மார்க்கங்களின் தோற்றுநர்களுக்கு கண்ணியம் அளிப்பது உலக அமைதிக்கு உத்தரவாதமாகும்




மனிதனின் நல்லொழுக்க, ஆன்மீக முன்னேற்றத்திற்காக அல்லாஹ் நபிமார்களின் மூலமாக நேர்வழிகிக்கான விளக்கத்தை ஏற்றியிருப்பதன் துவக்கம் ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்கள் மூலமாக வெளிப்பட்டது. மேலும் அதன் உயர்ந்த படித்தரம் உலகங்களின் தலைவர் ஹஸ்ரத் முஹம்மது அரபி (ஸல்) அவர்களின் மூலமாக அதன் எல்லையை எட்டியது. இவ்வாறு இந்த ஆன்மீக போதனைகள் அவ்வப்போது தோன்றி 1,24,000 நபிமார்களின் ஓட்டுமொத்த முயற்சிகளினால் வளர்ந்தோங்கி வந்தது. இறுதியில், இன்று நான் உங்களுக்காக , உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கியுள்ளேன். மேலும் உங்களுக்கு என் அருளை நிறைவு செய்துள்ளேன். மேலும் உங்களுக்கு மார்க்கமாக, இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்துள்ளேன் (திருக்குர்ஆன் 5:4) என்ற திருக்குர்ஆனின் கூற்றின் மூலமாக தனது இறுதி எல்லையை மேற்கொண்டவாறு முழுமையின் கடைசி படித்தரங்களை எட்டியது.
நபிமார்கள் மூலமாக கொண்டு வரப்பட்ட அனைத்து ஆன்மீக போதனைகளையும் மதிப்புக் கண் கொண்டு பார்த்தவாறு, அவர்களுக்கு கண்ணியமளிக்குமாறும், மதிப்பளிக்குமாறும் அல்லாஹ் திருக்குர்ஆனில் போதித்துள்ளான். மேலும் அவர்கள் அனைவர் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான்:

"இந்த தூதர் (அதாவது ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனக்கு இறக்கப்பட்டதில் நம்பிக்கை கொண்டுள்ளார். (ஏனைய) நம்பிக்கையாளர்களும் (நம்பிக்கை கொண்டுள்ளனர்.) அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் மீதும், அவனது மலக்குகள் மீதும், அவனுடைய வேதங்கள் மீதும், அனைத்து இறைத்தூதர்களின் மீதும் நம்பிக்கை கொள்கின்றனர். மேலும் நாங்கள் அவனுடைய தூதர்களுள் எவருக்கிடையிலும் எவ்வித வேற்றுமையும் பாராட்டுவதில்லை (எனக் கூறுகின்றனர்)." திருக்குர்ஆன் 2:286
நாங்கள் அந்த இறைதூதர்கள் அனைவரையும் நேர்வழியின் ஒளிமிக்க மினாராவில் நிறைபெற்றிருப்பதாகக் காண்கிறோம். திருக்குர்ஆனின் இந்த பொன்னான போதனையை இன்று உலகில் கடைபிடிக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஏனெனில் இதிலேயே உலகத்தின் அமைதிக்கும், சமாதானத்திற்கும் உத்தரவாதம் இருக்கின்றது. இன்றைய காலத்தின் துர்பாக்கியம் என்னவென்றால், சிலர் தமது மார்க்கத்தில் ரிஷிகளையும், முனிகளையும், அவதாரங்களையும் இறைவன் புறமிருந்து வந்தவர்களாகக் கருதுகின்றனர். ஆனால் தமது மார்க்கதிற்கு வெளியிலிருந்து வந்த நபிமார்களை இறைவன் புறமிருந்து வந்தவர்களாக கருதுவதில்லை என்பது மட்டுமல்லாமல், அவர்களை பொய்யர்களாகக் கருதுகின்றனர். இன்றைய காலத்தில் பல்வேறுபட்ட மார்க்கத் தோற்றுநர்களை அவமதித்தல், ஒருவர் மற்றவரின் புனிதமான மார்க்க சான்றோர்களை கண்ணியமளிக்காமல் இருத்தல் ஆகியவை ஒரு சாதாரண விஷயமாகிக் கொண்டிருக்கிறது. சில நேரத்தில் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காட்டூன் உருவாக்கப்படுகின்றது. அன்னாருக்கு எதிராக அவமரியாதையான வார்த்தைகள் எழுதப்படுகின்றன. சில நேரத்தில் முக நூலில் (FaceBook - ல்) இந்து மார்க்கத்தின் தேவி, தேவதைகள், பெரியவர்கள் ஆகியோர்களுக்கு எதிரகாவும், சில நேரத்தில் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களுக்கு எதிராகவும், சில நேரத்தில் சீக்கிய குருமார்களுக்கு எதிராகவும் அவமரியாதையான சொற்களை அல்லது படங்களை வெளியிட்டு நாட்டின் சாந்தியையும் சமாதானத்தையும் கெடுக்க முயற்சி செய்யப்படுகின்றது. மேலும் காலம் செல்ல செல்ல இது கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் பொதுவான ஒரு விஷயமாக மாறிக் கொண்டிருக்கின்றது.
எச்சரிக்கை செய்பவர் எவரும் வராத எந்தவொரு சமுதாயமும் இல்லை (35:25) என்று திருக்குர்ஆன் கூறுவது போன்று, இந்த போதனையின் மீது எல்லா மார்க்கத்தைச் சார்ந்தவர்களும், முஸ்லிம்களின் அனைத்து பிரிவினர்களும் நம்பிக்கை கொண்டு விட்டால், அதன் விளைவாக இந்துக்களும், கிறித்தவர்களும்  ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது நம்பிக்கை கொள்வார்கள். அவ்வாறே முஸ்லிம்களும் ஸ்ரீ கிருஷ்ணரையும், ஸ்ரீ ராமரையும் இறைவனின் தூதர்களாக ஏற்றுக் கொள்வார்கள்.
எந்த நபிமார்களைப் பற்றிய குறிப்பு திருக்குர்ஆனில் இருக்கின்றதோ அவர்களை மட்டும்தான் நபிமார்களாக ஒப்புக் கொள்ள முடியும்; எவர்களைப் பற்றி திருகுர்ஆனில் இல்லையோ அவர்களை இறைதூதர்கள் என ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் இறைவனின் புறமிருந்து வந்தவர்கள் அல்ல என்ற சிந்தனை தற்போது துரதிஷ்டவசமாக சில முஸ்லிம்களிடம் உருவாகி விட்டது. ஆனால் திருக்குர்ஆனோ நாம் சிலரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறோம்; மேலும் சிலரைப் பற்றி நாம் குறிப்பிடவில்லை எனத் தெளிவாக கூறுகிறது. (40:79) பிறகு வேறு சில இடங்களில் அடிப்படையான முறையில் எல்லா நபிமார்களின் மீதும் ஈமான் கொள்ளுமாறு போதித்திருக்கின்றது.
திருக்குர்ஆனின் இந்த போதனையின் ஒளியிலேயே இக்கலாத்தில் அனுப்பப்பட்டுள்ள வாக்களிக்கப்பட்ட மஸீஹும், காலத்தின் மஹ்தியுமாகிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கூறினார்கள்:
"உலகத்தில் வந்த அனைத்து நபிமார்களையும் - அவர்கள் இந்தியாவில் வந்தவர்களாயினும், அல்லது பாரசீகத்தில் வந்தவர்களாயினும் அல்லது சீனாவில் அல்லது வேறு எந்த நாட்டிலாவது தோன்றியவர்களாயினும் அவர்கள் அனைவரையும் நாம் உண்மையாளர்களாக கருத வேண்டும். இந்த கொள்கை மிகவும் அன்பிற்குரியதும், அமைதியை வழங்கக்கூடியதும், சமாதானத்திற்கு அடித்தளம் இடுகின்றது, நல்லொழுக்க நிலைமைகளுக்கு உதவி அளிக்கக்கூடியதும் ஆகும். இறைவன் கோடிக்கணக்கான உள்ளங்களில் அவர்களின் கண்ணியத்தையும், மகத்துவத்தையும் நிலைநாட்டி விட்டான். மேலும் அவர்களின் மார்க்கத்தின் வேரை நிலைநாட்டி விட்டான். மேலும் பல நூற்றாண்டுகளாக அந்த மார்க்கம் நிலைபெற்று வருகின்றது. இந்த கொள்கையையே திருக்குர்ஆன் நமக்கு கற்றுத் தந்துள்ளது. இந்த கொள்கையின் அடிப்படையில் இந்த இலக்கணத்தின் கீழ் வருகின்ற ஒவ்வொரு மார்க்கத் தோற்றுநர்களை அவர்கள் இந்துக்கள் அல்லது பாரசீகர்கள் அல்லது சீனர்கள் அல்லது யூதர்களின் மார்க்க தோற்றுநர்களாக இருந்தாலும் அவர்களை நாம் கண்ணியத்துடன் பார்க்கின்றோம்." (துஹ்ஃபா கய்ஸரிய்யா பக்கம் 7)
http://www.alislam.org/tamil/books/pdf/Samaadhaana-Thoodhu.pdf
வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் மார்க்க தோற்றுநர்களை கன்னியப்படுத்துவதற்காகவும், கவுரவிப்பதற்காகவும் இந்தியாவில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும் தனது மரணத்திற்கு சில நாட்களுக்கு முன் 1908 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு சொற்பொழிவை எழுதினார்கள். அது அவர்களின் மரணத்திற்குப் பிறகு 21, ஜூன் 1908 ஆம் ஆண்டு லாஹூரில், பஞ்சாப் சீஃப் கோர்ட் ஜட்ஜ் ஆகிய மிஸ்டர் ராயே பஹாதுர் பர்தவ்ல் சந்தர் சாஹிப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஒரு மாபெரும் மாநாட்டில் படித்துக் காட்டப்பட்டது. பின்னர் அது "சமாதானத் தூது" என்ற பெயரில் வெளியானது. இதுவரை உலகின் பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ள ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் கருத்துச் செறிவுள்ள அந்த சொற்பொழிவில் ஓரிடத்தில் அன்னார் கூறுகிறார்கள்:
"அன்பிற்குரியவர்களே! பல்வேறு நபிமார்களையும், தூதர்களையும் கண்ணியக் குறைவாக நினைவு கூறுவதும், அவர்களை தூற்றுவதும் எப்படிப்பட்ட விஷம் என்றால், இது கடைசியில் உடலை மட்டுமல்ல; மாறாக, ஆன்மாவையும் அழித்து உலகம், மார்க்கம் ஆகிய இரண்டையும் நாசமாக்கி விடுகிறது என்பதை பழமையான அனுபவமும், மீண்டும் மீண்டும் வந்த சோதனையும் நிரூபித்திருக்கிறது. எந்த நாட்டின் குடிமக்கள், ஒருவர் மற்றவரின் மார்க்க வழிகாட்டியை குறைகூறுவதிலும், அந்தஸ்தை குறைப்பதிலும் ஈடுபட்டிருக்கிறார்களோ அந்த நாடு அமைதியான முறையில் வாழ்க்கை நடத்த முடியாது. மேலும் எந்த சமுதாயங்களில் ஒரு சமுதாயம் அல்லது இரு சமுதாயமும் ஒன்று சேர்ந்து இன்னொரு சமுதயாத்தின் நபியை, ரிஷியை அல்லது அவதார புருஷர்களை தீமையுடன் அல்லது தீய சொற்களுடன் நினைவு கூறுகிறார்களோ அந்த சமுதாயங்களிடத்தில் உண்மையான ஒற்றுமை ஒருபோதும் ஏற்பட முடியாது. தனது நபியை அல்லது தனது மார்க்க தோற்றுநரை அவமதிப்பதை கேட்டு எவருக்கு ஆவேசம் வராமல் இருக்கும்?......உண்மையில் தூய்மை எனக் கூற வேண்டிய உள்ளத்தின் அந்த தூய்மை என்பது (முஸ்லிம்களாகிய) நீங்கள் வேதத்தையும், வேதத்தின் ரிஷிகளையும் உண்மையான உள்ளத்துடன் இறைவன் புறமிருந்துள்ளவர்களாக ஏற்றுக் கொள்ளும் போது தான் ஏற்படும். அவ்வாறே இந்துக்களும் தமது கருமித்தனத்தை நீக்கிவிட்டு நமது நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்தை ஏற்றுக் கொள்ளும் போது தான் (உள்ளத்தின் தூய்மை) ஏற்பட முடியும். நினைவிற் கொள்ளுங்கள்; நன்றாக நினைவிற் கொள்ளுங்கள்; உங்களுக்கும் இந்து சகோதரர்களுக்கும் மத்தியில் உண்மையான சமாதானத்தை ஏற்படுத்தக்கூடியது இந்த ஒரு கோட்பாடு மட்டுமேயாகும். இதுவே அழுக்குகளை நீக்கும் தண்ணீராகும்." (சமாதானத் தூது பக்கம் 14-20)
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் தோற்றுநர் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்களின் இந்த மகத்தான சொற்பொழிவை நாட்டின் அறிஞர்கள் கேட்ட போது அப்போதைய பத்திரிகைகள் அந்த கட்டுரையை பாராட்டியவாறு எழுதியவற்றுள் சில முன்மாதிரிகளை எடுத்து வைக்கின்றோம்:
மத்ராஸ் ஹிந்து பேட்ரேட் பத்திரிகை இவ்வாறு எழுதியது:
"காதியானைச் சேர்ந்த அந்த பெரியவரின் அந்த கடைசி சாமாதான தூதின் மூலமாக வெளிப்படும் அந்த மகத்தான ஆற்றலும், மிக உயர்ந்த அனுதாபமும் நிச்சயமாக அவரை ஒரு தனிச்சிறப்பான வித்தியாசத்துடன் ஒரு மகத்தான மனிதராக நிரூபித்து காட்டுகிறது......அப்படிப்பட்ட மகத்தான மனிதரிடமிருந்து எழுந்த அத்தகைய கோரிக்கை வீணாகி விடக்கூடாது. திட்டமிட்ட அந்த சமாதானத்தை செயல்படுத்த முயற்சி செய்வது இந்திய நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரின் நோக்கமாக இருக்க வேண்டும்." (தாரீகே அஹ்மதிய்யத் தொகுதி 2 பக்கம் 536)
அவ்வாறே ஃபிரண்டியர் மெயில் என்ற பத்திரிகை தமது 22, டிசம்பர் 1948 -  இன் வெளியீட்டில் டேராடூனைச் சேர்ந்த பிர்ஹம்தத் என்பவரின் கூற்றை இவ்வாறு வெளியிட்டுள்ளது:
"40 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது மகாத்மா காந்தி இந்தியாவின் அரசியல் வானில் இன்னும் உதிக்காத அந்த காலத்தில் (ஹஸ்ரத்) மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் 1891 -  ஆம் ஆண்டு மஸீஹ் என்ற வாதம் புரிந்த தனது திட்டங்களை சமாதானத் தூது என்ற நூல் வடிவில் வெளிப்படுத்தினார். அவற்றின்படி செயல்படுவதால் நாட்டின் பல்வேறு சமுதாயங்களுக்கு மத்தியில் ஒற்றுமையும், ஒருமைப்பாடும், அன்பும், ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் தன்மையும் உருவாகி இருக்கும். மக்களிடம் நல்லிணக்கம், சகோதரத்துவம், அன்பு எனும் ஆன்மா உருவாக வேண்டும் என்ற ஆசை அவரிடம் அதிகமாக காணப்பட்டது. சந்தேகமின்றி அன்னாரின் தனித்தன்மை பாராட்டத்தக்கதும், மதிக்கத்தக்கதுமாக இருந்தது. அன்னாரின் பார்வை தூரத்திலுள்ள எதிர்காலத்தையும் - அது அடர்த்தியான திரைக்குள் இருந்த போதிலும் கண்டது. மேலும் சரியான பாதையின் பக்கம் வழிகாட்டியது." (தாரீகே அஹ்மதிய்யத் தொகுதி 2 பக்கம் 536)
http://www.alislam.org/library/books/World-Crisis-and-Pathway-to-Peace.pdf
ஒவ்வொரு மார்க்கத்தைச் சேர்ந்த தலைவர்களும் ஒருவர் மற்றவரின் மார்க்கத்தின் குறைகளையும், தீமைகளையும் எடுத்துரைப்பதற்கு பதிலாக தத்தமது சொற்பொழிவுகளிலும், எழுத்துகளிலும், தத்தமது மார்க்கத்தின் மேன்மைகளை எடுத்துரைக்க வேண்டும் என்ற போதனையையும் வாக்களிக்கப்பட்ட மஸீஹும், மஹ்தியுமாக தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் வழங்கியுள்ளார்கள். மேலும் இந்த நோக்கத்திற்காக அஹ்மதிய்யா ஜமாஅத்தின் இரண்டாவது கலீஃபா ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மது (ரலி) அவர்கள் 1928 ஆம் ஆண்டு சர்வ சமய தோற்றுநர்களின் மாநாட்டை துவக்கினார்கள். இதன்படி, 1928 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் உலகளாவிய அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் முழு உலகிலும் ஒவ்வோர் இடத்திலும் மார்க்க தோற்றுநர்களை கண்ணியப்படுத்தும் வகையில் சர்வ சமய தோற்றுநர்களின் மாநாட்டை நடத்தி வருகின்றது. அதில் ஒவ்வொரு மார்க்கத்தைச் சேர்ந்த மார்க்க பெரியார்கள் தத்தமது மார்க்கத்தின் தோற்றுநர்கள் மற்றும் மார்க்கத் தலைவர்களின் தூய வாழ்க்கையையும், போதனைகளையும் எடுத்துரைக்கின்றனர். ஆக, ஒரே மேடையில் பல விதமான பூக்களைக் கொண்ட பூங்கொத்துகள் அலங்கரிக்கப்படுகின்றன. மேலும் தற்போது அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் தற்போதைய கலீஃபா ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மது (அய்யதஹுல்லாஹுத் தஆலா பினஸ்ரிஹில் அஸீஸ்) அவர்கள் திருக்குர்ஆனின் இந்த பொன்னான போதனைகளை ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றின் உயர் மாளிகைகளிலும் எடுத்துரைக்கும் தொடரை ஆரம்பித்துள்ளார்கள். ஹுஸூர் அவர்களின் இந்த விலைமதிக்கத்தக்க சிந்தனைகள் World Crisis and Pathway to Peace (உலக நெருக்கடியும் அமைதிக்கான வழியும்) என்ற பெயரில் நூல் வடிவில் வெளிவந்துள்ளது. அதன் மூலம் ஒவ்வொருவரும் இதனை தெரிந்து கொள்ளலாம். அதனைப் படிப்பதும் அதன்படி செயல்படுவதும் உலக அமைதியை நிலைநாட்டுவதற்கு மிகவும் அவசியமானதாகும்.
நமது நாடு அமைதி, சமாதானத்தின் இருப்பிடமாக மாறுவதற்கும் உண்மையான மகிழ்ச்சி கிடைப்பதற்காகவும் நாம் அனைவரும் ஒருவர் மற்றவரின் மார்க்க பெரியார்களை கண்ணியப்படுத்துபவர்களாக இறைவன் நம்மை ஆக்குவானாக. ஆமீன்.
(அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் இந்தியா வெயீட்ட லீஃப் லெட்டிலிருந்து எடுக்கப்பட்டது)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.