நமது கிறிஸ்தவ சகோதரர்களில் சிலர் இஸ்லாமிய மார்க்கத்தை குறித்தும் அல்லாஹ் மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் குறித்தும் கடந்த பல வருடங்களாக பல்வேறு ஆட்சேபனைகளை செய்து வருகின்றனர். ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தமது காலத்தில் தாம் சேகரித்த கிறிஸ்தவர்களின் ஆட்சேபனையைக் குறித்து கூறும்போது அது சுமார் 3000 ஆட்சேபனைகள் இருக்கும் என்று கூறுகின்றார்கள். இப்படி பல காலங்களில் குறிப்பாக ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் வெளிப்பட்ட காலத்தில் எப்போதும் இல்லாத அளவில் இஸ்லாத்தின் மீதும், அல்லாஹ் மற்றும் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்கள் மீதும் கண்மூடித்தனமாக ஆட்சேபனைகளை செய்து வந்தனர். இப்போதும் செய்து வருகின்றனர்.
தற்போது ஒரு சில வருடங்களாக பெயர் தாங்கிய இஸ்லாமிய அறிஞர்கள் கிறிஸ்தவர்கள் மீதும் அவர்கள் நம்பும் இறைவன் மீதும் அநாகரீகமான முறையில் வைத்த பல்வேறு ஆட்சேபனைகளைக் கண்டு, கிறிஸ்தவ சகோதரர் வெங்கடேசன் என்பவர் தமது கட்டுரை வாயிலாகவும், YouTube வாயிலாகவும் இஸ்லாத்தின் மீதும் அல்லாஹ் மற்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் பல்வேறு அநாகரீகமான ஆட்சேபனைகளை எடுத்து வைத்துள்ளார். அவ்வப்போது எடுத்து வைத்தும் வருகிறார். இந்த வரிசையில் நாம் கண்ட ஓர் ஆட்சேபனை நாம் நினைத்தாலும் சுவர்க்கம் செல்ல முடியாது காரணம் அல்லாஹ் மன்னிப்பவன் அல்லன். ஃபிரவ்ன் இறுதி நேரத்தில் மனம் திருந்தி மன்னிப்பு கேட்ட போது அல்லாஹ் மன்னிக்கவில்லையாம். ஆனால் இயேசு தம்மோடு அறையப்பட்டிருந்த திருடர்களின் பாவங்களை மன்னித்து "மன்னிப்பவர்" என்ற குணத்தில் அல்லாஹ்வை விட உயர்ந்து ஒப்பற்றவராக விளங்கினாராம். மேன்மேலும் மன்னிக்கக் கூடியவன்தான் இறைவன். ஆனால் அல்லாஹ் அப்படி இல்லையே என்று கூறி, அவர் மேன்மேலும் மன்னிக்கக் கூடிய, மனிதனை அதிகம் நேசிக்கக் கூடிய இறைவனாகிய அல்லாஹ்வின் மீது இட்டு கட்டி ஆட்சேபனையை வைக்கிறார்.
இதற்கு பதில் வழங்கும் முன், முதலில் அவர் கூறும் இறைவனாகிய இயேசு அப்படிபட்ட மன்னிப்பின் குணத்தை தன்னகத்தே கொண்டிருந்தாரா? அதில் ஒப்பற்றவராக விளங்கினாரா? என்பதை நாம் பார்க்கலாம். பைபிளில் மத்தேயு அதிகாரம் 10 வசனம் 14,15 இல் இவ்வாறு வருகிறது:
"உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.15 தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப்பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
இந்த வசனத்தில் மூலம் கிறிஸ்தவர்களின் கடவுள் இயேசு தமது சீடர்களை நோக்கி கூறுகிறார்: "நீங்கள் இன்னென்ன இடத்துக்கு சென்று பிரசங்கம் செய்யுங்கள். எந்த ஊர் கேட்கவில்லையோ அங்கிருந்து சென்று விடுங்கள். அந்த நகருக்கு கிடைக்கும் தண்டனை கடுமையாக இருக்கும் என்று நான் உறுதியாக சொல்கிறேன் என்று கூறுகின்ற வாசகத்தை நாம் இந்த வசனத்தில் கவனிக்கத் தக்கதாகும்.
அன்பான கிறிஸ்தவ சகோதரர்களே! இயேசு, அல்லாஹ்வை விட மன்னிப்பில் ஒப்பற்றவர். அவர் தப்பு செய்தவரையும் மன்னிப்பவர், அன்பு காட்டுபவர், நேசிப்பவர் என்றெல்லாம் பிரசங்கங்கள் செய்கின்றீர்களே, அப்போ, மத்தேயு அதிகாரம் 10 வசனம் 15 கூறும் வாசகத்தில் ஒரு நகரமே அழிந்து போகும் என்று இயேசு கூறுவதாக பதிவு செய்யப்பட்டுள்ளதே. அங்கு உங்களது கர்த்தரின் ஒப்பற்ற மன்னிப்பின் குணம் எங்கு போனது?
ஆனால் இஸ்லாமிய வரலாற்றில் தாயிஃப் நகரச் சம்பவத்தை தாங்கள் கேட்டிருப்பீர்கள் என நாம் நினைக்கிறோம். அந்த நகரத்தில் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் சத்திய செய்தியை எடுத்து கூறிய போது அன்பும் பாசம் நிறைந்த, மக்கள் மீது அதிக கருணை கொண்டிருந்த எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது கல்லெறிந்து பாதம் இரத்தத்தினால் நினையும் அளவுக்கு அடித்து விரட்டியடித்தார்கள். அப்போது அந்த நகர மக்கள் மீது கோபம் கொண்ட இறைவன் நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனைக்கிணங்க அந்த நகரத்தை மன்னித்தான். இப்படிப்பட்ட மன்னிப்பின் குணத்தை கூட உங்களின் கடவுள் இயேசுவிடம் காண முடியவில்லையே. சிந்திக்க வேண்டும்!
அடுத்து பைபிளில் மாற்கு அதிகாரம் 7 வசனம் 24 இல் இவ்வாறு வருகிறது:
“பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல”
இந்த வசனத்திலிருந்து நீங்கள் கடவுள் என்று நினைக்கும் இயேசு உலகத்திற்கு இரட்சிப்பவராக வந்தவர் அனைவரையும் அதிகம் நேசித்து மன்னிப்பவர் என்றால், பிறகு ஏன் அவர்களிடம் மிகவும் பசியோடு வந்த ஒரு பெண்ணுக்கு உண்ண ஒரு துண்டு உணவு கூட கொடுக்க மறுக்கிறார்? மாறாக அவர் இதற்கு பதிலாக பசியோடு வந்த அந்த பெண்ணை நோக்கி என்ன கூறுகிறார், "பிள்ளைகளுக்கு உரிய உணவை நாய்க் குட்டிகளுக்கு போடுவது முறையல்ல" என்கிறாரே! இதுதான் உங்கள் கடவுள் இயேசு அந்த பெண்மீது காட்டும் கருணையா? நேசமா? இயேசுவே மற்றொரு வசனத்தில் "உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை" (மத்தேயு 22:39) என்று கூறிவிட்டு ஒரு பெண்ணுக்கு உணவு கொடுக்கும் விஷயத்தில் தாமே தமது கட்டளைக்கு மாறு செய்கிறாரே! இதுதான் உங்கள் கடவுளின் அன்பு காட்டும் வழிமுறையா? அல்லது ஒப்பற்ற மன்னிப்பின் குணத்தை கொண்ட கருணையாளரா!?
எனவே நாம் மற்றொருவரை தூற்றி பேசுவதற்கு முன்பாக தமது முதுகில் ஏதும் அழுக்கு இல்லையே என்பதை அவதானித்து பேச வேண்டும். உங்கள் கடவுள் விஷயத்தில் இப்படிப்பட்ட முரண்பாடான, அன்பற்ற ஒரு குணம் இருக்கும் நிலையில் மற்றவர்களின் கடவுளை குறித்து அறியாமல் பேசலாமா!? நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதை நான் இங்கு கிறிஸ்தவ சகோதரர்களுக்கு கூறிக் கொள்கிறேன்.
அடுத்து அல்லாஹ்வை குறிப்பிட்டு சகோ வெங்கடேசன் அவர்கள் கூறிய ஆட்சேபனைக்கு நாம் கீழே பதில் தருகிறோம்.
அவர் என்ன கூறுகிறார், அல்லாஹ் ஒப்பற்ற மன்னிப்பின் குணத்தை கொண்டவன் அல்லன். அவன் ஒப்பற்ற குணத்தை கொண்டிருந்தால் பிறகு ஏன் இறுதி நேரத்தில் ஃபிர்அவ்ன் மூழ்கடிக்கும் சமயத்தில் இறைவனே என்னை மன்னித்து விடு என்று சொன்னபோது ஏன் மன்னிக்காது தண்டித்தார்? ஆனால் அதே சமயம் இயேசு சிலுவையில் இருக்கும்போது தமக்கு அருகாமையில் இருந்த திருடனை மன்னித்து விட்டார். ஆனால் உங்கள் இறைவன் அல்லாஹ்வோ ஃபிர்அவ்னை ‘நீ என்ன கடைசி நேரத்தில் மன்னிப்பு கேட்கிறாய் உன்னை மன்னிக்க முடியாது. நீ செத்து போ’ என்று அல்லாஹ் சொன்னதாக சொல்லி இப்படிப்படிபட்ட இறைவன் எப்படி ஒரு ஒப்பற்ற மன்னிப்பவனாக ரஹ்மானாக ரஹீமாக இருக்க முடியும்? என்று ஆட்சேபனை செய்கிறார்.
முதலில் நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், இயேசுவுக்கு அருகில் அறையப்பட்டிருந்த திருடனும், ஃபிர்அவ்னும் ஒன்றா? என்பதை சிந்திக்க வேண்டும். திருட்டு என்பது அவ்வளவு பெரிய குற்றமல்ல. மன்னிக்கமுடியாத குற்றமல்ல. ஆனால் ஃபிர்அவ்ன் செய்த காரியமோ மிகக் கொடுமையான, வஞ்சகத்தனமான, மறுதலிக்கிற ஒரு குணத்தைக் கொண்டதாக இருந்தது. அப்படிப்பட்டவனைக் கூட இறைவன் பல முறை மற்ற தண்டனைகளை அனுப்பி அவன் மனம் திருந்த வாய்ப்பளிக்கிறான். இதை குர்ஆனும் பதிவு செய்துள்ளது. பைபிளிலும் இச்சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அவனுக்கும் அவனைச் சார்ந்த மக்களுக்கும் அல்லாஹ் தெளிவான அடையாளமாக புயல், வெட்டுக்கிளிகள், பேன்கள், தவளைகள் மற்றும் இரத்தத்தைக் கொண்டு சோதித்தோம் ஆனாலும் அவர்கள் அகங்காரம் கொண்டவர்களாக இருந்தனர் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:
"அப்போது நாம் அவர்களிடம் தெளிவான அடையாளங்களாகப் புயல், வெட்டுக்கிளிகள், பேன்கள், தவளைகள், இரத்தம் ஆகியவற்றை அனுப்பினோம். ஆனால் அவர்கள் அகங்காரம் கொண்டனர். மேலும் அவர்கள் குற்றமிழைக்கும் மக்களாய் இருந்தனர்." (7:134)
இப்படிப்பட்ட தண்டனையை அறிந்த ஃபிர்அவ்ன் மூஸாவை கண்டு கூறினான்:
அவர்களுக்குத் தண்டனை இறங்கிய போதெல்லாம் அவர்கள், மூஸாவே! உமது இறைவன் உம்மிடம் அளித்த வாக்குறுதிக்கேற்ப நீர் அவனை வேண்டுவீராக. நீர் எங்களை விட்டுத் தண்டனையை அகற்றிவிட்டால் நிச்சயமாக நாங்கள் உம்மிடம் நம்பிக்கை கொள்வோம். மேலும் நிச்சயமாக இஸ்ராயீலின் மக்களை உம்முடன் அனுப்பி வைப்போம் என்று கூறினர். (7:135)
இப்படி வாக்கு கொடுத்தவன் திருந்தினானா? இல்லை. அந்த தண்டனை ஒவ்வொன்றும் அகன்ற போதெல்லாம் தாம் கொடுத்த வாக்கை அவன் மீறினான். இச்சம்பவத்தை பைபிளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. (யாத்திரகாமம் 8 ஆம் அதிகாரம் முதல் 14 ஆம் அதிகாரம் வரை)
இவ்வசனங்களில் ஃபிர்அவ்ன் என்ற பார்வோனின் மறுதலிப்பு மற்றும் இறுமாப்பையும், இறுதியாக கர்த்தர் அவனுக்கும் அவனது படை வீரர்களுக்கும் கொடுத்த அழிவையும் படம் பிடித்து காட்டுகிறது.
இப்படி இவர்கள் நம்பும் பழைய ஏற்பாட்டில் இவர்கள் கர்த்தர் என நம்பும் இயேசு பார்வோனை கடலில் மூழ்கச் செய்து அழித்தார் என்று வருகிறது. ஆட்சேபனை செய்யும் கிறிஸ்தவ சகோதரர் இவ்விடத்தை கவனிக்கவில்லை போலும்! இங்கு தமது கர்த்தர் பார்வோனை மன்னிக்காமல் தண்டனை வழங்கினாரே என்பதை சிந்திக்காது அல்லாஹ்வின் மீது ஆட்சேபனை செய்ய கிளம்பி இருக்கிறார் என்பதை பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது.
அல்லாஹ் ஃபிர்அவ்னை மன்னிக்காமல் தண்டித்துள்ளான் என்றால் இவன் திருந்துபவன் இல்லை என்பதை அறிந்து வைத்துள்ளான். இதனை திருக்குர்ஆன் 7:134 வது வசனம் பறைசாற்றுகிறது. அதுபோல் பைபிளிலும் மூஸா என்ற மோசே கூறுவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, "ஆகிலும் நீரும் உம்முடைய ஊழியக்காரரும் இன்னும் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படமாட்டீர்கள் என்பதை அறிவேன் என்றான். (யாத்திராகமம் 9:30)
இதுதான் உண்மை. இதனை அந்த உண்மையான இறைவன் நன்கு அறிந்து வைத்திருந்தான். ஆகவேதான் அவனுக்கு பல கேடுகளை, காலக்கெடுவை கொடுத்து வைத்திருந்தான். காரணம் இதன் மூலம் மற்றவர்கள் இந்த அடையாளங்களைக் கண்டு நேர்வழிக்கு வருவர் என்பதை அறிந்திருந்து இறைவன் அவனை விட்டு வைத்து பல்வேறு அடையாளங்களை அவன்மூலம் வெளிப்படுத்தினான். இந்த அடையாளங்கள் மூலம் பலர் திருந்தினர். பலர் திருந்தவில்லை. அதில் ஒருவன்தான் அகம்பாவம் கொண்ட பார்வோன் என்ற ஃபிர்அவ்ன் ஆவான்.
ஆனாலும் திருக்குர்ஆன் அடிப்படையில் அல்லாஹ் ஃபிர்அவ்னின் ஆன்மாவை மன்னிக்கவில்லை என்றாலும் அவனது உடலை மன்னித்தான். திருக்குர்ஆன் இதனை இவ்வாறு பறைசாற்றுகிறது. அதாவது,
“நாம் இஸ்ராயீலின் மக்களைக் கடலைக் கடக்க வைத்தோம். ஃபிர்அவ்னும் அவனுடைய படைகளும், கிளர்ச்சியாளர்களாயும், வரம்பு மீறுபவர்களாயும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். மூழ்கிவிடும் ஆபத்து அவனுக்கு(ம் அவனுடைய படைகளுக்கும்) நேரிட்டபோது அவன் கூறினான்: இஸ்ராயீலின் மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்ற அவனையன்றி வேறெதுவும் வணக்கதிற்குரியதல்லவென்று நான் நம்பிக்கை கொள்கிறேன். நான் கட்டுப்பட்டு நடப்பவர்களைச் சேர்ந்தவர்களுள் ஒருவனாக இருக்கின்றேன்.
(அதற்கு நாம் கூறினோம்:) நீ முன்னர் கட்டுப்படாதவனாய் இருந்திருந்தும், குழப்பம் விளைவிப்போரில் ஒருவனாய் இருந்தும், இப்பொழுதுதானா (நம்பிக்கை கொள்கிறாய்)?
எனவே உனக்குப் பிறகு வரப்போகிறவர்களுக்கு, நீ ஓர் அடையாளமாக இருப்பதற்காக இப்பொழுது நாம் உன்னை உன்னுடைய உடலளவில் காப்பாற்றுகிறோம். மேலும் நிச்சயமாக மக்களுள் பெரும்பாலார் நம்முடைய அடையாளங்களைப் பற்றி கவனமற்றவர்களாக இருக்கின்றனர். (10:91-93)
எனவே இந்த அடிப்படையில் இறைவன் அவனை உடலளவில் பாதுகாத்தான். காரணம் அவனது அந்த உடலைக் கண்டு அவனது செயல் மற்றும் அவனுக்கு கிடைத்த தண்டனையை அறிந்து தமது நிலையை திருத்திக் கொள்ள வேண்டும். பார்வோனின் உடல் காப்பாற்றப்படும் விஷயத்தைக் குறித்து வேறு எந்த வேதமும் பேசவில்லை. பைபிள் உட்பட என்பது கவனிக்கதக்கது.
திருக்குர்ஆனின் இந்த வசனத்திற்கு (10:93) விளக்கம் அளித்தவாறு அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் இரண்டாவது கலீஃபா ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மது (ரலி) அவர்கள் தமது திருக்குர்ஆன் விளக்கவுரையில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்கள். அதாவது;
“இந்த வசனத்திலிருந்து இதுவும் தெரிய வருகிறது. அதாவது, நம்பிக்கையாளருக்கு ஈமான் விஷயத்தில் விரைவு காட்ட வேண்டும். எப்போதெல்லாம் நன்மையைக் குறித்து திட்டம் தீட்டப்படுகிறதோ அப்போது உடனே விரைந்து அதனை செயல்படுத்த வேண்டும். இரண்டாவது இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால், அல்லாஹ் தஆலா சின்ன சின்ன காரியங்களைக் கூட வீணாக்கி விடுவதில்லை. இப்போது பாருங்கள், ஃபிர்அவ்ன் மரணம் சமயத்தில் ஈமான் கொள்கிறான் என்றால் அவனது உடலுக்கு சாந்தம் வழங்கப்படுகிறது. அவனது அந்த உடல் மக்களின் நேர்வழிக்கு காரணியாக இருக்கும்போது அவனுக்கு அவனது ஈமானின் ஏதேனும் பலன் கிடைக்கும் அல்லவா. ஹஸ்ரத் முஹைய்யுத்தீன் இப்னு அரபீ அவர்கள் இதன் காரணமாகவே ஃபிர்அவ்ன் நரகத்திற்கு செல்ல மாட்டான் என்ற கொள்கை கொண்டவராக இருந்திருந்தார். (தஃப்சீரே கபீர் பாகம் 3 பக்கம் 126)
ஆகவே இங்கும் ஃபிர்அவ்ன் விஷயத்தில் அல்லாஹ்வின் கருணை பண்பை காண்கிறோம். இப்னு அரபீ சொன்னது போல் அவனுக்கு மறுமையில் இறைவன் நினைத்தால் சுவர்க்கம் கிடைக்கக் கூட வாய்ப்புள்ளது. எனவே இறைவன் தாம் படைத்த மக்கள் மீது அளவற்ற அன்பையும் கருணையும் கொண்டுள்ள காரணத்தினால்தான், அவன் பல கள்ளருக்கும் பல்வேறு வாய்ப்புகளை அளித்து வருகிறான். இது அவனது ஒப்பற்ற அன்பை காட்டவில்லை என்றால் பிறகு வேறு எதை காட்டுகிறது.
அல்லாஹ் கூறுகிறான்:
நீர் கூறுவீராக: தமக்கே (பாவஞ் செய்து) அநீதி இழைத்துக் கொண்ட என் அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் கருணை பற்றி நம்பிக்கை இழந்து விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் எல்லா பாவங்களையும் மன்னிக்கிறான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.(39:54)
எவர் பாவமன்னிப்புக் கோரி, (தம்மைச்) சீர்திருத்தி (இறைவனின் கட்டளைகளை)த் தெளிவாக விளக்குகின்றனரோ, அத்தகையோரை நான் அருளுடன் கவனம் செலுத்துகிறேன். நான் (எனது அடியார்களின் பக்கம்) மிகுந்த கவனம் செலுத்துபவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவேன். (2:161)
மற்றொரு இடத்தில் இவ்வாறு கூறுகிறான்:
அநீதியிழைத்ததற்காக, அல்லாஹ் அவர்களுக்கு (திருந்த வாய்ப்பளிக்காமல்) தண்டனையளிப்பதாக இருந்தால், அவன் இதில் (பூமியில்) எந்த உயிரினத்தையும் விட்டு வைத்திருக்க மாட்டான். ஆனால் அவன் அவர்களுக்குக் குறிப்பிட்ட ஒரு காலம் வரை கெடு அளிக்கிறான். பிறகு அவர்களின் (தண்டனைக்குரிய) நேரம் வந்து விட்டால், அவர்களால் ஒரு நொடிப்பொழுது பிந்தவும் முடியாது. அதற்கு முந்தவும் முடியாது. (16:62)
எனவே அந்த கருணையாளன்,மனிதனுக்கு தனது கருணையை அளவுகோளை எடுத்துக் கூறி நீங்கள் பாவங்கள் செய்தாலும் தளர்ந்து கவலையடைய வேண்டாம் அவனது கருணை விசாலமானது. நீங்கள் பாவம் செய்தாலும் உளப்பூர்வமாக மன்னிப்பு கோரினால் அந்த ரஹீம் மற்றும் ரஹ்மானாகிய இறைவன் உங்கள் பக்கம் கருணையுடன் திரும்பி உங்கள் பாவங்களை மன்னிப்பான் என்று வாக்களிக்கிறான்.எனவே மனிதனின் மரணம் வரை அவன் தன்னை திருத்திக் கொள்வதற்கு பல்வேறு அவகாசங்களை வழங்குகிறான். ஆனால் அந்தோ அதில் பார்வோனைப் போல் அகம்பாவம் கொண்ட பலர் தமது சீர்கேட்டிலேயே தமது வாழ்வைக் கழித்து அழிந்து போகின்றனர்.
பைபிள் கூறுகிறது:
ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. (மத்தேயு 12:31)
ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார்.(மாற்கு 3:29)
எனவே அந்த உண்மையான இறைவனுக்கு, அவனின் குமாரருக்கு அதாவது அவனது நல்லடியார்களுக்கு எதிராக தூஷணம் செய்பவர்கள் மன்னிக்கப்படுவதில்லை. மாறாக அழிந்துபோவார்கள் என்று பைபிள் கூறுவதை நாம் பார்க்கிறோம்.
எனவே கர்த்தர் என்ற அந்த உண்மையான இறைவனாகிய அல்லாஹ் யாரையும் உடனே தண்டிப்பதில்லை. மாறாக தாம் படைத்த மனிதன் தமது நிலையை சீர்திருத்திக் கொள்ள பல்வேறு காலக்கெடுவை, அவகாசத்தை வழங்கி அவனுக்கு சீர்திருந்த வாய்ப்பளிக்கிறான். இப்படிப்பட்ட அல்லாஹ் எவ்வாறு ஒப்பற்ற அன்பில்லாதவனாக இருக்க முடியும்? அவனது கருணையும் அன்பும் என்றும் அவன் தமது படைப்பின் மேல் வைத்திருக்கிறான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
அடுத்து சகோ வெங்கடேசன் கூறுகிறார், அல்லாஹ் சிலரை நரகத்திற்காகவே படைத்துள்ளான் என்று ஆட்சேபிக்கிறார். அன்பான கிறிஸ்தவ சகோதரர்களே! பைபிளில் இவ்வாறு வருகிறது:
“எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.” (மத்தேயு 12:32)
மேலும் கூறுகிறது: “ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார்.(மாற்கு 3:29)
இது பைபிளின் போதனையாக இருக்கிறது. அதாவது ஆவிக்கு விரோதமாக பேசினால் அவனுக்கு இந்த உலகத்திலும் மன்னிப்பு கிடையாது. மறுமையிலும் மன்னிப்பு கிடையாது. மாறாக அவன் என்றென்றும் நரகத்தில் தள்ளப்படுவான், நித்திய ஆக்கினைக்கு உள்ளாகுவான் என்று கூறுகிறது. ஆனால் சகோதரர் வெங்கடேசன் அவர்களோ சிலரை அல்லாஹ் நரகத்திற்காகவே படைத்துள்ளான் என்று கூறி இறைவனின் கருணை மட்டும் அன்பு என்ற பண்பில் களங்கம் விளைவிக்க முயல்கிறார் என்பதை பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் இல்ஸாம் இவ்வாறு கூறுவதில்லை. மாறாக அப்படிபட்ட மனிதன் கூட மறுமையில் ஒரு நாள் மன்னிக்கப்பட்டு சுவர்க்கம் நுழைவான் என்று கூறுகிறது.
சகோதரர் வெங்கடேசன் வைத்த ஆட்சேபனை திருக்குர்ஆனின் அதிகாரம் 17 வசனம் 46,47 ஆகிய வசனத்தை வைத்து செய்யப்பட்டுள்ளது. அதில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
நீர் குர்ஆனை ஓதும் போது, நாம் உமக்கும், மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கும் இடையில் மறைமுகமான (தும்,பொதுவான பார்வைகளை விட்டும் மறைந்திருக்கக்கூடியதுமான) ஒரு திரையினை உண்டாக்கியுள்ளோம்.
அவர்களால் அ(ந்)த (உண்மையி) னைப் புரிந்து கொள்ள முடியாதிருப்பதற்காக நாம் அவர்களின் உள்ளங்களில் பல திரைகளையும், அவர்களின் காதுகளில் செவிட்டுத் தன்மையினையும் ஏற்படுத்தியுள்ளோம். நீர் குர்ஆனில் ஏகனாகிய உம்முடைய இறைவனை நினைவு கூர்ந்தால், அவர்கள் வெறுப்படைந்து தங்கள் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு சென்று விடுகின்றனர்.
என்று கூறுகிறான். மனிதர்களை நரகத்திற்காகவே படைத்திருக்கிறான் என்று இதில் அல்லாஹ் பொதுவாக எல்லா மனிதரகளையும் குறித்து கூறவில்லை.மாறாக தமது உள்ளத்தில் தாமே நிராகரிப்பின் முத்திரையை இட்டு கொண்ட இவர்கள் ஒருபோதும் தமது உள்ளத்தை தாமே திருத்தாத வரை நேர்வழி அடைய மாட்டார்கள். இப்படி பட்டவர்கள் நரகவாதிகளாக இருப்பர் என்பதை கூறுகிறான்.அல்லாஹ் ஓரிடத்தில் கூறுகிறான்:
எந்தச் சமுதாயத்தினரும் தங்கள் அகநிலையை மாற்றிக் கொள்ளாத வரை, அல்லாஹ் ஒருபோதும் அவர்களின் நிலையினை மாற்றுவதில்லை. (13:12)
எனவே எவர்கள் தம்மை சீர்திருத்திக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் அவர்களின் உள்ளத்தில் தாம் திருந்தி கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குகிறான்.ஆனால் சகோதரர் வெங்கடேசன் எடுத்து வைத்த வசனத்தில் கூறப்பட்ட நபர்கள் அவ்வாறானவர்கள் அல்ல மாறாக அவர்கள் தம்மை சீர்திருத்திக் கொள்ள சிறிதும் முயற்சியினை மேற்கொல்லாது இறுமாப்பு கொண்டவர்கள். அல்லாஹ் இந்த வசனத்தைத் தொடர்ந்து கூறுகிறான்:
அவர்கள் உம(து வார்த்தை) க்குச் செவிசாய்க்கும் போது, அவர்கள் எதற்காக செவியேற்கின்றனர் என்பதையும், அவர்கள் தமக்குள் மறைவாகப் பேசும் போது, 'ஏமாற்றத்திற்கு ஆளாகியிருக்கும் ஒருவரைத் தான் நீங்கள் பின்பற்றுகிறீர்கள்', என்று அந்த அநீதியிழைப்போர் கூறுவதையும் நாம் நன்கறிவோம்.
அவர்கள் உம்மைக் குறித்து எவ்வாறெல்லாம் கற்பனை செய்து கூறுகின்றனர் என்று பார்ப்பீராக. இதன் விளைவாக அவர்கள் வழி தவறிவிட்டனர். எனவே அவர்கள் நேர்வழியினை அடைய முடியாது. (17:48,49)
எனவே யார் நேர்வழி அடையமுடியாது என்பதை அல்லாஹ் சான்றிதழ் வழங்கிய பிறகு அவர்களை குறித்து இவ்வாறான மக்களைக் கொண்டு அல்லாஹ் நரகத்தை நிரப்புவான் என்று சொன்னால், அப்போ பைபிள் நேர்வழி அடையாதவர்கள் மற்றும் தூஷணம் செய்பவர்கள் எல்லாரும் சுவனம் செல்வார்கள் என்று கூறுகிறதா என்பதை கிறிஸ்தவ சகோதரர்கள் சிந்திக்க வேண்டும். அப்படி பைபிள் கூறியிருந்தால் பிறகு சகோதரர் வெங்கடேசன் வைத்த இந்த குற்றச்சாட்டு நியாயமானது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பைபிளே அவ்வாறு கூறாதிருக்கும்போது, நேர்வழி அடையாத தூஷணம் பண்ணும் மக்களை அல்லாஹ் நரகத்தை கொண்டு நிரப்புவான் என்று சொல்வதில் என்ன ஆச்சரியம் உள்ளது!?
ஆனால் அல்லாஹ் அப்பேற்பட்ட மக்களுக்கும் இவ்வுலகில் தம்மை சீர்திருத்திக் கொள்ள வாய்ப்பளிக்கிறான். இன்னும் சொல்லப்போனால் மறுமையில் கூட அப்பேற்பட்ட மக்களுக்கு தண்டனை அளித்த பிறகும் கூட தமது கருணை என்ற அருளினால் அவர்களுக்கும் சுவனம் செல்லும் பாக்கியத்தை அளிக்கிறான்.இப்பேற்பட்ட கருணை குணத்தை மன்னிப்பின் ஒப்பற்ற நிலையை பைபிள் சொல்லும் இயேசு என்ற கடவுள் மீது காண முடியாது. அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.
“உம் இறைவன் அருள்புரிந்தவர்களைத் தவிர, இதற்காகவே அவன் அவர்களைப் படைத்தான் . (கட்டுப்படாதவர்களான) ஜின்கள், மனிதர்கள் ஆகிய எல்லோரையும் கொண்டு நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன் என்ற உம்முடைய இறைவனின் வாக்கு கட்டாயம் நிறைவேறிவிடும். (11:120)
திருக்குர்ஆன் 11:120 இல், “உம் இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர இதற்காகவே அவன் அவர்களைப் படைத்தான். ஜின்கள், மனிதர்கள் ஆகிய எல்லோரையும் கொண்டு நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன் என்ற உம்முடைய இறைவனின் வாக்கு கட்டாயம் நிறைவேறி விடும் என்று வருகிறது இவ்வசனத்தில் இறைவன் அருள்புரிந்தவர்களைத் தவிர என்றும் இதற்காகவே அதாவது அருள்புரிவதற்காகவே அவன் அவர்களைப் படைத்தான் என்றும் வருகிறது.
எனவே படைப்பின் நோக்கம் அருள் புரிவதற்கு என்றால், அந்த அருள் எனும் குணம் நிரந்தர நரகிலிருந்து அவர்களைக் காப்பாற்றி விடும் அல்லாவா? நரகின் வாசல் ஏழு என்றும் சொர்க்கத்தின் வாசல் எட்டு என்றும் இஸ்லாம் கூறுகிறது. சொர்க்கத்தின் எட்டாவது வழியானது, இறைவனின் அருளாகும், அந்த அருள் சொர்க்கத்தையும் நரகத்தையும் சூழ்ந்துள்ளது. எனவே, இறைவன் இறுதியில் தன் அருளினால் நரகவாசிகள் எல்லாரையும் அதிலிருந்து வெளியேற்றி விடுவான் என்று மேலே குறிப்பிட்ட வசனம் மூலம் நாம் தெளிவடைய முடிகிறது.
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ் அன்பை, கருணையை நூறாகப் பங்கிட்டான். அதில் 99 பங்கைத் தம்மிடம் வைத்துக் கொண்டான். (மீதமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவுக்கு என்றால் மிதித்து விடுவோமோ? என்ற அச்சத்தால் குதிரை தனது குட்டியை விட்டுக் கால் குளம்பைத் தூக்கிக் கொள்கிறது. (புகாரி 6000)
உலகில் முதல் உயிரினம் முதல் இறுதி உயிரினம் வரை தன் குட்டியுடனும் பிறரிடமும் காட்டும் அன்பும் கருணையும் அல்லாஹ்வின் ஒரு பங்கு என்றால், மீதமுள்ள 99 பங்கு கருணை நம்மை நரகில் விட்டு வைக்குமா? நரகம் நிரந்தரம் என்றால் அவன் அளப்பரிய கருணையாளனா? என்று ஒரு கேள்வி நம்மில் எழக் கூடும். எனவே மறுமையில் இறை கருணை, மக்களை நரகிலிருந்து ஒரு நாள் வெளியேற்றிவிடும் என்று இந்த ஹதீஸ் மூலம் நாம் விளங்கி கொள்ள முடிகிறது.
திருக்குர்ஆனில் 17:9 இல் நிராகரிப்பவர்களுக்கு நரகத்தைச் சிறைக்கூடமாக நாம் ஆக்கியுள்ளோம் என்று கூறுகிறது.
وَجَعَلْنَا جَہَنَّمَ لِلْكٰفِرِیْنَ حَصِیْرًا
சிறைத் தண்டனை என்பது அவனவன் செய்த குற்றத்திற்கு ஏற்ப குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும். அது நிரந்தரம் அன்று. என்றாவது ஒரு நாள் அவன் அதிலிருந்து விடுதலையாகி விடுவான். என்பதை நம்மில் ஒவ்வொருவரும் அறிவர். இதனை அறியும் நமக்கு நாம் புரிந்து கொள்ளும் வகையில் "நரகம் நிரந்தரமன்று" என்பதை "சிறை சாலை" என்ற சொல் மூலம் நமக்கு விளக்குகிறான்.
என் தண்டனையை நான் விரும்பியவருக்கு (அதாவது தண்டனைக்குரியவருக்கு)க் கொடுக்கின்றேன். ஆனால் என் கருணை எல்லாவற்றையும் சூழ்ந்துள்ளது. (7:157)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகத்திற்கு ஒரு காலம் வரும். அன்று நரகில் யாரும் இருக்கமாட்டார்கள். அதன் (ஜன்னல்) கதவுகள் ஒன்றுக் கொன்று அடித்துக் கொள்ளும். (ஆதாரம்: இமாம் அஹ்மது பின் ஹம்பல்)
சொர்க்கவாசிகளில் இறுதியாக சொர்க்கத்தில் நுழைபவரும் நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவரும் யாரென்றால் தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதராவார்..... அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) (புகாரி, ஹதீஸ் எண் 7511)
சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் இடையே ஒருவர் மட்டுமே எஞ்சியிருப்பார். அவர் தாம் நரகவாசிகளிலேயே இறுதியாக சொர்க்கம் செல்பவராவார். அறிவிப்பாளர் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி ஹதீஸ் நம்பர்: 7382)
மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்கள் மற்றும் நபிமொழிகள் வாயிலாக நரகம் ஒரு நாள் காலியாகிவிடும் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது. எனவே அன்பான கிறிஸ்தவ நண்பர்களே சகோதரர் வெங்கடேசன் அவர்கள் சொல்வது போல் இஸ்லாமும் கிடையாது இஸ்லாத்தைத் தோற்றுவித்த அந்த அன்பும் பாசமும் நிறைந்த உண்மையான தேவன் அல்லாஹ்வும் கிடையாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவை நான் புரிந்த அளவுக்கு உங்கள் முன் வைக்க முயற்சி செய்துள்ளேன்.
அந்த உண்மையான தேவனாகிய அல்லாஹ் உங்களுக்கு உண்மையான நீத்திய ஜீவனை வழங்கும் உண்மையான வழியை காட்டித் தந்தருள்வானாக! ஆமீன்.
ஆக்கம்: இப்னு ரஹ்மத்
இன்னும் சகோதரர் வெங்கடேசன் அவர்கள் பல்வேறு ஆட்சபனைகளை தமது YouTube தளத்தில் போட்டுள்ளார். அதனை ஒவ்வொன்றாக இனி வரும் காலங்களில் பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்...!
சகோதரர் வெங்கடேசன் பேசிய வீடியோவின் லிங்கை இங்கு தருகிறேன். இதில் 4:30:28 மணி நேரத்திலிருந்து நீங்கள் கவனித்தால் நாம் மேலே குறிப்பிட்ட அவரின் ஆட்சேபனைய அதில் காணலாம்.
https://www.youtube.com/watch?v=4qAXknl8brs&list=PLvNP_5yG3HoZwLBFJJ_0QX1MAjPlcH_La&index=1&t=0s
சகோதரர் வெங்கடேசன் அவர்களுக்கு தாங்கள் அளித்த பதில் மிகவும் திருப்திகரமானது .வாழ்க்கையை இஸ்லாத்தின் மீது ஆட்சேபனை செய்வதிலேயே கழிக்கின்ற திரு வெங்கடேசன் அவர்களின் தொடர் ஆட்சேபனைகளுக்கு தொடர்ந்து பதில் எதிர்பார்க்கிறேன். நன்றி👍
பதிலளிநீக்கு