது. (ஃபுத்தூஹாத்தே மக்கிய்யா பாகம் 2 பக்கம் 375 - தாருஸ் சாதிர் பேரூத்தில் அச்சிடப்பட்டது)

இது குறித்து திருக்குர்ஆனும் பறைசாற்றுகிறது. அதாவது ஒரு நபிக்கு மறைவான செய்தி அதிகமாக கிடைக்க வேண்டும் என்பது நிபந்தனையாக இருக்கிறது. அல்லாஹ் கூறுகின்றான்;

عٰلِمُ الۡغَیۡبِ فَلَا یُظۡہِرُ عَلٰی غَیۡبِہٖۤ اَحَدًا۔ اِلَّا مَنِ ارۡتَضٰی مِنۡ رَّسُوۡلٍ

அதாவது, அவன் மறைவானதை அறிபவனாவான். மேலும் அவன் தனது மறைவான ஞானத்தை எவருக்கும் வெளிப்படுத்துவதில்லை. அவன் தேர்ந்தெடுத்த தூதரைத் தவிர, (72:27-28)

அதிகமாக இறைவனோடு தொடர்பு கொண்டு மறைவான செய்திகளை பெறாத ஒருவர் நபியாக ஆக முடியாது என்பது பகுத்தறிவான சிந்தனையாகும். பிச்சைக்காரனிடமும் ஒரு சில நிதிகள் இருக்கின்றன. ஆனால் ஒரு அரசனிடம் இருக்கும் நிதியோடு ஒரு பிச்சைக்காரனின் நிதி போட்டியிட முடியாது. இவ்வாறு சூரிய ஒளிக்கு முன்பு மெழுகுவர்த்தியின் ஒளிக்கு என்ன தகுதி இருக்குமோ அதே தகுதிதான் ஒரு நபிக்கு  கிடைக்கும் வஹீ, கனவு மற்றும் ஆன்மீக காட்சியை விட ஒரு சாதாரண மனிதனுக்கு கிடைக்கும் வஹீ, கனவு மற்றும் ஆன்மீக காட்சிக்கு இருக்கின்றன. ஆகவே இவ்வாறு அதிகமான மறைவான செய்தி கிடைப்பதின் அடிப்படையில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் வரக்கூடிய வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களை அல்லாஹ்வின் நபி என்று கூறி அழைத்துள்ளார்கள்.

ஆக்கம்: இப்னு ரஹ்மத்

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.